தொடர்புடைய கட்டுரை


தீவுகளில் உயிர் தப்பிய அதிஷ்ட விலங்குகள்

பி.ரெ. ஜீவன்

16th Aug 2018

A   A   A

எரிமலை கடலினுள் வெடிப்பதால் உருவாகும் நிலங்கள், தீவுகள். இதை சுற்றி நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு தண்ணீர். ஆனாலும் தீவுகள் பல விலங்குகளுக்கு சோலைவனமாக திகழ்கின்றன. எப்படி செடிகளும், விலங்குகளும் முதலில் அங்கு வந்தது?

புதிதாக உருவான தீவுகள் முழுவதும் எரிமலை குழம்பு மெதுவாக குளிர்ந்து, புது பாறைகளாக காணப்படும். இந்த புது பாறையில் எந்தவித சிறு கற்களோ, மண்ணோ, தண்ணீரோ இருக்காது. இந்த நிலத்தை சுற்றி உப்பு தண்ணீர். ஆறுகளும் குளங்களும் இருக்காது. இவ்விடம் ஒரு சிறு பாலைவனமாக தான் இருக்கும். அப்போது எப்படி இங்கு முதலில் உயிரினம் தோன்றியது?

தீவுகளை சுற்றி இருக்கும் நீர் அதிக ஊட்டச்சத்துடையது. எனவே இங்கு பவளப்பாறைகள் பல செழிப்புடன் வளர்கிறது. அதை நம்பி பல்வேறு மீன்களும் வாழ்கிறது. ஆனால் இது கூட பலவகையில் சாத்தியமற்ற ஓன்று. பளப்பாறைகளின் வித்து எப்படி அங்கு முதலில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்தது? கடற்கரையை தாண்டி சில கிலோமீட்டர் சென்றால், கடலும் ஒரு பாலைவனம் தான். பெரிய வேட்டைக்கார மீன்கள் தான் இங்கு அதிகமாக காணப்படும். சிறு மீன்கள் இங்கு மிக எளிதில் வேட்டையாடப்படும். ஆனாலும், கடலில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுகளில் பல்வேறு சிறு வண்ண மீன்கள் காணப்படுகிறது. பவளப்பாறைகள், அதன் வித்துக்கள் மிக எளிதில் வேறு விலங்குகளால் உண்ணப்படும். அப்படி என்றால், தீவுகளை சுற்றி எப்படி அதிக வகையான வண்ண மீன்களும், பவளப்பாறைகளும் காணப்படுகிறது?

தாவரங்களின் விதைகள் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு காற்று வழியாக பரவும். சில செடிகளின் விதைகள் தண்ணீரில் மிதக்கும். இவை கடலில் விழுந்து மிதந்து வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்படும். காற்று, நீரோட்டம் என்ற இரு ஆற்றல், தீவுகளுக்கு முதலில் மீன்களையும், பவளபாறைகளையும், தாவரங்களையும் கொண்டு செல்கிறது. புயல், சுனாமி போன்றவை இதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு சிறு மீன், ஒரு தீவை போய் அடையும் வாய்ப்பு கோடியில் ஓன்று தான். இங்கு ஒரு புது உயிரினம் வருவதன் வாய்ப்பு மிக குறுகியது.

புது தாவர விதைகள் புது தீவை வந்து அடைந்தாலும், அது முளைத்து செடியாக வருவதும் மிக கடினம். அங்கு உப்பு நீர் தான் இருக்கும். அந்த செடி முளைத்து வேர் விடுவதற்கு மண் இருக்காது. வெறும் பாறையில் பெரும்பான்மையான செடிகள் வளராது. உலகின் வேறு இடங்களில் சோலைவனத்தில் மட்டுமே காணப்படும் பல செடிகள், தீவுகளில் வளர்ந்துள்ளது. அதன் வேர்களை தண்ணீரற்ற கடின பாறைகளில் அவை ஊடுருவச்செய்துள்ளது.

