தொடர்புடைய கட்டுரை


கடல்

பி.ரெ. ஜீவன்

13th Oct 2018

A   A   A

நம் பூமி ஒரு நீல கிரகம். சுமார் 70% கடலாக காணப்படுகிறது. கடல் பரந்து விரிந்தது. பெரும்பான்மையான இடங்கள் ஒரு உயிரற்ற பாலைவனம். நம் பூமியின் தட்ப வெட்ப நிலையை நீர்ணயிப்பதில் இது ஒரு மிக பெரிய பங்கு வகிக்கிறது. கடல் அதிக ஆற்றல் உடையது. அதன் ஆற்றலை அலைகள் மூலமாக கடற்கரை அருகே உணரலாம். ஆனால், கடல் பற்றி நமக்கு மிக குறைவாக தான் தெரியும். காற்றிற்கு அடுத்ததாக, பூமியில் மிக குறைவாக நமக்கு புரிந்த ஆற்றல் கடல்.

நீல திமிங்கலம், பூமியிலே மிக பெரிய விலங்கு. சுமார் 30 மீட்டர் நீளம் மற்றும் சுமார் 200 டன் எடை உடையது. முன்பு ஒரு காலத்தில் டைனோசர் (dinosaur) என்ற இராட்சச வகை விலங்கு வாழ்ந்து வந்தது. உலகிலேயே மிக பெரிய டைனோசரைவிட நீல திமிங்கலம் மிக பெரியது. அதன் நாக்கு ஒரு வளர்ந்த யானையைவிட பெரியது. அதன் இருதயம் ஒரு கார் (car) அளவு இருக்கும். அதன் சில இரத்த நரம்புகளின் உள் உங்களால் நீந்த முடியும். அதன் வால்மட்டும், ஒரு சிறு விமானத்தைவிட பெரியது. மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அதனால் நீந்தமுடியும். கடலில் மிக வேகமான விலங்குகளில் அது ஓன்று. ஆனால் இந்த மாபெரும் விலங்கு கூட, கடலின் அளவை வைத்து ஒப்பிட்டு பார்த்தல், மிக சிறியது.

உலகின் மிக பெரிய விலங்கான நீல திமிங்கலம், மிக சிறிய கூனி மீன்களை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறது. ஒரு நீல திமிங்கலம் ஒரு நாளைக்கு சுமார் 4 கோடி கூனி மீன்களை சாப்பிட வேண்டும். நீல திமிங்கலம் இவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை பற்றி நமக்கு மிக குறைவாகத் தான் தெரியும். அது எந்த இடங்களுக்கு வந்து செல்கிறது என்பது முழுமையாக நமக்கு தெரியாது. அவை எந்த இடத்திற்கு இனப்பெருக்கம் செய்ய போகிறது என்பது மிக பெரிய கேள்வி. கடல் பற்றி நமக்கு எவ்வளவு குறைவாக தெரியும் என்பதை நீல திமிங்கலம் நமக்கு நினைவுபடுத்துகிறது.

பெரும்பான்மையான உயிரினங்கள் கடற்கரை அருகே தான் வாழ்ந்து வருகின்றன. அதிக சூரிய வெளிச்சம், கடல் தரை வரை இந்த பகுதியில் செல்வதால், இவ்விடங்கள் உயிரினங்கள் வாழ தக்க இடமாக இருக்கிறது. பவள பாறைகள் இவ்விடங்களில் அதிகமாக காணலாம். அந்த பவள பாறைகளை அடைக்கலமாக பயன்படுத்தி பல உயிரினங்கள் வாழ்கின்றன.

