வித்தியாசமான சில ஆளுமைகள்

Dr. பா. நாகராஜன்

25th Sep 2018

A   A   A

என்னுடன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த ஒரு மருத்துவரின் டிரைவராக பணிபுரிந்த ஒரு நபர், அந்த நண்பரின் பரிந்துரையின் பேரில் என் கலந்தாலோசனை அறைக்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வந்திருந்தார். அவர் என்னிடம் மிகுதியாக உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதுண்டு. அவருடைய கெட்ட பழக்கங்களாக புகை பிடிப்பது, கணேஷ் பாக்கு போடுவது, அவ்வப்போது மது அருந்துவதும் உண்டு. இப்பழக்க வழக்கங்களை மாற்றுவதற்காகவே அவரது முதலாளியான மருத்துவர் என்னிடம் அனுப்பியிருந்தார். அந்த ஓட்டுனர் என்னிடம் கூறியது எனக்கு இரவில் சரியாக தூக்கம் வருவது இல்லை. மேலும், அவ்வப்பொழுது இரவு நேரத்தில் காக்கை வலிப்பு நோயும் வருவதுண்டு என்று.

நான் அவருக்கு காக்கை வலிப்புநோய் வராமல் இருக்க வேண்டுமெனில் தீய பழக்க வழக்கங்களை ஒழித்து இரவில் நல்ல உறக்கமும் பெற வேண்டும் என கூறினேன். அதற்கென மருந்துகளை எழுதிக் கொடுத்து தவறாது உட்கொண்டு குறிப்பிட்ட காலத்தில் திரும்ப வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தினேன். அந்த நபரும் அவ்வாறே மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ வந்து மருந்து சீட்டு வாங்கிச் செல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் வரும்பொழுது நான் வழக்கமாக பிறரிடம் வாங்கும் பரிசோதனை கட்டணத்தை விட குறைவாகவே பணம் தருவார். அது மட்டுமல்ல வரிசை தவறியும் வருவதுண்டு. இந்த காரணங்களால் அவரைக் கண்டதும் எனக்கு உள்ளூர எரிச்சல், இருப்பினும் சகஜமாக அவரை நடத்துவது போல் பரிசோதனை செய்து அனுப்பிவிடுவேன். சில சமயம் மருந்துகளை சரிவர எடுக்காததால் காக்கா வலிப்பும் வந்து அவ்வப்பொழுது கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்.

பின்னர் என் நண்பரான அந்த மருத்துவரிடம் வேலை செய்வதையும் நிறுத்திவிட்டார். காவல்கிணறு பக்கம் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றிய பொழுதும் என்னிடம் வந்து மருந்து எழுதி வாங்கிச் செல்வார். உறக்கத்திற்கான மாத்திரைகளை கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்துவதாக நான் உணர்ந்து, அவரிடம் எச்சரிக்கை விடுத்தேன். வாகனம் ஓட்டும் வேலை செய்வதால் உறக்கத்திற்குரிய மருந்துகளை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.

முன்பிருந்ததைவிட அந்த நபரின் மேல் எனக்கு கூடுதல் எரிச்சல் உண்டானது. ஏனெனில் இதற்கு முன்னராவது ஓர் மருத்துவரிடம் வேலை பார்த்ததால் என்னிடம் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டிருக்கலாம். அதே உரிமையை இப்பொழுதும் அவர் எடுத்துக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியாகிலும் நோயாளிகளிடம் அதிகம் எரிச்சலை காட்ட முடியாதல்லவா?

அப்படி இருக்க இரண்டு மாதத்திற்கு முன் பிற்பகல் மூன்றரை மணியளவில் நான் வேறொரு மருத்துவமனையில் உள்நோயாளிகளை பார்க்கச் சென்றிருந்த போது எனது மொபைலில் அதே உரிமையான குரல் ஒலித்தது. என்னை பார்க்க வேண்டுமென்று கூறினார். சரி பார்த்துதான் தொலைப்போமே என அரைகுறை மனதுடன் வரும்படி கூறினேன். அடுத்து ஐந்து நிமிடங்களில் அவர் வந்த கோலம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. கண்கள் இரண்டும் பறிபோய், முகம் கோரமடைந்து, கை விரல்கள் மடங்கி ஒழுங்கற்று ஊனமாகி இருந்தன. கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தார். அவரை அழைத்து வந்திருந்த நபர் டாக்டரிடம் வந்துவிட்டோம் என கூறினார். அந்த நபர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி ”டாக்டர் எப்படி நல்லா இருக்கீங்களா. எனக்கு ஒரு விபத்து நடந்திருச்சி” எனக் கூறி தன் கதையை கீழ்வருமாறு கூறினார்.

