தொடர்புடைய கட்டுரை


மூட்டுவலி

Dr.V. செல்வராஜ்

30th May 2019

A   A   A

நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாது போனது. சிறிது காலமாக மூட்டுவலியால் மிகவும் கஷ்டப்பட்டார். நல்ல திடகாத்திரமான உடல்வாகு பெற்றவர். எந்த வேண்டாத பழக்கங்களும் கிடையாது. ஆனால் உடல்நல குறைவு வர காரணம் தான் என்ன?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள். இதனூடே அவர் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். எல்லாமுமாய் ஒரே டென்சன். நினைத்து நினைத்து எப்போதும் உடல் உஷ்ணமாகவே இருந்து வந்தது. விளைவு மன அழுத்தத்திற்கு ஆட்பட்டார். இதனால் அவருக்கு மூட்டுவலி வந்துவிட்டது.

சிறிது காலம் அலோபதி மருந்து சாப்பிட்டார். எந்த பயனும் கிடைக்கவில்லை. இறுதியாக இயற்கை மருத்துவ முறையை நாடினார். யோகா பயிற்சியும் கூடவே செய்ய படிப்படியாக நலம் பெற்று தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்.

இந்த மூட்டுவலிக்கு இன்று 75% மேற்பட்டவர்கள் ஆட்பட்டு கஷ்டப்பட்டு வருகின்றனர். அதிலும் வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டிப்பார்க்கும் நோயில் முக்கியமானது மூட்டுவலி ஆகும். தற்போது இளைஞர்களும் மூட்டுவலியால் கஷ்டப்படுகிறார்கள். அண்மைக் காலமாக மன அழுத்தமானது ஒவ்வொருவரையும் பாடாய் படுத்துகிறது.

தற்போது நாம் உண்ணும் நச்சு கலந்த உணவு வகைகளாலும், இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளாத நிலையாலும் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் முன்னோர்கள் இயற்கை உணவு வகைகளை உண்டார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்லும்படியான நோய்கள் இருந்ததாய் தெரியவில்லை. மிக நலமுடன் திடகாத்திரமாக இருந்துள்ளார்கள். நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்துள்ளார்கள்.

மூட்டுவலிக்கு நிரந்தர மருத்துவம், நிவாரணம் இயற்கை மருத்துவ முறையில் உள்ளது. மருந்தில்லா மருத்துவ முறைகளான பல மருத்துவ முறைகள் எடுத்துக்காட்டாக அக்குபஞ்சர் மருத்துவம் செய்து நலம் பெறுகிறார்கள். அப்போது தான் மூட்டுவலி விரைவில் நீங்கி நிரந்தர நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் உள்ள மூட்டுகளில் அழற்சி (Inflammation) ஏற்பட்டு அவ்வப்போதோ அல்லது தொடர்ந்தோ வீக்கமடைந்து அசைக்க முடியாதபடி வலியையும் துன்பத்தையும் கொடுப்பதையே மூட்டுவலி எனப்படுகிறது. இது பொதுவாக முழங்கால்களிலும் முழங்கைகளிலும் வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள இதர பாகங்களான இடுப்பு, முதுகு, கழுத்து, விரல், கணுக்கால், மணிக்கட்டு, தோள்பட்டை என அனைத்து இடங்களிலும் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும்.

மூட்டுவலிக்கான காரணங்களாக சொல்லப்படுபவை, டி.பி. என்னும் காசநோய் கிருமிகள், சீழ்க்கிருமிகள் போன்றவற்றால் மூட்டுகள் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நாட்கள் தொடர்ந்து ஜலதோசம் இருந்து வருவதால், அதன்மூலம் ஏற்படக்கூடிய வைரஸ் உடலில் மெல்லிய ஜவ்வுகள் உள்ள மூட்டு இணைப்புகளில் தங்கி வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இது கடுமையான வலியை உடல் முழுவதுமுள்ள மூட்டுக்களில் ஏற்படுத்துகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மூட்டுகளில் சுரக்கும் நீர் சீழாக மாறிவிடுவதாலும் வலி ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வீக்கமடைதல் மற்றும் எலும்புகளின் குருத்தெலும்பு பகுதி அழிக்கப்பட்டு சொர சொரப்பான எலும்பாக மாறிவிடுவதாலும் மூட்டுவலி ஏற்படுகிறது.

சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களினாலும் மூட்டழற்சி ஆகுதல், வாத சம்பந்தப்பட்ட முடக்குவாத (Rheumatoid Arthritis) நோயினால் பாதிக்கப்படுதல், உடலின் எடை கூடி மூட்டுகளில் உராய்வு அதிகமாகி விடுவதாலும், எலும்பை மற்ற பாகங்களுடன் இணைக்கும் தசைநார்கள் பலமாக அடிபட்டு நசுங்கி சேதமாதல், முதுமையான வயதில் மூட்டுத் தேய்வு (Osteo Arthritis) போன்றவை காரணங்களாலும் மூட்டுவலி ஏற்படுகிறது.

