தொடர்புடைய கட்டுரை


குந்தி தின்றால் குன்றும் கரையும்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

20th Sep 2018

A   A   A

உலகில் இன்று வாழும் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 700 கோடி ஆகும். இந்த பூமியில் வாழ்ந்தவர் கோடிமறைந்தவரும் கோடி. பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களும் உலகில் சில நாடுகளில் வாழும் பணக்காரர்களைப்போல் வாழ நினைத்துவிட்டால் இந்த பூமி தாங்காது என்கிறார்கள் அறிஞர்கள்.  140 கோடி ஆடம்பர மனிதர்களை வாழவைக்கும் சக்தி தான் இந்த பூமிக்கு இருக்கிறது. ஆடம்பரம் எதுவும் இல்லாமல் வாழ கூடிய 400 கோடி மனிதர்களை மட்டுமே இந்த பூமியால் வாழவைக்க முடியும் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த பூமியில் ஒவ்வொருகணமும் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான திரைப்படங்களும், விளம்பரங்களும் ஆடம்பர வாழ்க்கைக்குதான் நம்மை இழுத்துச்செல்ல முயல்கின்றன. எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை, என்று வாழும் மனிதர்களால் சுற்றுச்சூழல் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. இன்னும் பல பிரச்சனைகளும் அவர்களால் ஏற்படுகின்றது. அவரவருக்கு அவரவர் காரியம்தான் முக்கியம் என்று இருந்துவிட்டால் பிறகு இந்த பூமியில் ஒரு இயக்கமும் நடைபெறாமல் அசைவற்று நின்றுபோய்விடும்

இருப்பவன், இல்லாதவன் என்ற வேறுபாடு, இந்த இரு வர்க்கத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகரித்து கொண்டே செல்வது, வன்முறைகள், தீவிரவாதம், அதிகாரமோகம், பதவிக்காக எதையும் செய்யத்தயங்காத போக்கு, எல்லாவற்றிலும் பணம் பண்ணும் வெறி, ஊழல், நிதிச்சுமை, பொருளாதார சீர்க்கேடு என்று சூழலோடும், உலக உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும் எத்தனையோ பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் நமக்கென்ன என்று இருந்த மனிதர்கள் இப்போதெல்லாம் எனக்கென்ன? என்று வாழ தலைபட்டுவிட்டார்கள்.

இன்னும் சில பத்தாண்டுகளில் தீர்ந்துபோய்விடும் என்று உறுதியாக தெரிந்த பெட்ரோலிய எரிபொருள்களை தெரிந்தே எந்தவிதமான கவலையும் இல்லாமல் எரித்து தீர்த்து வருகிறோம். இனிவரும் காலங்களில் பெட்ரோல் போட வாகனங்களை பெட்ரோல் நிரப்பித்தரும் நிலையங்களுக்கு கொண்டுபோய் பெட்ரோல் போடுவதைப்போலவே நம் அன்றாட அவசியங்களுக்காக தண்ணீரையும் பிடித்துக்கொண்டு வரும் நிலை ஏற்படப்போகிறதுநீர்வளங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன என்பது தெரிந்தும் அதை வீணாக்குகிறோம்அரைவயிறும், கால்வயிறும், வெறும்வயிறுமாக லட்சக்கணக்கான சக மனிதர்கள் தினம்தோறும் படுக்க செல்கிறார்கள் என்று தெரிந்தும் விருந்துகளிலும், திருமணங்களிலும் ஆடம்பரங்களை நிறுத்துவதில்லை. தேவைக்கதிகமாக தயார் செய்து உணவை தெருவில் கொண்டுபோய் கொட்டுகிறோம். சாலையில் சாராயத்தை குடித்துவிட்டு சாலையோரமாக கிடக்கும் நாய்களை மட்டுமில்லை மனிதர்களையும் சாகடிக்கிறோம். போலி கௌரவம் பார்த்து அடுத்த வீட்டுகாரர்களிடம் பெருமை அடித்துக் கொள்வதற்காக தேவையில்லாமலேயே பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம். அதன் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அதை குப்பையில் வீசியெறிகிறோம்

தெருவில் நடக்கும்போதே வாயில் ஊறும் எச்சிலை அப்படியே துப்புகிறோம். குப்பைத்தொட்டி வைத்தாலும்கூட குப்பையை அதில் போடமறுக்கிறோம்தும்மும்போதும், இருமும்போதும் கையை வாயில் வைத்து செய்வதற்கு கூட நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை

அற்புதமான இந்த பூமியில் இயற்கை மனிதருக்கு கொடுத்திருக்கும் அருமையான வளங்களான மூலதனத்தை வைத்துக்கொண்டு பிழைக்கத்தெரியாமல் குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பதை மறந்து விதை நெல்லையும் தின்று அழித்துவருகிறோம்சூழல் ஆர்வலர்கள், அறிவியல் அறிஞர்கள், ஊடகங்கள் அனுதினமும் சொல்வதையெல்லாம் யாருக்கோ என்று நினைத்து காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. மாறாக, போலி சாமியார்களையும், மந்திர தந்திரங்களையும் தேடி தேடி ஓடுகிறோம். யாராவது புதிதாக குதித்துவந்து இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைப்பார்.. நமக்கென்ன.. என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நிலைமைகள் எல்லை மீறி போய்விட்டால் மீட்டு கொண்டுவர முடியாது.. அப்புறம் எதுவுமே செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொள்ள மறுக்கிறோம். ‘மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றிவைக்கும் வளங்களை இந்த பூமி பெற்றிருக்கிறது.. ஆனால் மனிதர்களின் பேராசைகளை அதனால் நிறைவேற்ற முடியாதுஎன்று பல ஆண்டுகளுக்கு முன்பே வளங்களை சுரண்டிவாழும் நம்மை பற்றி சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. சூழல் நிலைகள் சீர்கெட்டு போய்க்கொண்டே இருக்கிறது. இப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பின் எதுவுமே செய்யமுடியாமல் போய்விடும். இப்போதே விழித்துக்கொள்வோம்.. இனியாவது சிந்தித்து செயல்படுவோம்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.