தொடர்புடைய கட்டுரை


நலம்தரும் பழச்சாறுகள்

Dr.V. செல்வராஜ்

11th Feb 2019

A   A   A

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டால் உடலின் வெப்பத்தினை குறைத்திட, வெம்மையிலிருந்து விடுபட பல வழிகளை நாடுகிறோம். அதற்காக இயற்கையாக கிடைக்கும் உணவுகளை அவரவர் வசதிக்கேற்றவாறு பயன்படுத்துகிறோம்.

சமைத்து உண்ணும் உணவு தினமும் உட்கொள்கிறோம். அதே சமயம் உடலுக்கு சுகம் தருகின்ற சமைக்காத உணவுகளையும் நாம் உண்கிறோம். இயற்கை உணவினை உண்பதற்கான ஆர்வம் முதலில் நம்மிடம் ஏற்பட வேண்டும். பின்பு அதனை சாப்பிட முயல்வதும், பழக்கம் ஏற்பட்டு விட்டால் மனதிற்கு பிடித்ததாக அது மாறிவிடும்.

பழச்சாறுகள், பழங்கள், கலப்புப் பழங்கள், காய்கறிச்சாறுகள், பச்சைகாய்கறிகள், கலப்பு காய்கள், கீரைச்சாறுகள், கீரைகள், கலப்புக்கீரைகள், தானியங்கள், முளைகட்டிய தானிய வகைகள், கலப்பு தானியங்கள், உலர வைக்கப்பட்ட பழங்கள், இயற்கை பால், கிழங்கு மற்றும் வேர் வகைகள் மற்றும் இயற்கை நெய் (எண்ணெய் வகைகள்) இவைகள் இயற்கையாக கிடைக்கும் உணவு வகைகளாகும்.

நன்கு பழுத்த பழங்களை வாங்கி கழுவிய பின்பு அப்பழங்களிலிருந்து சாறெடுத்து சாப்பிடுதலே பழச்சாறு ஆகும். இச்சாறுடன் தண்ணீர் கலந்தோ, இயற்கையாக கிடைக்கும் தேனையோ சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பழங்கள் இனிப்பாக இருந்தாலும், இதில் உடலுக்கு தேவையான காரம், புளிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லா சுவைகளும் அடங்கியுள்ளன. சில   பழங்கள் புளிப்பாகவும் (புளியம்பழம், எலுமிச்சம்பழம்), சில பழங்கள் துவர்ப்பாகவும் (நாவல், மாதுளம்), சில பழங்கள் கசப்பாகவும் (வேப்பம்பழம்), சில பழங்கள் காரமாகவும் (மிளகாய் பழம்) இருக்கிறது.

நன்கு கனிந்த பழங்களை எடுத்து கழுவி, தோல் உரித்து, விதை நீக்கி சாப்பிட வேண்டும். சில பழங்களை அப்படியே சாப்பிடலாம். எடுத்துக்காட்டாக கொய்யாப்பழம், இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

ஆப்பிள், பேரிக்காய் இவற்றை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அன்னாசிப்பழம், திராட்சைப்பழம் இவற்றை சாப்பிடலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி சாப்பிடலாம்.

ஆப்பிள், கொய்யா, வாழை பழங்கள், பேரீச்சம் பழம், திராட்சைப்பழம் இவற்றினை கலந்ததே கலப்பு பழங்கள். இத்துடன் தேனும், தேங்காய் துருவலும் சேர்த்து சாப்பிடலாம்.

திராட்சைப் பழச்சாற்றினை அருந்தும்போது பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள்   நீங்குகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. திராட்சை பழச்சாற்றை புளிக்கவைத்து சாப்பிடக்கூடாது. புளித்த பின்பு அது போதையை உண்டாக்கும் தன்மையுடையது.

திராட்சை பழச்சாறு புளித்து நுரைக்கும் போது அடியில் தங்கியிருக்கும் உப்பு திராட்சை உப்பு எனப்படுகிறது. இது டார்டாரிக் அமிலம் ஆகும். இது கழிச்சலை உண்டாக்குகிறது.

இப்பழச்சாற்றினை ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வர பல் முளைக்கும்போது ஏற்படும் கழிச்சல் நீங்கும். இப்பழச்சாற்றை உடல் உஷ்ணம் உள்ளவர்கள் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறலாம். சிறுநீரக கோளாறு உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.