கடற்கரை அருகே பல உயிரினங்கள் வாழ்வதால், அங்கு தங்க இடம் எளிதில் கிடைக்காது. போட்டி மிக அதிகமாக இருக்கும். அங்கு வாழ தனிப்பட்ட திறன் வேண்டும். குறிப்பாக இப்போது பிறந்த புது மீன் குட்டிகளுக்கு இது வாழ மிக கடினமான இடம். மிக எளிதில் வேறு மீன்களுக்கு இறையாகிவிடும். இவ்விடங்களில் வாழும் பெரும்பான்மையான விலங்குகளின் பெற்றோர், அதன் குழந்தைகளை மிக கவனமாக அருகில் இருந்து பாதுகாக்கின்றன.

குட்டி மீன்கள் பிறந்ததும், பல நாட்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எனவே பெரும்பான்மையான மீன்கள் முட்டையிட வேறு இடத்தை நாடும். நிலத்தில் உள்ள ஆறு, கடலுடன் சேரும் இடம் காயல். காயல்களில் பல மீன்கள் முட்டையிட வரும். சில மீன்கள் காயலை தாண்டி, ஆறுகளுக்கே சென்று முட்டையிடும். காயல்கள் மீன் குட்டிகள் வளர்ந்து பெரிதாவதற்கு ஒரு அருமையான இடம். அவற்றை வேட்டையாட பெரிய மீன்கள் இங்கு இருக்காது. இந்த குட்டிகள் பெரிதானதும் கடலுக்கு சென்றுவிடும்.

கடற்கரையை தாண்டி உள் சென்றால், பரந்து விரிந்த நீல கடலை காணலாம். எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால், இந்த இடங்கள் ஒரு வறண்ட பாலைவனம். இங்கு உயிரினங்களை பார்ப்பதே மிக அபூர்வம். ஆனால், வேட்டையாடும் சுறா, சூரை மீன், திமிங்கலம் போன்ற பல திறமைவாய்ந்த வேட்டைக்கார மீன்கள் இங்கு தான் வாழ்கின்றன. அவை உணவை தேடுவதே கடினம். இரை கடல் முழுவதும் படர்ந்து கிடக்கும். இவற்றின் பெரும்பான்மையான உணவு சாளை மற்றும் மத்தி போன்ற மீன்கள். இங்கு வாழும் வேட்டைக்கார மீன்கள், என்றும் முடியாத இரை தேடலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் வேட்டையாடும் விலங்குகள் தான் வேட்டையாடப்படும் விலங்குகளைவிட மிக கடினமாக உழைக்க வேண்டும். இது கடலுக்கும் பொருந்தும்.

கடலில் அடிப்படையாக கிடைக்கும் உணவு பிளங்டன் (Plankton). அதை நம்பி தான் எல்லா உயிரினங்களும் வாழ்கின்றன. அவற்றை சாளை மற்றும் மத்தி போன்ற மீன்கள் உண்ணும். அவற்றை தான் பெரிய மீன்கள் வேட்டையாடும். பூமி வெப்பமடைவதால், பிளங்டன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே மொத்த கடலும் பாதிக்கப்படும். பிளங்டன் தான் கடலின் உயிரினத்தை நிர்ணயிக்கிறது. நிலத்தில் உள்ள தாவரங்கள் போன்று. நிலத்தில் தாவரம் இல்லாமல் உயிரினம் இல்லை. அதைப்போன்று கடலில் பிளங்டன் இல்லாமல் உயிரினம் இல்லை.

மீன்கள் மட்டும் அல்ல, பல விலங்குகளும் கடலில் உள்ள உணவை சூறையாட சென்றுள்ளது. திமிங்கலங்கள் மீன் வகையை சார்ந்ததல்ல. அவை நிலத்தில் இருந்து கடலில் உள்ள உணவை நாடி கடலுக்கு சென்றவை. நீர் நாயும் அப்படி தான். பறவைகளிலும் சில கடல் உணவை நம்பி வாழ்கின்றன.

