தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 1

குமரி ஆதவன்

23rd Jul 2018

A   A   A

"1983 - ஆம் ஆண்டு நான் குமாரபுரம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மழையும் தண்ணீரும் என்னிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. விடுமுறை நாட்களில் குளிப்பதற்காக ஆற்றுக்கோ குளத்திற்கோ சென்றால் மதிய உணவுக்குக் கூட நான் வீடு திருப்புவதில்லை. நண்பர்களோடு நீச்சலடித்து விளையாடி மகிழ்கிற உன்னத உணர்வில் யாருடைய ஞாபகமும் வருவதில்லை. வீட்டிலிருக்கிறவர்கள் தேடுவார்கள்; காணாவிட்டால் அச்சப்படுவார்கள் என்கிற எண்ணங்கள், வலிகள், கோப உணர்வுகள் அனைத்தும் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பிறகுதான் தெரிகிறது.

எனக்குக் கிடைத்த இயற்கையுடனான நெருக்கம் என் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. சுமார் இருபது ஆண்டுகளில் குமரி மாவட்டத்தின் இயற்கை சூறையாடப்பட்டு விட்டது. இதற்கு இருபது ஆண்டுகால தமிழக இந்திய அரசியலும் காரணம் தான்.

சுயநல மனிதர்களின் அளவுக்கு அதிகமான ஆசை கடவுளின் மாவட்டமான கன்னியாகுமரியை அரசியல்வாதிகளின் மாவட்டமாக மாற்றிவிட்டது. அதன் பயனாக மலைகள் மறைந்து விட்டன; காடுகளைக் காணவில்லை; ஆறு குளங்கள் அடுக்குமாடி வீடுகளாகவும் சாலைகளாகவும் மறுஅவதாரம் எடுத்து விட்டன. பச்சைப் பசேலென்று விரிந்து கிடந்த உணவுப் பயிர்கள் ரப்பர் மரங்களின் அகோரப் பசிக்கு பலியாகிப்போயின.

எங்கள் இளைஞர் கூட்டம் நீச்சலடித்த தட்டான் குளம், வள்ளியாறு இரண்டும் என்னுடைய மாணவப் பருவ காலத்திலேயே ஆக்கிரமிப்பு மன்னர்களால் மூன்று பக்கம் முதலிழந்து விட்டது. சிவதாணு பிள்ளை அவர்கள் மட்டும் குளம் நிரத்தி பூமி சேர்க்க ஆசைப்படாததால் இப்போது ஒரு அறுபது சென்ட் அளவுக்குக் குளம் கிடக்கிறது.

இந்தக் குளத்திலும் வரட்சி காலத்தில் தண்ணீர் வற்றும். ஆனால் எந்த நேரத்திலும் குளத்திற்குள் இருந்த ஊற்றில் நீர் வற்றாது. வரட்சியில் இந்த ஊற்றுதான் குடிப்பதற்கான தண்ணீருக்கும், குளிப்பதற்கும் பயன்பட்டு வந்தது.

ஒரு வரட்சியின் நாளில் நானும் எனது நண்பர்களும் இங்கு நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்தோம். சுமார் நூறு பேர் குளித்துவிட்டுப் போயிருப்பார்கள். ஆனாலும் எங்களுக்கு குளித்து முடிக்க மனமில்லை. ஆண்களும் பெண்களும் பேதமின்றி குளித்துவிட்டுப் போன காலத்தை நினைத்தால் ஆச்சரியமாகவும், அதே நேரம் அன்றைய பண்பாட்டு நிலையை எண்ணி பெருமையாகவும் இருக்கிறது. யாரையும் யாரும் ஆபாசமாகப் பார்க்கத் தெரியாத காலம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஆபாசங்கள் எல்லாம் கிராமங்களை முத்தமிடாத நேரம்.

