தொடர்புடைய கட்டுரை


உடல்நலம் பெற்றிட…

Dr.V. செல்வராஜ்

07th Oct 2018

A   A   A

பருவ மழை பொய்த்துப்போய் எங்கும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குளங்களும் ஏரிகளும் நீரின்றி வறண்டு வருகிறது. தண்ணிருக்கு பொதுமக்கள் கஷ்டப்படும் நிலை உருவாகி வருகிறது. வெயிலின் வெம்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் வெம்மையை தணிப்பதற்கு மக்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் அருந்தியும், பழச்சாறுகள் அருந்தியும், இளநீர், நொங்கு போன்றவற்றை அருந்தியும் வெயிலின் வெம்மையிலிருந்து உடல் வெப்ப நிலையை குறைக்க வழிவகை தேடுகிறார்கள். அதனால் இவற்றின் விலையும் இன்று அதிகமாகி வருகிறது. வெயிலின் வெம்மையால் ஏராளமான நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. ஏராளமான புது புது வைரஸ்கள் உருவாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெயிலின் வெம்மையை குறைப்பதற்கு தர்பூசனி பழங்களையும் இளநீரையும் இன்று மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இளநீர் இன்று பல இடங்களிலும் கிடைக்கிறது. புதுப்புது சிறு கடைகள் இளநீர் கடைகளாகி விட்டது.

இளநீர் தென்னை மரத்திலிருந்து கிடைக்கிறது. தென்னை மர சாகுபடியில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடம் வகிக்கிறது. தேங்காய் உற்பத்தியில் நான்காவது இடம் வகிக்கும் இலங்கை தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியில், ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 122 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் ஏழு ஆயிரம் கோடி தென்னை மரங்கள் வளர்கின்றன. நாற்பது ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தியாகிறது.

உற்பத்தியாகும் தேங்காயில் 50 சதவிகிதம் வீட்டு உபயோகத்திற்கும் 18 சதவிகிதம் மட்டுமே இளநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் பயன்பாடு மிகவும் குறைவு. ஆனால் அதன் பயன்கள் அதிகம். தினமும் மக்கள் இளநீர் பயன்படுத்தினால் இளநீரின் தேவை 50 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர் மற்றும் ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல வகைகள் உள்ளன. தென்னை மரங்களில் பூவந்து சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களில் இளநீர் கிடைக்கிறது.

வெயிலின் தாக்கம் அதிகமுள்ள ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடைக்கு ஏற்ற இயற்கை பானமாக இளநீர் பயன்படுகிறது. கோடை காலத்தில் வெப்பநிலை மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது.

அதிக விலைகொடுத்து பல்வேறு விதமான செயற்கை பானங்களை வாங்கிக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள். இந்த குளிர்பானங்களால் ஏற்படுகிற பின்விளைவுகளை மக்கள் அறிவதில்லை.

இயற்கை அளித்துள்ள இளநீரை குடித்தால் தாகத்தை தணிப்பதுடன் புத்துணர்ச்சியையும் பெற்று நோயின்றி வாழலாம். கேரளாவில் மினரல் வாட்டர் பாட்டில்களை விட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே காரணமாகும்.

இளநீரில் கொழுப்பின் அளவு மிகவும் குறைவு, அதுவும் இரத்தத்துடன் கரையும் கொலஸ்ட்ரால் கெடுதல் செய்யாத கொழுப்பு வகையாகும். இளநீர் குடிப்பவர்கள் எடை பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 29 மில்லிகிராம் சுண்ணாம்புசத்தும், இரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச்சத்தும், உடல் நன்கு கிரகித்துக்கொள்ள தாமிரம் 0.04 மில்லிகிராமும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லிகிராமும் மற்றும் மக்னீசியம், துத்தநாகம், சோடியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கவும், தசைப்பகுதியில் அதிகமாக சுண்ணாம்புச்சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவுகிறது. இந்த தாது உப்புகள் அதிகம் உள்ளதால் இளநீர் குடிப்பவர்களின் தோல் பளபளப்புடனும் இளமையுடனும் காணப்படும். மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லிகிராமும் இளநீரில் உள்ளது. இது பற்கள் பாதுகாப்பிற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையாகும். இரும்பு சத்தும், குளோரைடு சத்துக்களும் இரத்த விருத்திக்கு உதவுகிறது.

