தொடர்புடைய கட்டுரை


நலம் தரும் எள்ளு

Dr.V. செல்வராஜ்

20th Aug 2018

A   A   A

அண்மை காலத்தில் மக்கள் மத்தியில் உணவுப் பழக்கங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மனித வாழ்க்கை இயந்திர மயமாகி போனதால் உண்ணும் உணவும் துரித உணவுகளாகிப் போகிறது. துரித உணவு உண்பதால் ஏற்படுகின்ற தீமைகளை பற்றி மக்கள் எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பலரும் துரித உணவு உண்பதில் இன்றும் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் துரித உணவு தயாரிக்க பயன்படுகின்ற மாவு வகைகள் என்னென்ன அதனால் ஏற்படும் விளைவுகள் எவை என்பது பற்றிய விழிப்புணர்வுகளை இன்று பல வழிகளில் மக்கள் அறிந்து வருகிறார்கள்.

உண்ணும் உணவே மருந்தாகிப் போகிறது என்ற உணர்வு இன்று அதிகமாக வளர்ந்து வருகிறது. அதனடிப்படையில் இன்று பழங்கள், காய்கள் பலவற்றையும் உண்டு நோயில் இருந்து தங்களை பாதுகாத்து, அலோபதி மருந்திற்குப் பதிலாக எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாத நாட்டு மருத்துவத்தை இன்று நாடி வருவது அதிகரித்துள்ளது.

அப்படி நாட்டு மருத்துவத்தை பயன்படுத்தும் போது அங்கு எளிய உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சொல்லி கொடுப்பதனை காண முடிகிறது. அந்த அடிப்படையில் உணவோடு எள்ளும், கொள்ளும் சேர்ப்பதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

இளைச்சவனுக்கு எள்ளு என கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் பொருளாகும். எள்ளின் பயன்களை நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை. முன்பெல்லாம் எள்ளுருண்டைகள் வாங்கி உண்ணும் பழக்கம் இருந்தது. இன்று அயல்நாட்டவர்கள் எள்ளின் பயன்களை அறிந்து வைத்துள்ளார்கள்.

எள்ளில் கறுப்பு, வெள்ளை என இரு வகைகள் உள்ளது. வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் அதிகம் விளையும் கறுப்பு எள்ளில் தான் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

கறுப்பு எள்ளில் மெக்னிசியம் அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை நோயை தடுக்கும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை அணுக விடாமல் தடுக்கும்.

100 கிராம் எள்ளில் இருக்கும் சத்துக்கள் கலோரி அளவு 573, புரதம் 17.73 கி, கொழுப்பு 50 கி, நார்சத்து 11.8 கி., தயமின் (வைட்டமின் பி1) 0.791 மிகி., ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) 0.247 மிகி., நியாசின் ( வைட்டமின் பி3) 45 மிகி., வைட்டமுன் இ 0.25 மிகி., துத்தநாகம் 7.75 மிகி., பொட்டாசியம் 468 மிகி., கால்சியம் 975 மிகி., தாமிரம் 4.082 மிகி., இரும்பு 14.55 மிகி., மெக்னிசியம் 351 மிகி., மாங்கனீஸ் 2.460 மிகி., செலினியம் 34.4 மை.கி ஆகியன ஆகும்.

பைட்டோஸ்டீராய் (Phytosterols) எனப்படும் அரிய வகை சத்து இதில் இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்.

செஸமைன் (Sesamine) செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு மாத்திரை வடிவில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.

எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் அதிக அளவில் உள்ளது. நூறு கிராம் எள்ளில் ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளை பலப்படுத்தும்.

மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள் கல்லீரலைச் சிதைக்கும். எனவே எள் சாப்பிட்டு வந்தால் நச்சுக்கள் வெளியேறி கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும்.

25 கிராம் எள்ளில் ஒரு கப் பாலைவிட அதிகளவில் கால்சியம் உள்ளது. இதனால் குழந்தைகள் வளர் இளம் பருவத்தினர் இதை எடுத்துக் கொள்வதால் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும்.

தயமின் (Thiamin) சத்து எள்ளில் அதிகம் இருப்பதால் எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாக தூக்கம் வரும். தூக்கத்தின் போது உடலில் வலிகள் நீங்கும். மகிழ்ச்சியைத் தூண்டும் செர்ட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.

எள்ளில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது (7.75 மிகி.), இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono unsaturated Fattyacid)) அதிகம் இருப்பதால் கெட்டகொழுப்பு குறையும், நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

பக்கவாதம் குறையும், நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும். எள்ளில் இருந்து எடுக்கும் எண்ணெய், நல்லெண்ணெய். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும் தோல் வறட்சியை தடுக்கும்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் தோல் அரிப்புப் பிரச்சனைகள் நீங்கும்.

எள் மிகவும் அதிக கலோரி கொண்டது. உடல் அதிக எடை  கொண்டவர்கள், உடல் எடை குறைந்தவர்கள் என இருவருமே நாள் ஒன்றுக்கு 25 கிராம் வரை எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எள் உருண்டை சாப்பிடலாம், இட்லி பொடி, துவையல் அரைக்கும் போது எள் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பொங்கல் முதல் அனைத்து உணவிலும் கொஞ்சம் எள் சேர்ப்பது நல்லது.

எள் உருண்டை பூப்பெய்த பெண்களுக்கு ஒரு சடங்கு போலவே கொடுக்கப்படுகிறது. அதன் பயன் என்னவெனில் கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் பின்வரும் நாட்களில், வயதான காலங்களில் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்தும் இணைப்பு திசுக்களுக்கு பலன் தருகிறது. இதனால் வயதான பின்பு வரும் மூட்டுவலி மறைந்து போகும். பித்த உடல்வாகு உள்ளவர்களுக்கு அதிக சூட்டை உடலுக்குத் தருவதால் இவர்கள் அதிகம் எள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

எள்ளை வெல்லப்பாகில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் குறையும். தோலில் சொறி சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் தோல் நோய் அகலும்.

எள்ளை நீரில் ஊறவைத்து தேவையான பால் மற்றும் பனைவெல்லாம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தசோகை விரைவில் மாறி உடல் வலிமை பெறும்.

எள்ளை இரவில் ஊற வைத்து காலையில் உண்டுவந்தாலும் உடல் வலிமை பெறும். நல்ல முன்னேற்றத்தை உடலில் உணர முடியும். ஊறவைத்த அந்த நீரையும் குடிப்பது நல்லது.

நல்ல சத்துக்கள் இருப்பதனால் நம் முன்னோர்கள் எள்ளை உணவில் அன்றாடம் சேர்த்து பயன்படுத்தி வந்தார்கள். அதிக அளவில் எள்ளை பயிரிட்டார்கள். இன்று உண்பதும், எள் பயிரிடுவதும் குறைந்தே வருகிறது.

நம் தலைமுறைக்கு எள்ளின் பலன்களை எடுத்துரைப்போம். நம் குழந்தைகளுக்கும் கொடுப்போம். நாமும் தினமும் உண்போம், உடல்நலம் பெற்று நலமுடன் வாழ்வோம்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.