தொடர்புடைய கட்டுரை


ஒரு மரத்தின் உண்மை மதிப்பு

Dr. பா. சாம்ராஜ்

06th Jul 2019

A   A   A

என் ஓய்வறையின் மேல் ஆலமரம்போல் படர்ந்து விரிந்து வளர்ந்துள்ள நாவல் மரம் 46 வயது நிரம்பிய ஒரு மரமாகும். 1973 ஆம் ஆண்டு என் கையால் நட்டு பராமரித்ததால் தற்பொழுது பெரிய மரமாக ஏறக்குறைய 50 அடி உயரத்தில் வளர்ந்துள்ளது. ஓகிப்புயல் கடந்த நவம்பர் 30, 2017-ல் தாக்கியப்போதிலும் இம்மரத்திற்கும், இதனருகிலுள்ள கொடை கார்ஸ்-க்கும், எனது அலுவலகம் மற்றும் ஓய்வறைக்கும் எந்த கேடும் வராமல் நிமிர்ந்து உறுதியாக நின்று எங்களை காப்பாற்றியதை நினைத்துப் பார்க்கிறேன்.    

இம்மரத்திலிருந்து முக்கியமாக உணவு, பழங்கள், எரிபொருள், பசுந்தீவனம், பட்டை, உயிர்உரம் போன்றவைகள் கிடைக்கின்றன. மேலும், இம்மரம் எனக்கும் என்னை சுற்றி வசிக்கும் யாவருக்கும் புத்துணர்ச்சியையும், தூண்டுதலையும்  தந்து வழிநடத்துகிறதை நினைத்து இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த முதிர்ந்த வயதிலும் இந்த மரத்தின் நிழலில் எப்போதெல்லாம் இருந்து தியானிப்பேனோ, அப்போதெல்லாம் எனக்கு புத்துணர்ச்சியும், உற்சாகமும் கிடைக்கிறது.

நான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) முதன்மை வனவியல் விஞ்ஞானியாக ஊட்டியில் பணிபுரியும்போது அதாவது 1980 ல், கல்கத்தா பல்கலைக்கழக தாவரத்துறை பேராசிரியர் டாக்டர் டி. எம். தாஸ் அவர்கள் 1980 ஆம் ஆண்டில் மரங்களைப்பற்றிய தன்னுடைய ஆராய்ச்சி முடிவில் 50 வருடம் வளர்ந்த ஒரு அரச மரத்திலிருந்து கிடைக்கும் மறைமுகப் பயன்களை கணித்து வெளியிட்டிருந்தார். நான் அதை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். மதிப்பு 1980 ஆம் ஆண்டின் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ஒரு மரம் ஐம்பது ஆண்டுகளில் வெளியிடும் மொத்த பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) மதிப்பு ரூபாய் ஐந்து இலட்சம்.
  2. சூரிய ஒளி, நீர், மண்ணிலுள்ள சத்துக்கள் போன்றவற்றை புரதமாக மாற்றித் தருவதன் ஐம்பது ஆண்டுக்கான மதிப்பு ரூபாய் இரண்டு இலட்சம்.
  3. ஐம்பது ஆண்டுகளில் ஒரு மரம் செய்கின்ற காற்று சுத்திகரிப்பு பணியை செயற்கையாக செய்ய வேண்டுமானால் ஆகும் செலவு ரூபாய் ஐந்து இலட்சம்.
  4. ஒரு மரம் செய்கின்றன மண் வளப் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பின் ஐம்பது ஆண்டுக்கான மதிப்பு ரூபாய் மூன்று இலட்சம்.
  5. ஒரு மரத்தின் நிழலிலும், பாதுகாப்பிலும் உள்ள பூச்சிகள் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு செயற்கையாக புகலிடம் கொடுப்பதற்கு ஆகும் செலவு ரூபாய் மூன்று இலட்சம் ஆகும்.

மொத்தம் ரூபாய் பதினெட்டு இலட்சம் ரூபாய் வருகிறது. இது 1980 ஆம் ஆண்டின் மதிப்பு. அப்படியானால் இப்போதைய மதிப்பு எவ்வளவு இருக்கும் யோசித்துப் பாருங்கள்…

ஒரு மரத்தின் மதிப்பே இவ்வளவு என்றால் நம் நாட்டிலுள்ள எண்ணற்ற மரங்களின் மதிப்பு கணக்கிட முடியாதது.  மேலும் 10 குளிர்சாதன பெட்டிகள் மூலமாக கிடைக்கும் பயன்கள் ஒரு மரத்திலிருந்து கிடைக்கும். 18 பேருக்கு ஒரு ஆண்டிற்குத் தேவையான நல்ல சுத்தமான காற்றை ஒரு ஏக்கர் நிலத்திலுள்ள மரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆகையால்தான் மரங்களை பிராணவாயு வங்கி என்றும், உயிரியல் நீர்தேக்கம் என்றும் அழைக்கிறோம்.

இந்நேரத்தில் மரத்தைப் பற்றி கௌதம புத்தர் சொன்னதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அளவில்லா கருணையும் பரிவன்பும் மிக்க உயிர்த்துவமான காடு தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள எவரிடமும் எதையும் எதிர்நோக்கி நிற்கவில்லை. ஆனால் அது தன் உயிரூட்டமான செயல்பாடுகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எல்லா உயிரினங்களையும் பாதுகாத்து நிற்கிறது. கோடாரியால் தன்னை அழிக்கும் மனிதர்களுக்கும் குளிர் நிழல் தந்து கொண்டிருக்கிறது”.  

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.