சிகரம் தொட்டு சாதித்த பெண்…

F.A.M. சேவியர்

20th Aug 2018

A   A   A

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிப்பது என்பது பலரது கனவாகவே முடிந்து போகிறது. அதையும் தாண்டி பலரும் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு அங்கே தங்கள் தேச கொடியை நாட்டி பெருமிதம் கொள்கின்றனர். அதிலும் பெண்கள் மலையேறுவதே கடினமான காரியமாக எண்ணும் பலருக்கு மத்தியில் ஒரு பெண் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றாரென்றால் அது சிறப்புதானே! அந்த சிறப்புக்குரியவர் தான் பச்சேந்திரி பால்.

இவர் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் சமொலி மாவட்டத்தின் நாகுரி என்ற கிராமத்தில் பிறந்தார். பச்சேந்திரி பாலுடன் பிறந்தவர்கள் 7 பேர். இவரது தந்தை ஸ்ரீ கிருஷ்ணபால்சிங், தாயார் ஹன்ஸாதேவி தந்தை சிறிய அளவிலான பலசரக்கு வியாபாரம் செய்தவர். இந்திய எல்லையிலிருந்து திபேத்திய எல்லை பகுதிக்கு பலசரக்குகளை விற்பனை செய்வது இவரது தொழில். சிறு வயதிலிருந்தே பச்சேந்திரி பால் படிப்பில் ஆர்வம் காட்டியதால் பல்வேறு குடும்ப கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவரது தந்தை தொடர்ந்து படிக்க வைத்தார். அதன் பயனாக பச்சேந்திரி பால் எம்.., பி எட். பட்டம் பெற்றார். கல்லூரியில் பயின்றபோது துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்கபதக்கம் பெற்றுள்ளார்.

பச்சேந்திரி பால் தனது பன்னிரெண்டாவது வயதில் தன் தோழியருடன் சுற்றுலா சென்றபோது 4 ஆயிரம் மீட்டர் உயரம் உள்ள சிறிய மலை ஒன்றில் ஏறினார். அப்போதே மலையேற்றத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் படிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக அப்போது அவர் மலையேற்றத்தை தொடரவில்லை. பின்னர் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், நேரு மலையேற்ற பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து மலையேற்றம் தொடர்பான குழு பயிற்சியினை பெற்றார். அப்போது பயிற்சியின் போது அவர் 6675 மீட்டர் உயரம் உள்ள கங்கோத்திரி மலையிலும், 5819 மீட்டர் உயரம் உள்ள ருதுகாரி மலையிலும் ஏறினார்.

பின்னர் தேசிய சாகச அமைப்பில், பெண்களுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் பயிச்சியாளராக சேர்ந்து சிறிது காலம் பணிபுரிந்தார். 1984 ஆம் ஆண்டு எவெரெஸ்ட் மலையில் ஏற, இந்தியாவின் 4-வது மலையேற்றக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பச்சேந்திரி பால் இடம்பெற்றார். அந்த பயணத்தின்போது அவர்களது குழு மீது பனிமலை விழுந்து பலருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும் பச்சேந்திரி பால் மனம் தளராமல் தனது பயணத்தை தொடர்ந்தார். மைனஸ் 40 டிகிரி அளவிற்கு தட்பவெப்பம் இருந்தபோதும், கடுமையான குளிர் காற்று வீசியபோதும், பல்வேறு இடங்களில் பனிமலை முகடுகள் தடையாக இருந்தபோதும் மனம் தளராமல் அத்தனை தடைகளையும் மீறி தொடர்ந்து மலை ஏறி பச்சேந்திரி பால் சாதனை படைத்தார். 1984 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி 8847.7 மீட்டர் உயரம் உள்ள எவெரெஸ்ட் மலை மீது ஏறி இந்திய தேசிய கோடியை பறக்கவிட்டார்.

அதே போல் முழுவதும் பெண்களைக் கொண்ட ஒரு மலையேற்ற குழுவிற்கு தலைமைதாங்கி சியாச்சின் மலைப்பகுதி வழியாக சுமார் 4500 கிலோ மீட்டர் தூரம் இமயமலைப் பகுதியில் சாகச மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டார் பச்சேந்திரி பால்.

எவெரெஸ்ட் மலையில்  ஏறிய  முதல்  இந்திய பெண்  என்ற  சாதனை  மூலம்  அவரது  பெயர்  கின்னஸ்  சாதனை  புத்தகத்திலும், லிம்கா சாதனை  புத்தகத்திலும் இடம் பெற்றது. மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளை படைத்ததுடன் எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட்ட பச்சேந்திரி பாலுக்கு மத்திய அரசு 1985ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1986ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கி கவுரவப்படுத்தியது. தற்போது அதாவது 1984 முதல் டாடா ஸ்டீல் அட்வென்சர்ஸ் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று நிர்வாகவியல் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவருகிறார்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...



Error
Whoops, looks like something went wrong.