காவல்கிணறு கம்பெனியில் இருந்து வள்ளியூரில் உள்ள ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். அங்கு இவரது வேலை வெடி மருந்துகளை வேன் மூலமாக சென்னையிலிருந்து எடுத்து வருவதாம். ஆறேழு மாதங்கள் நல்லபடியாகவே போய் கொண்டிருந்திருக்கிறது. ஒரு நாள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது வெடிமருந்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த வாகனம் முழுவதும் எரிந்து, இவர் உயிர் பிழைத்ததே பெரும்பாடாகி விட்டது. நாகர்கோவிலில் ஓர் பிரபலமான மருத்துவமனையில் அவரது கம்பெனி முதலாளியே இவரை அனுமதித்து சிகிட்சை அளித்திருக்கிறார். உயிரைக் காப்பாற்ற முடிந்ததே ஒழிய அவரது பார்வையை காப்பாற்ற முடியவில்லை. அவர் என்னிடம் பேசும்பொழுது அவரது பேச்சின் தொனியும் உற்சாகமும் என்னவென்றே என்னால் கூற முடியவில்லை. கண் இழந்த பின்பும் அவரது உற்சாகம் குறைந்ததாக எனக்கு தெரியவில்லை. மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு. வருமானம் எப்படி? வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார் என்று என்னால் எதுவும் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் என்னை பார்க்க வருவதாக கூறிய பின்னரே இக்கட்டுரையை எழுத விரும்பினேன்.

இவ்வாறு அளவு கடந்த சோகங்களுக்கு பின்னும் சிலரால் உற்சாகமாக இருக்க முடிகிறது. நான் தினமும் பிற்பகல் பணி முடிந்து மூன்றரை மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சிக்னலில் நிற்கும்போது கண்பார்வை இழந்தோர் இன்னொருவரின் துணையோடு பிச்சை எடுப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் முகத்திலும் எந்தவித கவலையோ, ஏக்கமோ இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு பிச்சையெடுப்பதையே ஒரு வியாபாரம் போன்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என ஒருமுறை என் மகன் கூறினான். ‘நான் கடவுள்’ என்னும் படத்தில் பிச்சை எடுப்பது ஒரு பெரிய வியாபாரமாக சமூகத்தில் இருப்பதை விலாவாரியாக காட்டியிருந்தார் இயக்குனர் பாலா.

மேற்கூறிய நபரின் ஆளுமைக்கு நேர் எதிர்மறையான ஆளுமை உள்ள இன்னொரு நபரை இம்மாதத்தில் சந்தித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்ட முதன்மை மதிப்பெண்கள் எடுத்து சென்னையில் பிரபல மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் முடித்து ஒரு வருடம் நீட் என்னும் பரிட்சைக்காக உழைத்து பயிற்சி முடித்தபின் பரிட்சை எழுதி தேர்வு பெற்ற பின்னரும் அவருக்கு தன் செயல்பாடுகளில் சந்தோஷமும், முழு திருப்தியும் இல்லாதிருந்தது கண்டேன். நண்பர்கள் அதிகமின்றி ஒரு காதல் தோல்வி, சுய இன்ப பழக்கம் இவை இரண்டும் மட்டுமே இருக்கும் பொழுது தனது மற்ற வெற்றிகளை அவரால் பெரிதாக கொண்டாட முடியவில்லை. இது எவ்வாறு என்று எனக்கு புரியவில்லை. அவருக்கு பெரிய அளவு நண்பர்களும் இல்லை. எம்.எஸ் என்னும் மேற்படிப்பிற்கு இடம் கிடைத்த பின்னரும் தனது தாழ்வு மனப்பான்மையால் கூனிக்குறுகி இருந்தார். ஒரு வார சிகிட்சையிலேயெ அவர் மிகவும் தேறியது, வேறொரு கதைதான்.

சின்ன சின்ன காரியங்களில் சந்தோஷப்பட்டு கொள்வதும், பெரும் வெற்றிகள் கண்டடைந்தும் மனசோர்வு அடைவதும் ஆளுமையின் எதிர் எதிர் தன்மைகளே.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.