பத்துமணிக்கு வந்த நாங்கள் மூன்று மணிக்கு குளித்துக் கொண்டும் குளிக்க வருகிற மற்றவர்களுக்கு தண்ணீர் இறைத்து உதவி செய்து கொண்டும் நிற்கிறோம். என்னுடைய அம்மா ஒரு கம்புக் குச்சியோடு என்னைத் தேடி வருகிறார்கள். நான் அம்மாவைக் கண்டதும் ஓடி தென்னை மரத்தின் பின்னால் ஒழிந்து கொண்டேன். அம்மா, ‘காலையில குளிக்க வந்த பயல இன்னும் காணல்ல. என்னக்கண்டதும் இங்க எங்கயாவதுதான் ஒழிச்சிருப்பான். பயலுக்கு வயிறு காயிறதும் தெரியாது; நேரம் போறதும் தெரியாது. தண்ணீல என்னத்தத்தான் கண்டானோ? இண்ணைக்கு வீட்டுக்கு வரட்டும். அவனுக்கு இருக்கு...’ என்றபடி போய்விட்டார்கள்.

அம்மாவின் முகம் மறைந்ததும் மீண்டும் குளத்திற்குள் இறங்கினேன். ஊற்று நீர் பாய்ந்து போகிற தண்ணீருக்குள் ஏதோ பளபளப்பாய்த் தெரிகிறது. குனித்து எடுத்துப்பார்க்கிறேன். அழகான ஒரு கம்மல். பவுனா? பித்தளையா? என்று உரசிப்பார்க்கிறேன், வெளுக்கவில்லை. ‘தங்கம்தான்!’ என்கிறான் என் உறவுக்கார அண்ணன் ஒருவன்.  

‘கம்மலக் கொண்டு போய் குமாரபுரத்துல இருக்கிற தட்டான் கிட்ட குடுத்து பைசா வாங்கி ஹோட்ல்ல போய் நல்லா தின்னுவோம் என்கிறான் என் உறவுக்காரன். நான் வேகமாக டவுசர் சட்டையைப் போட்டபடி கம்மலோடு விடு நோக்கி ஓடுகிறேன். கம்மல் தனக்கு கிடைக்காத கோபத்தில் என் உறவுக்கார அண்ணன் என்னை அவனிடமிருந்த ஒரு தேங்காயால் முதுகில் தாக்குகிறான். நான் சுருண்டு விழுகிறேன். விழுந்து கிடந்த என்னிடமிருந்து எப்படியாவது கம்மலை பறித்துவிட முயற்சிக்கிறான் அவன். நான் என் சட்டை பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு எழுந்து மீண்டும் ஓடுகிறேன். 

எங்களூர் புனித மிக்கேல் அதிதூதர் கோவில் வரைக்கும் விரட்டியவன் என்னோடு ஓட முடியாததால் நின்று விடுகிறான். சப்பதமிட்டு, ‘எனக்குப் பங்கு தரல்லண்ணா, உன்ன கொல்லாம விடமாட்டேன் என்கிறான். எல்லோரும் ஏதோ தின்பண்டமாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

நான் இரைக்க இரைக்க வீடு போய்ச் சேர்ந்ததும், வாசலில் நின்ற அம்மா, ‘குளிச்சு ஆச தீந்துதா?’ என்றார்கள். மெல்ல அம்மாவின் சேலையில்முகம் துடைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தேன்.  ஒரு பெருமூச்சு விட்டபடி, மெல்ல அம்மாவிடம் கம்மலை எடுத்து காண்பித்தேன்.

ஒரு நொடியில் அம்மாவின் முகம் மாறுகிறது. என்னுடைய வாழ் நாளில் அம்மா இவ்வளவு கோபத்தோடு முறைத்ததை நான் பார்த்ததே இல்லை. உச்ச குரலில், ‘எங்கிருந்து எடுத்துட்டு வந்த?’ என்று சப்தமிடுகிறார்கள்.

நான் திருடல்ல அம்மா. தட்டான் குளத்துல ஊற்று பக்கம் கிடந்தது. அதுதான் எடுத்துட்டு வந்தேன்.’ என்றேன்.

அங்க குளிச்சவங்க காதுலருந்து விழுந்திருக்கும். இது சின்ன பிள்ளைகளோட கம்மல்தான் போல இருக்கு. இத என் கையாலகூட தொட மாட்டேன். யாருக்கண்ணு கேட்டு குடுத்துட்டு வீட்டுக்கு வா. அதுக்குப் பொறவுதான் உனக்கு சாப்பாடு என்று என்னைப் பிடித்து வெளியே இறக்கி விட்டார்கள்.  