அங்கு வரும் முதல் தாவரங்கள் தீவுகளை செழிமையாக்குவதில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. அங்குள்ள பாறைகளை உடைத்து, மண்ணாக்குவதில் அந்த முதல் செடிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வெயில், காற்று, மழை மற்றும் தாவரங்கள் புது தீவுகளின் பாறைகளை சிறிது சிறிதாக உடைத்து அங்கு மண் உருவாகிறது. இது புது வகை தாவரங்கள் வருவதற்கு நல்ல சூழலை உருவாக்கி கொடுக்கும். இப்படி மெதுவாக பவளப்பாறைகள், மீன்கள் மற்றும் தாவரங்கள் தீவுகளில் வாழ துவங்குகிறது. இவற்றை தொடர்ந்து சிறு பூச்சிகள் காற்று வழியாக இங்கு பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது. இவை இங்கு வாழ்வதே ஒரு அதிசயம் என்று நினைத்தால், அதைவிட பெரிய அதிசயம் இங்கு விலங்குகள் வாழ்வது.

பெரிய விலங்குகள் பல தீவுகளில் வாழ்கிறது. அவை எப்படி அங்கு வந்தது? சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் மரங்களை உடைத்து கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லும். இந்த மிதக்கும் மரங்கள் பெரும்பாலும் கடலில் தொலைந்து அழிந்துவிடும். ஆனால், சில அதிஷ்டவசமாக தீவுகளை வந்து சேரும். இந்த மிதந்து வந்த மரங்களில் சில விலங்குகள் இருந்திருந்தால், அவை உயிர் தப்பி தீவுகளில் புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும். இப்படி தான் எல்லா தீவுகளுக்கும் முதலில் விலங்குகள் வந்தன.

பெரும்பாலுமான பெரிய தீவுகளில் வாழும் உயிரினங்களுக்கு அது ஒரு சொர்க்கபூமி. அங்கு வாழும் தாவரங்கள் அவைகளுக்கு அதிக உணவு கொடுத்துள்ளது. பெரும்பாலும் அவைகளை வேட்டையாட எந்தவித விலங்குகளும் அங்கு இருக்காது. எனவே இவை பயம் இல்லாமல், அதிக உணவை உண்டு வாழலாம். இந்த சுதந்திரம் மற்றும் வளம் சில விலங்குகளை மிகப் பெரிய அளவுக்கு பரிணாமத்தால் வளர செய்துள்ளது.

சில தீவுகளில் வேட்டையாடும் விலங்கே இல்லாததினால் அங்கு வாழும் விலங்குகளுக்கு மற்ற விலங்குகளை பார்த்து பயப்படும் தன்மை இருக்காது. அப்படிப்பட்ட தீவுகளுக்கு முதலில் வந்த மனிதர்களுக்கு, அந்த விலங்குகளை வேட்டையாடுவது மிக சுலபமாக போய்விட்டது. பல்வேறு விலங்குகள் மனிதர்கள் அந்த தீவில் வந்ததும் அங்கு அழிந்துவிட்டது.