சாத்துக்குடி பழத்தோலை உரித்து விட்டு, பழச்சுளையிலுள்ள தோலை உரித்து, விதைகளை நீக்கிவிட்டு தட்டில் பரப்பி வைத்துவிட்டு, அதன்மேல் உப்பு கலந்த மிளகுத் தூளை லேசாக தடவிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து இப்பழச் சுளைகளை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சாத்துக்குடியை சாப்பிட்டால் சளிபிடித்துவிடுமோ என்று பயப்பட தேவையில்லை. அடிக்கடி வாந்தி மயக்கம் உடையவர்கள் சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டு குணமடையலாம். இது நல்ல பசியை உண்டாக்கும். இரத்தசோகை உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் சம அளவு திராட்சை பழச்சாறு கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல இரத்தத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

காமாலை நோய் உள்ளவர்கள் மற்றும் டைஃபாய்டு ஜுரம் கண்டவர்கள் சாத்துக்குடி பழச்சாற்றினை கட்டாயம் சாப்பிட்டுவர வேண்டும். நார்த்தை, பம்பளிமாஸ், ஆரஞ்சு, கிச்சிலி போன்ற பழங்களையும் மேற்கண்டவாறு சாப்பிடலாம். எதையும் நன்கு மென்று சுவைத்து உமிழ்நீர் கலக்கச் செய்து சாப்பிட வேண்டும்.

அத்திப்பழச்சாறு, சப்போட்டா பழச்சாறு தயாரிக்க, அத்திப்பழம், சப்போட்டா பழத்தை தோல் உரித்து பழங்களை எடுத்து சிறிதளவு தண்ணீர் கலந்து ஜூசாக தயார் செய்யலாம்.

அல்சர், கேன்சர் மற்றும் பெண்களுக்குள்ள வெள்ளைப்படுதல், அதிக இரத்தப்போக்கு போன்றவை உடையவர்கள் சப்போட்டா பழச்சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு குணமடையலாம். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் இதனை சாப்பிடலாம். ஆண்களுக்கு விந்து கெட்டிப்பட்டு ஆண்மை சக்தி அதிகரிக்கும். இதுபோலவே தோலை நீக்காமல் அத்திப்பழச் சாற்றின்னை தயாரிக்கலாம்.

ஆப்பிள் பழத்தை நன்கு கழுவி, விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மற்ற பழச்சாறுகளைக் காட்டிலும் வேறுபட்டு பால் போல அடர்த்தியாக காணப்படும். எனவே இதனை ஆப்பிள் பால் என அழைப்பர்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகினால் மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் பழத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இப்பழச்சாற்றினை, பழத்தினை தினசரி சாப்பிட்டு வர அனைத்து ரக நோய்களிலிருந்தும் விடுபட முடியும்.

அன்னாசி பழத்திற்கு பூந்தாழப்பழம் என்றொரு பெயருமுண்டு. மேகவேட்டை, அடிக்கடி வாந்தி உண்டாதல், அடிக்கடி தாகமெடுத்தல், தீராத தலைவலி போன்ற குறையுள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

இதனை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தொண்டை கட்டும். மேலும் கர்பிணி பெண்கள் இதனை சாப்பிடக் கூடாது. ஏனெனில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வயிற்றில் பூச்சித்தொல்லை உடையவர்கள் இதனை சாப்பிட பூச்சிகள் வெளியேறும். அன்னாசிப்பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். பல சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி டீ, காப்பி சாப்பிடுவர். அதற்கு பதிலாக இதனை சாப்பிட்டால் சோர்வு, வறட்சி, தாகம் நீங்கும். இச்சாறை மயக்கம், வாந்தி, உஷ்ணம், பித்தம், வாய்குமட்டல், நீர்வேட்கை, கண்நோய், அம்மைநோய் உடையவர்கள், காமாலை நோய் மற்றும் கழிச்சல் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

எலுமிச்சை சாதம் தயாரித்து சாப்பிடலாம். எலுமிச்சை ரசம் செய்ததும் சாப்பிடலாம். இதனை சாப்பிட பித்தத்தை தணிக்கும். சித்தபிரம்மை கொண்டவர்களும் எலுமிச்சை சாறு சாப்பிடலாம்.

மாம்பழம், பப்பாளிப்பழம், மாதுளை, தர்பூசணி, விளாம்பழம், கொய்யா போன்ற பழங்களை தோல் நீக்கி விதை நீக்கி சாறு தயாரித்து, தேவையெனில் சிறிது தேன், தேங்காய் பால் அல்லது வெல்லம் சேர்த்து பயன்படுத்தலாம்.

உடலுக்கு நலம்தரும் இந்த பழச்சாறுகள் வெயிலின் வெம்மையை நீக்கி உடல் நலனைத்தருகிறது. நோய்களையும் குணப்படுத்துகிறது. நாமும் பயன்படுத்துவோம் குழந்தைகளுக்கும் கொடுப்போம், பலன் பெறுவோம்.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.