எனக்கு உறவுக்கார அண்ணன் பறித்து விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்; குளித்து விட்டுப்போன அத்தனை பேரில் யாருடையதென்று எப்படி கண்டறிவது என்ற குழப்பம் மறுபுறம். ஏதோ என் ஞான அறிவு குளிக்க வந்த ஒவ்வொரு வீடாகப் போய் கேட்கலாமே என்று எண்ணுகிறது.

ஒவ்வோரு வீடாகப் போய் கேட்கிறேன். ஒவ்வொருவரும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இது எங்களது இல்லையென்று திரும்பத் தந்து விடுகிறார்கள். எவ்வளவு வெள்ளந்தியாக அன்றைய மக்கள் இருந்திருக்கிறார்கள். இன்று பணக்காரனாக இருந்தால்கூட எங்களதுதான் என்று வாங்கி அபகரித்துவிடுவான்.

கடைசியாக ஆறுமணி வாக்கில் என்னுடன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தீபாவின் வீட்டிற்கு கம்மலோடு வருகிறேன். அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். ‘ஏன் அழுறா?’ என்றேன். அவள் அம்மா ஓடி வந்து, ‘அரப் பவனுக்க கம்மல எங்கயோ தொலச்சுட்டு வந்திருக்கிறா. அதான் அடி வாங்கிட்டு இருக்கிறா. இங்க எங்கும் தேடியாச்சு. கிடைக்கல்ல என்றார்கள்.

நான் சிரித்துக் கொண்டே, ‘தொலஞ்ச எடத்துல தேடாம, வீட்டுக்குள்ளயே தேடினா எப்படி கிடைக்கும்? குளிக்க நீங்க எல்லாரும் வந்தீங்க இல்லியா, அங்கதான் விழுந்து கெடந்துச்சி. தீபா அழாத, இந்தா உன்னோட கம்மல்..’ என்றபடி அவள் கையில் கொடுத்தேன்.

அவளும் அவள் அம்மா அப்பாவும் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. திடீரென்று அவள் அம்மா அறைக்குள் சென்று ஒரு பத்து ரூபாயை எடுத்து வந்து என் கையில் திணித்தார்கள். நான் அங்கேயே ரூபாயைப் போட்டுவிட்டு ஏதோ ஒரு நூறு கிலோ பாரம் என் தலையிலிருந்து இறங்கியதாகக் கருதிக் கொண்டேன். பசி வேறு குடலை தின்பது போல் தோன்றியது. அசுரவேகப் பாய்ச்சலில் வீடு வந்து சேர்ந்தேன்.

அம்மா மீண்டும் வாசலிலேயே என்னை மறித்து, ‘கம்மல் யாருடையது? குடுத்தாச்சா? குடுத்தா வீட்டுக்குள்ள வா. இல்லண்ணா வராத என்றார்கள். நான் கம்மல் கொடுத்துவிட்ட கதை முழுவதையும் அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. என்னை முத்தமிட்டபடி அம்மா சொன்னாள், ‘மக்களே! அடுத்தவங்க பொருளுக்கு ஒரு காலத்துலயும் ஆசைப்படக்கூடாது. அடுத்தவங்க பொருள் ஒரு ரூபா நம்மக்கிட்ட தப்பான முறையில வந்தா அது நூறு ரூபாயா அடிச்சிட்டுப் போயிரும். நாம உழைச்சு சாப்பிட்டாதான் அது ருசிக்கும் என்றார்.

எனக்காக மதியமே போட்டு வைத்திருந்த சோற்றில் ஒரு பிடியை நெத்திலி மீனோடு உருட்டி என் வாயில் தந்தார்கள். அந்த ஒரு கவளம் சோறும் இன்றைக்கும் சுவைக்கிறது; நான் நேர்மையாக வாழ வழிகாட்டிய என் தாயை ஒருபோதும் என் நெஞ்சம் மறப்பதில்லை.

(தொடரும் ...)

 

 



ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.