ஆல்பர்ட்ராஸ் (Albatross) என்ற பறவை முட்டையிட மட்டுமே நிலத்திற்கு வரும். பறவைகளிலேயே இதன் இறக்கைகள் தான் மிக பெரியது. மாலுமிகள் கடலின் உள் வெகுதூரத்தில் இந்த பறவைகளை பழங்காலத்திலேயே பார்த்துள்ளனர். கடல் மேல் இவை பறந்துகொண்டே இரையை தேடும். வெகுதூரம், மற்றும் வெகுநேரம் பறப்பதில் இந்த பறவைகள் தான் ராஜா.

இப்படி கடல் பல்வேறு வகையான விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. மிக பெரிய நீல திமிங்கலத்தில் துவங்கி, கண்ணுக்கு தெரியாத பிளங்டன் வரை இங்கு வாழ்கிறது.

பூமி தோன்றியபோது, பூமியில் நீர் இல்லை. கடல்கள் இல்லை. பூமி ஒரு நெருப்பு பந்தாக இருந்தது. பூமியின் பரப்பு குளிர சில நூற்றாண்டுகள் ஆகின. அதன் பின் வால்நட்சத்திரங்கள் (comet) பல பூமியுடன் மோதின. அந்த மோதல் நிகழ்வின் பெயர் “பிந்தைய கனமான தொடர் தாக்குதல்கள்” (Late Heavy Bombardment). இது 410 கோடி முதல் 380 கோடி ஆண்டுகள் தான் நடந்தது. இந்த வால்நட்சத்திரங்கள் தண்ணீரை பூமிக்கு எடுத்து வந்து முதல் கடல்களை உருவாக்கியது. இந்த நிகழ்வுக்கு முன்பாகவே பல வால்நட்சத்திரங்கள் பூமியை தாக்கியுள்ளது. சுமார் 422 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமியில் கடல் இருந்ததை பூமியின் பழமையான பாறைகள் காட்டுகிறது. ஆனால் அந்த துவக்க கால கடலில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்பது தெரியவில்லை.

பூமியில் உயிர் வாழ முக்கிய கூறு நீர். கண்டங்கள் நகருவதற்கு மிக முக்கிய மசகுப் பொருள் (lubricant) நீர். வேறு சில கிரகத்தில் நீர் கண்டுபிடிக்கப்பட்டாலும், பூமியில் அது வகிக்கும் பங்கு மிக முக்கியமானது.

இன்று பூமியில் பெரிய கடல் பசிபிக் (Pacific). ஆனால் அது எப்போதும் அப்படி இல்லை. பூமியில் உள்ள கண்டங்கள் நகர்வதால், கடல்களும் நகர்ந்து வருகிறது. இதனால் இன்றைய பெரிய கடலான பசிபிக் சுருங்கிக்கொண்டே வருகிறது. கண்டங்கள் வருடத்திற்கு சுமார் 3cm நகர்ந்து வருகின்றன. இன்னும் சில கோடி ஆண்டுகளில் அது முழுமையாக மூடிவிடும். இன்றைய அட்லாண்டிக் (Atlantic) பெருங்கடல் அப்போது உலகின் பெரிய கடலாக மாறும்.

இப்படி கடல்கள் பலமுறை அழிந்து, உருவாகி வந்துள்ளது. சுமார் 25 கோடி ஆண்டுகள் முன் டெத்திஸ் (Tethys) என்ற பெருங்கடல் இருந்தது. அது இன்று சுருங்கி மத்தியத் தரைக் கடல், செங்கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் போன்ற கடல்களாக மாறியுள்ளன. பெரிய கடலில் உள்ள உப்பு அனைத்தும் அது சுருங்கியபோது ஒரே இடத்தில் அடர்த்தியாக இருப்பதால் தான் சாக்கடலில் உப்பு அதிகமாக உள்ளது. அதனால் தான் அங்கு மனிதர்கள் தண்ணீரில் மிதப்பார்கள். டெத்திஸ் பெருங்கடல் இருந்ததற்கான கடைசி அடையாளங்களும் இன்னும் சில கோடி ஆண்டுகளில் அழிந்துவிடும்.

பூமியின் கடல் நீரோட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது..

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.