உண்மை நிலை

Dr. பா. நாகராஜன்

06th Jul 2019

A   A   A

ஆறு வாரங்களுக்கு முன்பு என் கலந்தாலோசனை அறைக்கு 25 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணை பெற்றோரும் அவளது சகோதரியும் கூட்டி வந்தனர். நெற்றியில் ஏகப்பட்ட சுருக்கங்களும் நிலைத்து நின்ற மருண்ட பார்வையும் முகத்தில் சுளிப்பும் தொடர்ந்து இருந்தன. அதாவது, இதுவரைக்கும் அவள் சிரித்திருக்கவே மாட்டாளோ எனும் பாவனையில் அவள் முகம் இருந்தது. அவளுடைய வாழ்க்கையின் மறுபக்கம் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

பெற்றோர்க்கு இரண்டு பெண்கள், ஒரு பெண் கல்யாணமாகி சந்தோசமாக குடும்பம் நடத்துகிறாள். இந்த பெண் திருமணம் முடிந்து ஒன்றைரை மாதங்களிலேயே தாய் வீட்டுக்கு திரும்ப நேர்ந்திருந்தது. இவள் மணமுடித்த பையன் ‘ஓர் கூட்டுறவு வங்கியில் வேலை’ தினமும் 40 கிலோமீட்டர் பைக்கில் பயணிப்பவன், மணவாழ்க்கை இன்பமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் இப்பெண்ணின் கணவன் சாலை விபத்தில் நினைவை இழந்து 4, 5 எலும்பு முறிவுகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்ச்சை அளிக்கப்பட்டது. தலைக்காயம் மூளையில் இரத்தக்கட்டு உணர்விழத்தல், எலும்பு முறிவுகள் இவை அனைத்தும் சேர்ந்து பத்து நாட்கள் அவசர சிகிட்சை பகுதியில் வைத்து சிகிட்சை அளித்துள்ளனர்.

அந்த பத்து நாட்களும் இப்பெண்ணை பையன் வீட்டார் தன் கணவனை பார்க்க அனுமதிக்க வில்லை. சிகிட்சை முடிந்தபின் ஒன்றரை மாதங்கள் கழித்து கணவன் வீட்டில் சில வாரங்கள் இருந்திருக்கிறாள். இவளது குடும்பத்தினர் அந்த தனியார் மருத்துவ மனையில் அவருக்கு சிகிட்சை அளித்த மருத்துவரிடம் விபரம் கேட்டதற்கு, இனி அவரால் மணவாழ்க்கையில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர். இப்பெண் தன் கணவர் வீட்ட்டில் இருந்த அந்த சில வாரங்களில் மாமியார் இப்பெண்ணிடம் உன்னால்தான் என் மகனுக்கு இம்மாதிரி விபத்து ஏற்பட்டது, உன் ராசி பலன் உன் ஜாதக பலன் சரியில்லை என திட்டி தீர்த்துள்ளார். பெற்றோர் இவருக்கு போட்ட நகைகளில் கொஞ்சம் விற்றும், கொஞ்சம் அடமானத்திலும் இருப்பதாக தெரியவருகிறது.

அவள் நிலை அறிந்து அதற்குண்டான மருந்துகளை கொடுத்து பின்னர் ஒரு வாரம் கழித்து வர்ச் சொன்னேன். ஒரு வாரம் கழித்து வந்தபோது பேசா மடந்தையாக இருந்த பெண் பேசி நெற்றி சுருக்கங்கள் குறைந்து பார்வை சகஜ நிலைக்கு திரும்பும் நிலையில் இருந்தாள். பெற்றோரின் கோரிக்கை தன் கணவரின் நினைவுகளை இவள் மறந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதற்குரிய மருந்துகள் கொடுத்து அறிவுரை சொன்னால் கேட்கும் அளவுக்கு குணமாகி வந்தாள். பொதுவாக மனநல மருந்துகள் சில பக்கவிளைவுகளை கொண்டதாகும். ஆனால் அவை நிரந்தரமானது அல்ல. மருந்துகளை குறைத்தால் அல்லது மாற்றி கொடுத்தால் சரியாகக் கூடியதே.

இடையில் இவள் வாழ்வின் திருப்புமுனைக்காக இவளது பெற்றோர் ஓர் அரசியல்வாதியிடம் வேலைக்கென ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான நேர்முக தேர்வு ஒரு வாரத்தில் இருப்பதாக கூறியதால் வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை நிறுத்தி பக்க விளைவுக்கான மருந்துகளை கொடுத்தேன். மீண்டும் கணவரின் நினைவும் கணவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் தலை தூக்கியது. அந்த நேர்முகத் தேர்வும் வேலையும் ஏமாற்று என தெரிந்ததால் மீண்டும் அப்பெண்ணை என்னிடம் அழைத்து வந்தனர்.

இந்த நபரின் கதையின் மூலம் தெரிந்து கொண்டது என்னவென்றால்…

இப்பெண் திருமணத்திற்கு முன் வேறு ஆடவரிடம் கூச்சமின்றி சகஜமாக பேசும் தன்மை கொண்டவரல்ல. இதுவரை எந்த ஆணிடமும் சிரித்து பேசியதில்லை. அவள் வீட்டார் பக்தி, பூஜை, புரஸ்காரம், அதிக சம்பிரதாயம் கொண்டவர்கள். கல்லூரிக்கு சென்று பட்டபடிப்பு முடித்திருக்கிறாள். பெண் சமூகம் பற்றிய தனிவாழ்வு பற்றிய, எதிர்காலம் பற்றிய முடிவுகள் எடுக்க தெரியாத அளவுக்கு அறிவில்லாதவளாக வளரவில்லை இவள். தன் கணவன் திருமண வாழ்க்கைக்கு அதாவது தாம்பத்தியத்திற்கு தகுதியற்றவனாய் ஆகிவிட்ட போதிலும் அவனை பிரிய முடியவில்லை இவளால்.

இவளது பெற்றோருக்கு இவர் கருவுற்றிருக்கவில்லை என்பதில் சந்தோஷம், நகைகள் போனாலும் பரவாயில்லை, ஒருவேலை கிடைத்து திருமணத்தையும், கணவன் வீட்டையும் மறந்திருந்தால் போதும், மீண்டும் ஒரு திருமணத்தை நடத்திய முடித்து விடலாம் என்று நினைக்கின்றனர். இப்பெண்ணோ தன்நிலை, பெற்றோரின் மனநிலை, கணவரின் உடல்நிலை, மாமியார் மாமனாரின் உடல்நிலை ஆகியவற்றை சரிவர புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தாள்.

இரண்டு மூன்று மாதங்களில் இதை உணர்ந்து எதிர்காலத்தில் தன் வாழ்க்கைக்கு பெற்றோர் கூறும் முடிவே சரியானது என அவளை நினைக்க வைக்க முடியுமென நம்புகிறேன்.

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.