தினமும் இளநீர் குடித்துவந்தால் உடல்சூடு தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்றில் உள்ள அனைத்து அஜீரணக் கோளாறுகளையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு. இளநீர் இரத்தத்தை சுத்தப்படுத்தும், இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும், இரத்த சோகையைப் போக்கும். இரத்தக்கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

கோடையில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் குடிக்கக்கொடுக்க நோயின் தாக்கம் குறையும். நாவரட்சி மற்றும் தொண்டைவலி நீங்கும். மதுபழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும் அதனை சீர்படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

தொடர்ந்து இளநீர் குடித்துவர இதயநோய் எதுவும் அணுகாது. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் பருகும்போது உடல்நலம் விரைவில் தேறும்.

குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்துவர இதில் உள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும், உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்து சிறுநீரகம் சீராக இயங்கச் செய்கிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இளநீரை உடலில் பூசிக் கொண்டால் சுருக்கமின்றி அழகு தேகம் தரும், இளமை தோற்றம் அளிக்கும்.

அதுபோன்று நுங்கு சாப்பிடுவதால் பலன்கள் அதிகம். நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமல்ல ஏராளமான நன்மைகள் உள்ளன. கோடைக் காலத்துக்கு உடலுக்கு வேண்டிய நீர் சத்துக்களை இது தன்னுள் அடக்கியுள்ளது.

இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்துக்கள், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. கோடையில் அதிகபடியான வெப்பத்தால் சின்னம்மை வருகிறது, அப்போது நுங்கு சாப்பிட்டால் சின்னம்மையால் ஏற்படும் அரிப்புகளை தடுத்து உடலை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

எடையை குறைப்பதற்கு உதவுகிறது. நுங்கு அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள அதிகபடியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கிறது.

நுங்கில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.

வெயிலில் செல்லும்போது அடிக்கடி மயக்கம் ஏற்படலாம், அத்தகையவர்கள் நுங்கு சாப்பிட்டால் உடலில் நீர்சத்து அதிகரித்து மயக்கம் ஏற்படுவது குறையும்.

கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை போக்க நுங்கு அதிகமாக உட்கொள்வது நல்லது. கோடையில் விரைவில் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய சோர்வை நுங்கு சாப்பிட்டால் தடுத்து விடலாம்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நுங்கு சாப்பிடுவதால் அது செரிமான மண்டலத்தை சீராக வைத்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுங்கு பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

உடலின் வெப்பத்தை நுங்கு தணிக்க உதவுகிறது. கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க நுங்கு சாப்பிடுவது நல்லது.

குமட்டல் உணர்வை தடுக்க எலுமிச்சை உதவவில்லையெனில் நுங்கு சாப்பிட்டால் இது குமட்டலை உடனே தடுக்கும்.

நுங்கில் உள்ள கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து உடலை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது.

வெயிலின் வெம்மையை குறைத்திட, உடலை பாதுகாத்திட நம் உடலை பேண வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. என்னென்ன உண்டால் உடல் நலத்துடன் வாழ முடியும் என்பதை தெரிந்து கொள்வது முதலில் முக்கியம்.

பின்பு பராமரிப்பு என்பதனை உணர்ந்து கொள்வோம். இதமான வாழ்வு, நோயற்ற வாழ்வு அதுவும் நாம் உண்ணும், குடிக்கும் பானங்களால் கிடைக்கிறது எனில் அதனை உண்பதில் குடிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

உடல் நலத்துடன் வாழ்வோம் எளிய வழிகளை பின்பற்றுவோம். பிறருக்கும் சொல்வோம். தெரிந்ததுதானே என்பதனை மாற்றி பழக்க வழக்கத்தை மாற்றுவோம்.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.