தொடர்புடைய கட்டுரை


கனிம எண்ணெய்

பி.ரெ. ஜீவன்

10th May 2019

A   A   A

வேறு எந்த கிரகத்திலும் கிடைக்காத, பூமியில் மட்டுமே கிடைக்கும் அற்புத பொருள் எண்ணெய். இந்த பொருள் பூமியை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக்குகிறது.

பூமி உருவான போது இங்கு எந்தவித எண்ணெய்யும் இல்லை. முதலில் எண்ணெய் தோன்ற ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வு உயிரினங்கள் உருவானது தான். உயிர் இல்லையேல், எண்ணெய்யும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் துவங்கி, எரிபொருளாக பயன்படுத்தும் எண்ணெய் வரை எல்லாம் உயிரினங்களில் இருந்து தான் வருகிறது. இந்த கட்டுரை எரிபொருளாக பயன்படுத்தப்படும் எண்ணெய்யை பற்றியது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள் மக்கி போவதால் நிலக்கரி மற்றும் எரிபொருள் எண்ணெய் உருவாகிறது. ஏன் சில உயிரினங்கள் நிலக்கரியாகவும், சில எரிபொருள் எண்ணெய்யாகவும் மாறுகிறது?

மரங்கள் நிலத்தடியே புதைந்து பல கோடி ஆண்டுகள் ஆகும் போது சில நேரங்களில் படிமமாகவும், மற்றும் நிலக்கரியாகவும் மாறுகிறது. இறந்த மரங்களை கரையான் போன்ற பூச்சிகள் அரித்து நாசமாக்குகிறது. ஆனால், பூமியில் முதலில் மரங்கள் தோன்றியபோது கரையான்கள் போன்ற பூச்சிகள் இல்லை. அவைகள் பிற்காலத்தில் தோன்றிய பூச்சிகள். எனவே அந்த மரங்களை மக்க வைப்பதற்கான திறன் எந்த விலங்கிடமும் இல்லை. அந்த துவக்கக்கால மரங்கள் மெதுவாக மண்ணுக்கு அடியில் சென்று, பல கோடி ஆண்டுகளாக அங்கு இருந்து, நிலக்கரியாக மாறியுள்ளது.

கடலடியில் பல விலங்குகள் வாழ்கின்றன. அவை இறந்த பின் கடல் அடியில் அவற்றின் உடல்கள் ஒதுங்குகின்றன. அவை அங்கேயே மக்கி, வேறு விலங்குகளால் உண்ணப்பட்டு, அவற்றின் முடிவும் அதே கடல் அடியில் தான் இருக்கும். இப்படி கடல் அடியில் மக்காமல் இருக்கும் பல விலங்குகளின் எச்சங்கள் தான் எரிவாயு மற்றும் எண்ணையாக மாறுகிறது.

எண்ணெய் கிடைக்கும் பெரும்பான்மையான கிணறுகள் ஒரு காலத்தில் கடல் அடியில் இருந்தவைதான். இயற்கையாக கண்டங்கள் நகர்வதால் ஏற்படும் இந்த எண்ணெய் எடுப்பை முன்பு ஒரு கட்டுரையில் பார்த்தோம். ஆனால் இன்று அதை மனிதர்கள் வெளியே எடுத்து எரிக்க துவங்கியுள்ளதால், பூமி அதிகமாக வெப்பம் அடைகிறது.

எண்ணெய் இன்று அனைவரின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. பெரும்பாலும் போக்குவரத்துக்காக. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் இன்று எண்ணெய்யை வைத்து தான் இருக்கிறது. இதை வைத்து பலர் மிக பெரிய பணக்காரர்களாக மாறியுள்ளனர். அதில் ஒருவர் மிக மிக பெரிய பணக்காரர் ஆனார்.

ஜான் டி ராக்பெல்லர் (John D. Rockefeller) ஒரு மிக சிறந்த எண்ணெய் வணிகர். இந்த வணிகம் மூலமாக உலகத்திலேயே பெரிய பணக்காரரானார். பில் கேட்ஸின் சொத்து மதிப்பை விட இவரின் சொத்து மதிப்பு 10 மடங்கு அதிகமானது. இவர் இறந்தபோது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு பணத்தைவிட இவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது. பின்பு அவரின் விருப்பப்படி அனைத்தும் தானமாக கொடுக்கப்பட்டது.

வேறு கிரகங்களில் எண்ணெய் இல்லாததால், அங்கு எரிபொருள் இல்லை. எனவே வேறு எந்த கிரகத்திலும் நெருப்பு கிடையாது. உயிர் இல்லாததால், அங்கு எண்ணெய்யும் இராது, மரம் போன்ற பொருளால் விறகும் இருக்காது. எனவே தீயும் பூமிக்கு தனித்துவம் வாய்ந்த ஓன்று. வேறு எந்த கிரகத்திலும் தீ எரியாது.