சில தீவுகளுக்கு வேட்டையாடும் விலங்குகளும் வந்துள்ளது. பறவைகள் மிக சுலபமாக வந்துவிடும். ஆனால் பாம்பு போன்றவை வருவது கடினம். ஆனால் இன்று தீவுகளில் வாழும் உயிரினங்கள் ஒரு புது அபாயத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. அந்த அபாயம் மனிதர்கள். தீவுகளுக்கு மனிதர்கள் செல்லும்போது, அங்கு அவர்கள் புது விலங்குகளை அறிமுகப்படுத்துகின்றனர். ஆடு, மாடு, நாய், எலி, எறும்பு, கரப்பான் பூச்சி போன்ற பல விலங்குகளை மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தீவுகளில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது புது அழிவை அங்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு (Christmas Island) நண்டுகளுக்கு பிரபலமானது. அந்த மொத்த தீவும் பல்வேறு வகையான நண்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. சிகப்பு நண்டுகள் தீவின் நடுவிலிருந்து வருடத்திற்கு ஒரு முறை கடற்கரைக்கு முட்டையிட படையெடுத்துவரும். கோடிக்கணக்கான சிகப்பு நண்டுகள் அங்கு கூட்டம் கூட்டமாக செல்வது பூமியின் மிக அழகிய காட்சிகளில் ஓன்று. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வு அங்கு பிரமாண்ட நிகழ்வாக இல்லை. சிகப்பு நண்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்துவிட்டது. இதற்கு காரணம் மனிதர்கள் அங்கு அறிமுகப்படுத்திய எறும்புகள். இன்று எறும்புகள் அந்த தீவை ஆக்கிரமித்துள்ளது. அவை நண்டுகளை வேட்டையாடி உண்கிறது. அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.

காலாபாகோஸ் (Galapagos) தீவுகளில் மனிதர்கள் அறிமுகப்படுத்திய ஆடுகள், அங்கிருக்கும் செடிகளை நன்றாக உண்டு வளர ஆரம்பித்துவிட்டது. காலாபாகோஸ் தீவுகளில் வாழும் பிரமாண்ட இராட்சஸ ஆமைகள் உண்ணவேண்டிய அனைத்து தாவரங்களையும் அவை உண்டுவிட்டன. எனவே அந்த ஆமைகள் அங்கு அழிந்து வந்தது. இன்று அங்கு இருந்த எல்லா ஆடுகளையும் நாம் கொன்றுவிட்டோம். ஆமைகள் மறுபடியும் நன்றாக வளர துவங்கிவிட்டது. ஆடுகளால் ஏற்பட்ட சேதத்தை நாம் சரிசெய்துவிட்டோம். ஆனால் எறும்புகள், கரப்பான் பூச்சி, எலி போன்றவற்றை ஒரு முழு தீவிலிருதே அழிப்பது மிக கடினம்.

கடந்த 500 ஆடுகளில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலை எடுத்து பார்த்தால், அதில் ஏறக்குறைய 80% விலங்குகள் தீவுகளில் வாழ்ந்தவை. ஆயினும் மனிதர்கள் ஏற்படுத்திய அழிவை நாம் சரிசெய்ய முயன்று வருகிறோம்.

தீவுகளில் வளங்கள் பல இருந்தாலும், அதிலுள்ள வளங்கள் மிக குறைவு தான். ஒரு தீவில் குறிப்பிட்ட அளவு செடிகள் தான் வளரமுடியும். இந்த செடிகள் சிறு விலங்குகளுக்கு புதியதாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் மிக பெரிய விலங்குகள் தீவுகளில் மாட்டிவிடுகிறது. அவைகள் அதன் உடலமைப்பை பரிணாமத்தினால் சிரியதாக்கிக்கொண்டால் தான் வாழ முடியும். எனவே சில தீவுகளில் விலங்குகள் தங்களை சிறிதாக்குகின்றன, மற்றும் சில தீவுகளில் விலங்குகள் தங்களை பெரிதாக்குகின்றன.

காலாபாகோஸ் தீவுகளின் இராட்சஸ ஆமைகள் பெரிதானதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உடலை சிறிதாக்கிய விலங்குகள் இன்று பல வாழ்ந்து வருகிறது. ஆனால் இன்று வாழ்வதை விட, அழிந்துபோன சில விலங்குகள் மிக பிரமிக்கவைக்கும் அளவில் இருந்தன. அவற்றை பற்றி அடுத்த மாதம் பார்க்கலாம்.

தீவுகளுக்கு எப்படி உயிரினங்கள் வந்தது, என்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறது என்பதை பற்றி பார்த்தோம். அடுத்த மாதம் அங்கு வாழும் விசித்திர விலங்குகளை பற்றி பார்க்கலாம்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.