தொடர்புடைய கட்டுரை


அல்சரிலிருந்து விடுதலை

Dr.V. செல்வராஜ்

03rd Apr 2019

A   A   A

இயற்கையான உணவை உண்டு, இயற்கை நல மருத்துவத்தை கையாண்டு வாழும் வாழ்வு ஒரு நலமான வாழ்வாகவே அமையும். செலவில்லாமல் எளிய முறையில் தொல்லைகள் இல்லாத வகையிலும் செயல்படுவது இயற்கை நல மருத்துவத்தில் அடங்குகிறது.

சரிவிகித உணவுமுறை, நீர் அருந்தும் முறை, சுவாச முறை, குளிக்கும்முறை, உடை அணியும் முறை, நடப்பது, சிந்திப்பது, நெறிமுறைகளையும் மற்றும் சமுக சேவைகள் செய்து உள்ளம் மகிழ்தல், அளவுடன் குடும்ப உறவில் ஈடுபடுதல், தியானம் போன்றவற்றை நல மருத்துவம் சொல்கிறது.

தேவைக்கு புசிக்க வேண்டும். அதுவும் பசித்து பின்பே புசிக்க வேண்டும். மிக குளிர்ச்சியான பானங்களையும், மிக சூடான பானங்களையும் தவிர்த்து சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரையே அருந்துதல் நலம் பயக்கும்.

உடலானது கிருமிகள், விஷப்பொருட்கள் புறப்பொருட்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளோ, வெளி உறுப்புகளோ பழுதடைந்து புண்ணாகவோ, கட்டியாகவோ, வீக்கமாகவோ மாறி இரத்த கசிவுகள் ஏற்பட்டு வலியாக, எரிச்சலாக துன்பத்தை கொடுப்பதை புண் அல்லது அல்சர் என்கிறோம்.

பொதுவாக வயிற்றுக்குள் வரும் புண்ணைதான் நாம் அல்சர் என்று நினைக்கிறோம். உடலில் எங்கு புண் ஏற்பட்டாலும் அதனை அல்சர் என்றுதான் மருத்துவ ரீதியாக அழைக்க வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

அல்சர் ஏற்பட காரணங்களாவன. காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுதல், உடலில் ஏற்படும் நோய்களுக்கு இரசாயன மருந்துகளை உட்கொண்டு குணமடைந்தாலும், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், பின்விளைவுகளால் உடலின் உட்புறத்தில் உள்ள உறுப்புகள் மியுகஸ் (MUCUS) மற்றும் சதைப்பகுதிகள் பாதிக்கப்பட்டு இரணமாதல்.

குடிபழக்கத்தால் குடலில் ஏற்படும் புண், உண்ணும் பொருளில் விஷக்கிருமிகள் கலந்து சென்று தாக்குதல், நேரம் தவறி சாப்பிடுதல், சுவாசிக்கும் போது கிருமிகள் உட்புகுந்து உடலைத்தாக்குதல், புகைப்பழக்கம், மலச்சிக்கல், கோபம், பயம், அதிர்ச்சி போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படும். நரம்புத்தளர்ச்சி, மன அழுத்தத்தால் ஏற்படும் மந்தமான வயிற்றில் சுரப்பு நீர் கட்டுப்பாடுடன் சுரக்காமல் அதிக அளவில் சுரந்து கேஸ்ரிக் அல்சரை உண்டாக்குகிறது.

இது அல்சர் தான் என்பதனை அவ்வப்போது விட்டுவிட்டு வயிறு, நெஞ்சு போன்ற பகுதிகளில் வலி ஏற்படுதல், சாப்பிட்ட உடனேயோ சற்று நேரம் கழித்தோ வயிற்று வலி உண்டாதல், வாந்தி எடுத்தல், இரத்தத்துடன் மலம் கழிதல், பசியினால் சாப்பிட வேண்டும் என்றிருந்தாலும் சாப்பிட முடியாமல் இருத்தல், வாயில் அடிக்கடி துர்நாற்றம் வீசுதல், உடலின் எடை குறைந்து வருதல், வயிற்று எரிச்சல், வயிறு உப்பிசம், புளிப்பு ஏப்பம் வருதல் என்பன ஆகும்.

இரைப்பையில் வருவது ‘கேஸ்டிரிக் அல்சர்’ என்றும் இரைப்பை கோளத்தில் வருவது ‘பெப்டிக் அல்சர்’ அல்லது ‘டியோடினல் அல்சர்’ என்றும் சொல்லப்படுகிறது.