1875’இல் அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் முதன் முதலில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்ததும் இதன் உபயோகங்கள் தெரிந்தது. எளிதில் கிடைக்கும் மற்றும் அதிக ஆற்றல் தரும் எரிவாயு, கண்டுபிடித்து 100 ஆண்டுகளுக்குள் உலகின் முதன்மையான மாசுபடுத்தும் பொருளாக மாறிவிட்டது.

எண்ணெயால் ஏற்படும் மாசினால் பல உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்க படுகிறது. கடலில் எண்ணெய் கப்பல்கள் உடைவதால் ஏற்படும் பாதிப்பை பல ஆண்டுகள் ஆனாலும் சரிசெய்ய முடியாது. கடல்வாழ் உயிரினங்கள் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளன.

எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் மற்றொரு பொருள் பிளாஸ்டிக். ஏறக்குறைய அழிக்கமுடியாத தன்மையுடையது. இந்த அழியாத்தன்மை பல விஷயங்களுக்கு உபயோகமாக இருந்தாலும், அதே தன்மைதான் அதை மிக மோசமானதாகவும் மாற்றுகிறது. மலிவான விலையில் இதை தயாரிக்க முடியும் தன்மை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நம் போக்கு போன்றவற்றின் விளைவுகள் பூமியின் எல்லா உயிர்களையும் பாதித்துள்ளது.

சாதாரண சுற்றுலா தலங்களில் துவங்கி, உலகின் மிக உயரமான மலைகள் மற்றும் உலகின் மிக ஆழமான கடலடிவரை இவைகள் இன்று பரவியுள்ளது. கடலின் பல இடங்களில் பிளாஸ்டிக் பல கோடி கணக்கில் மிதக்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள பசிபிக் குப்பை இணைப்பு (pacific garbage patch) 1988இல் கண்டுபிடிக்க பட்டது. அங்கு குப்பை கடலின் மேல் 15,000,000 சதுர மீட்டருக்கு குவிந்து கிடக்கிறது. இதை எப்படி சுத்தம் செய்வது என்பது யாருக்கும் தெரியாது. இதை போன்று பல இடங்களில் கடலில் குப்பை குவிந்து இருக்கிறது. அண்மையில் வெளியான ஒரு ஆய்வு முடிவில் ஏற்கனவே கணக்கிட பட்டதைவிட 17 மடங்கு அதிகமாக குப்பை பசிபிக் குப்பை இணைப்பில் உள்ளதாம்.

நாம் பயன்படுத்தும் அன்றாடம் ஏற்படுத்தும் குப்பையில் பிளாஸ்டிக் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. நம் உணவையும் பிளாஸ்டிக்கையும் வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவில் நாம் இருக்கிறோம். குடிக்கும் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள், பிளாஸ்டிக் குப்பி, pvc குழாய் போன்ற பிளாஸ்டிக் மூலமாக தான் நமக்கு வருகிறது. உலகின் எல்லா பிளாஸ்டிக் குப்பியிலும் சிறு கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது. இவை நாம் தண்ணீர் அருந்தும்போது நம் உடலின் உள்ளும் செல்கிறது. இதன் விளைவுகள் என்னவோ?

நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்கிறோம். குப்பைகளை தினமும் வீட்டினுள்ளிருந்து அகற்றி துப்புரவாளரிடம் கொடுக்கிறோம். அதன் பின் அந்த குப்பை என்ன ஆகிறது என்பதை யோசிப்பதில்லை. அனைவரும் இந்த செயல்முறையின் முழு சுழற்சியை பாருங்கள். இந்த குப்பை பின்பு குப்பை மேட்டிலும், கடலிலும் குவிந்து விடுகிறது. அதை சுத்தம் செய்வது சுலபமான காரியமல்ல. அதற்கான நுட்பமும் நம்மிடம் இல்லை.

நம் குப்பையின் விளைவால் பூமி முழுவதும் பாதிப்படைகிறது. பல விலங்குகள், பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளன. திமிங்கலங்கள் பல பிளாஸ்டிகை உண்டு இறந்துள்ளது. கடலின் கண்ணுக்கு தெரியாத சிறு விலங்குகள் கூட, கண்ணுக்கு தெரியாத சிறு பிளாஸ்டிக் துகழ்களை உணவு என்று நினைத்து உண்டுவிடுகிறது. இந்த சிறு விலங்குகளை பெரும் விலங்குகள், அப்படி எல்லா விலங்குகளின் உணவு சங்கிலியில் இன்று பிளாஸ்டிக் உள்ளது.

இதை ஒரு நாளில் நம்மால் சரி செய்ய முடியாது. ஆனால் படிப்படியாக காலப்போக்கில் சரி செய்யலாம் என்று நம்புவோம். எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் இன்றைய உலகின் மிக பெரிய பிரச்சனை.

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.