தொடர்புடைய கட்டுரை


இயற்கை உணவு - கறிவேப்பிலை

Dr.V. செல்வராஜ்

17th Jan 2019

A   A   A

உணவு தயாரிக்கும்போது உணவோடு பல பொருட்கள் சேர்க்கப்படுகிறது. உணவு ருசியாக இருப்பதற்கும் மணமாக இருப்பதற்கும் இயற்கையாக கிடைக்கின்ற உணவுப்பொருட்களே சேர்க்கப்படுகிறது.

மணமும் ருசியும் நிறைந்த உணவு உண்பதற்கு மிகவும் நிறைவைத் தருகிறது. அந்த வகையில் உணவுடன் மணத்திற்காக சேர்க்கப்படுவது கறிவேப்பில்லை.

வீட்டு சமையலில் கறிவேப்பிலை இல்லாத சமையலை பார்ப்பது அபூர்வமானது. நமது முன்னோர்கள் தொடங்கி இன்றுவரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம். கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும்போது அதிக மணம் இருக்காது.

பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும். இளம் சூடான எண்ணெயில் போடும்போது தான் அதன் சுவையும் மணமும் அதிகரிக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்டதுதான் கறிவேப்பிலை.

உணவு உண்ணும்போது கறிவேப்பிலையை எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர். இதன் நன்மைகள் முழுவதும் தெரியாத காரணத்தினால் தான் இவ்வாறு செய்கிறார்கள். கறிவேப்பிலையை பொடிசெய்து உணவில் சேர்த்து சாப்பிடலாம், சட்னியாக அரைத்து தினமும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும் பச்சை கொத்தமல்லியையும் சேர்த்து இதுபோன்ற துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போன்று மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

கறிவேப்பிலையைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று பல பயனுள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். மசாலாப்பொருட்கள் நல்லவாசணை உடையது மட்டுமல்ல, அவை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் என்பவர். கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது என்று தெரிவிக்கிறார். இது புற்றுநோய், இருதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்.

100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாறை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதயம் சம்பந்தப்பட்ட, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் எனவும் தெரிவிக்கிறார்.

நீரழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையும் மாலையில் 10 இலையையும் பறித்து உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதில் நார்ச்சத்து, வைட்டமின், ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இளநரையை தடுக்கிறது. சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தவல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவால் உடல் எடை குறைவது மாறும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவேமென்று தின்றால் குரல் இனிமையாகும், சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். மலச்சிக்கலையும் சரிசெய்கிறது, பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையை அரைத்து காயவைத்து பின் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சிலநாட்கள் ஊறவைத்து அந்த எண்ணெயை தேய்த்து வர நரைமுடி நம்மை நெருங்காது மேலும் முடி உதிர்தலை இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்துகிறது. வாந்தி நாக்கு ருசியற்று போதல் வயிற்றோட்டம் சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை சளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்துகிறது.

கறிவேப்பிலை சாறு இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது. இப்படியான கறிவேப்பிலை ஏராளமான நன்மைகளை நமக்குத் தருகிறது. எனவே இனிமேலாவது கறிவேப்பிலையை தூக்கி தூர எறிந்து விடாமல் மென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு நலம்தரும்.

உணவோடு சேர்க்கப்படும் கீரையில் கொத்மல்லிக் கீரையும் உண்டு. கொத்தமல்லிக் கீரையை வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மையுடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம், நீங்கும், உடல் பலம் பெறும், தாதுவிருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.

இக்கீரையில் சாறு பிழிந்து பித்தத்தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி குட்டிகள், வீக்கங்கள் மீது வைத்துக் கட்டினால் குணம் கிடைக்கும்.

கொத்தமல்லிக் கீரையை துவையல் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எளிதாகப் பிரியும். பற்களுக்கு உறுதியை அளிக்கிறது. பல் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் இக்கீரையை உண்டுவர குணமாகும்.

முதுமைப்பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தருகிறது.

வாந்தி விக்கலைத் தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் கண்பார்வை தெளிவாகிறது. வைட்டமின் சி இக்கீரையில் அதிக அளவு உள்ளது. இதனால் உடலில் ஏற்படக்கூடிய சொறி சிரங்கு அரிப்பு போன்ற தோல்வியாதிகளை குணமாக்குகிறது.

எலும்பு, பற்களுக்குத் தேவையான கால்சியம் சத்து இதில் இருக்கிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இக்கீரையுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

பற்களில் இரத்தக்கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக மென்று வாயில் வைத்திருந்து பின்னர் துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து இருபது நாட்கள் செய்துவர இப்பிரச்சனைகளில் இருந்து வெளி வரலாம்.

ஆக இயற்கையாக உணவோடு சேர்க்க்கப்படும் இந்த கீரைகளின் பலன்கள் உடலுக்கு பல நன்மையைத் தருகிறது. உணவில் பயன்படுத்தும் இந்த கீரைகளின் பலன்களை உணர்வோம் பயன்படுத்துவோம், நலம்பெறுவோம்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.