கேஸ்ட்ரிக் அல்சர் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்டால் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி எடுத்தால் தான் வலி குறையும். பசி இருக்கும் ஆனால் சாப்பிட பயந்து சாப்பிடாமல் இருந்து நாளடைவில் எடை குறைந்துகொண்டே போகும். உடல் மெலியும்.

இரைப்பை கோளத்திலுள்ள அல்சருக்கு உணவு சாப்பிட்டால்தான் வயிற்றுவலி குறையும். வயிறு காலியாக இருந்தால் வலி அதிகமாகும். பசி இருக்கும் அதனால் அதிகமாக சாப்பிட உடல் எடை அதிகரிக்கும்.

இரைப்பை உட்சுவர்களை வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாக தாக்காமல் இருக்க, வாயில் சுரக்கும் உமிழ்நீர் உதவியாக இருந்து அமிலத்தின் அரிப்புத் தன்மையை குறைக்கிறது.

பொதுவாக உடலில் ‘ஓ’ குரூப் இரத்தம் உடையவர்களுக்கு அமிலத்தின் அரிப்புத்தன்மையை குறைக்கும் ஆற்றல் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இவர்களுக்கு சுரக்கும் உமிழ்நீரில் அமிலத்தின் அரிப்புத்தன்மையை குறைக்கும் இரசாயனப் பொருள் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவேதான் ‘ஓ’ குரூப் உள்ளவர்களை அல்சர் நோய் எளிதாக தாக்குகிறது.

சமீபத்தில் அல்சர் நோயை H. பைலோரி என்னும் நுண்ணுயிர் கிருமிகளே உருவாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனவே, இந்த நுண்ணுயிர்களை மருந்து கொண்டு அழித்துவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அல்சர் நோய்லிருந்து விடுபடுவதற்கு நேரம் தவராமல் உணவினை உட்கொள்ள வேண்டும். பசி எடுக்கும் நேரத்தில் காலம் தவறாமல் ஏதாவது பழங்கள் அல்லது பழச்சாறுகள் உட்கொண்டு பசியை தணிக்க வேண்டும்.

உணவில் உப்பு, புளி, காரம் பாதியாக குறைப்பது முக்கியமானது. போதைபொருள், மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே விட்டுவிட வேண்டும்.

உணவு உண்ணும்போது பற்களால் நன்கு மென்று அரைத்து உமிழ்நீர் கலக்கும்படி செய்து விழுங்க வேண்டும். ஒரு கப் தண்ணீர் குடித்தாலும்கூட கொஞ்சம் கொஞ்சமாக நாவால் நன்கு கலக்கி உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மிலி அளவுக்கு வெண்பூசணிச் சாறினை அருந்திவர வேண்டும். சிலருக்கு இச்சாறு பிடிக்காது. சளி ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்கள் சாறாக சாப்பிடாமல் பொரியல், குழம்பு என சமைத்து சாப்பிடலாம்.

அல்சர் நோயாளிகள் உணவில் பால் சாதம், தயிர் சாதம், மோர்சாதம், இளநீர், புடலங்காய், காரட், முட்டைகோஸ், வாழைப்பழம், மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக துவர்ப்பு சுவையுள்ள நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம், சுண்டைக்காய், அத்திப்பழம் ஆகியவற்றை அல்சர் நோயாளிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

முருங்கை விதைப்பொடி 25 கிராம், அத்தி இலைப்பொடி 25 கிராம், குப்பைமேனி இலைப்பொடி 25 கிராம், நாவல் இலைப்பொடி 25 கிராம், வாழைப்பூ (அரைத்து பொடியாக) 50 கிராம், சப்போட்டா இலைப்பொடி 25 கிராம், உலர்ந்த மணத்தக்காளிப் பழம் 50 கிராம் எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இதனை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அல்லது குணமாகும் வரை சாப்பிட்டு அல்சர் நோயிலிருந்து பூரண குணம் அடையலாம். இதனை உண்டு பலர் குணம் பெற்றிருக்கிறார்கள். அல்சர் நோய் மன அழுத்தத்திலிருந்து வந்தது எனில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழி கண்டாலன்றி குணம்பெற முடியாது.

எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபடுவோம், அல்சர் நோயிலிருந்தும் விடுபட்டு நலமுடன் வாழ இந்த எளிய வழிகளை கடைபிடிப்போம். பிறருக்கு இதனை எடுத்துக் கூறுவோம். நலமோடு வாழ்வோம்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.