நாள்பட்ட மன அழுத்தம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மன அழுத்தம் இருந்தால் உடலில் உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மன அழுத்தம் போய் உட்கார்ந்து கொள்கிறது. மருந்து எடுப்பதால் இதனை குணப்படுத்த இயலாது. மன அழுத்தத்திற்கான காரணமறிந்து அதிலிருந்து விடுபட்டு மருந்துகளையும் பயன்படுத்தும்போது நிரந்தர குணம் பெற்றுவிட முடியும்.

மூட்டுவலி தோன்றுவற்கான முன் அறிகுறிகளாக மலச்சிக்கல், ஜீரணமின்மை, தூக்கமின்மை, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதன் மூலம் அறியலாம்.

மேலும் மூட்டுகளில் வீக்கம், சில நேரங்களில் மூட்டுகளில் குடைச்சல், இடுப்புவலி போன்ற தொல்லைகள் உண்டாகும்.

அது மட்டுமல்லாது சில நேரங்களில் மூட்டுகளை அசைக்க முடியாமல் மேலும் குடைச்சல் ஏற்படுத்துதல், முதுகு இறுக்க நோய் (Spondylitis),, மூட்டு இறுக்க நோய் (Ankylosis), கழுத்துவலி, விரல் கணுக்கள் வீங்கி வலித்தல் போன்றவை மூட்டு நோய்க்கு சம்பந்தப்பட்டது எனலாம்.

மூட்டுவலி உள்ளவர்கள் முறையான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, வாழைக்காய், பலாப்பழம், வாழைப்பழம் மாம்பழம், காலிபிளவர், மொச்சைக் கொட்டை, மாமிசம், முட்டை, எண்ணெய் பதார்த்தங்கள், தயிர், பால், கோஸ் மற்றும் கொட்டை வகைகளை சாப்பிடக்கூடாது.

அதோடு குளிர்ச்சி தரும் பதார்த்தங்களையும் சாப்பிடக்கூடாது. தக்காளி பழத்திலுள்ள விதைகளில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதால் தக்காளியை அதிகம் சாப்பிட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாகி வலியானது கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

இறைச்சியில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் உடலில் பாஸ்பரம் அதிகமாகி எலும்புகளில் உள்ள கால்சியத்தினை இழக்க நேரிடும். இதனால் எலும்பு வலுவிழந்து போகும். எனவே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியை தவிர்ப்பது நல்லது.

உணவில் முள்ளங்கியும், முள்ளங்கி கீரையையும் சமைத்தும் அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும். முடக்கத்தான், வாத நாராயணிக் கீரை இதில் ஏதேனும் ஒன்றை சாறு எடுத்து தண்ணீர் கலந்து அருந்தலாம். தினமும் இதில் ஏதேனும் ஒருவகை கீரையை சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.

முடக்கத்தான், வாதநாராயணிக் கீரைகளை சுத்தப்படுத்தி தோசைமாவுடன் கலந்து சாப்பிடலாம். முடக்கத்தான், வாதநாராயணிக் கீரைகளை சூப்பாக தயார் செய்து சாப்பிட்டு வரும்போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வெள்ளைப்பூண்டில் நான்கு அல்லது ஐந்து பற்கள் எடுத்து பாலில் போட்டு கொதிக்கவைத்த பின்பு அந்த பூண்டுப் பாலை ஒரு டம்ளர் அளவுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளை சாப்பிட்டு வருவது நல்லது.

மூட்டுவலி உள்ளவர்கள் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றை சம அளவில் எடுத்து வலியுள்ள இடங்களில் தடவி சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு லேசாக தேய்த்து விட வேண்டும். பின்பு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கும்போது வலி நிவாரணம் பெறலாம்.

முள்ளங்கிச்சாறு மற்றும் முள்ளங்கி வகை சமையல் உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இரவில் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. இரவில் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் உடலில் வந்து சேரும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

மூட்டுவலிக்கு இயற்கை மருத்துவத்துடன் மசாஜ் என்கிற அக்குபிரஷர் மருத்துவத்தையும், அக்குபஞ்சர் என்னும் சீன மருத்துவத்தையும் தொடர்ந்து செய்துவர நாட்பட்ட மூட்டுவலியால் அவதியுறுபவர்கள் கூட விரைவில் குணம் அடையலாம்.

இயற்கை மருத்துவத்தில் தங்கியிருந்து சிகிட்சை பெறும்போது நோயாளிக்கு தேவையான டயட் உணவு, சிகிட்சை, மருந்து அளவு ஆகியவை கண்காணித்து கொடுப்பதால் முழுநிவாரணம் பெறுகிறார்கள் என்கிறார்கள்.

மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளான எளிய யோகா பயிற்சியும் மூச்சுப்பயிற்சியும் பலன்தரும். எனவே சிறு விஷயங்களுக்கு தேவையற்ற டென்சன் ஆவதை கட்டுப்படுத்திக் கொள்ள பழக வேண்டியது இன்றைய முக்கியமான அம்சமாகும். நோயின்றி வாழும் முறைகளை அறிந்து அதற்கேற்ற உணவு பழக்கங்களையும் கடைபிடித்து நலமோடு வாழ்வோம்.

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.