வாட்சப் உபயோகித்தால்..?

Dr. பா. நாகராஜன்

12th Aug 2018

A   A   A

சில வாரங்களுக்கு முன்பு ஓர் தனியார் மருத்துவமனை அவசர சிகிட்சை பிரிவுக்கு அழைக்கப்பட்டேன். மிக சிக்கலான நோயாளிகளை பார்க்கும் பகுதியில் ஒரு பெண்ணிற்கு சிகிட்சைக்கு அழைத்து வந்தார்கள். 20 வயது பெண் அவள். அவசர சிகிட்சையில் இருந்து தெளிவு பெற்று சகஜமாக பேசும் நிலையில் இருந்தாள். என்னிடம் சிரித்துக்கொண்டே பேசும் அளவுக்கு தெளிவான நிலையிலேயே இருந்தாள். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன் தலைவலி, காய்ச்சல், கை கால் வலிக்கு சாப்பிடும் பாராசெட்டமால் மாத்திரைகளை 36 சாப்பிட்டு இருந்தாள். தற்கொலை முயற்சியாம். காரணம் காதலித்த பையன் இன்னும் இரண்டு வாரத்தில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் முடிக்கப் போகிறானாம். ஒரு வருடமாக காதலித்துக் கொண்டிருந்தார்களாம்.

அதன் விபரத்தை முழுமையாக கேட்டறிதேன். காதல் முழுவதுமே வாட்சப்பில் ஆரம்பித்து, வாட்சப்பிலே தொடர்ந்து, வாட்சப்பிலேயே முடிந்து, அவன் கல்யாணத்திற்கும், இவள் கருமாதிக்கும் வரவேற்புரை எழுதியிருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அந்தப் பையனை நேரில்கூட பார்த்ததில்லையாம். கடற்கரை, சினிமா தியேட்டர், மால் என்று எங்கேயும் சுத்தாமல், ஒரு மாய காதலில் ஆரம்பித்து உண்மையான தற்கொலையில் முடிக்கும் அளவிற்கு அந்தப் பெண் சென்றுள்ளார். இனி அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவாக மருத்துவ செலவு இருக்க வாய்ப்பில்லை.

காதலில் மூளை வேலை செய்யாது என்று எல்லோருக்குமே தெரியும். இந்த அளவிற்கு அடிமட்டத்திற்கு மூளை போகுமா என எனக்கு தெரியவில்லை. இப்பெண்ணின் விஷயத்தில் அவ்வாறே நடந்துள்ளது. இப்பெண்ணுடைய வாட்சப் காதலன் ஏதோ பொழுது போக்கிற்காக இவளிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறான். அவன் தனது மணப்பெண்ணை பார்க்க செல்லும் போதோ, நிச்சயம் முடிக்கும் முன்போ அல்லது பின்னரோ கூறாமல் மிகவும் தாமதித்து கல்யாணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே கூறியிருக்கிறான்.

இவ்வளவு ஆன பின்பும் அப்பெண் என்னிடம் பேசும்போது தன் வாட்சப் காதலனை விட்டுக்கொடுக்க மனமில்லாதிருந்தாள். மிகவும் இக்கட்டான நிலையில் தான் அவன் என்னை கைவிட்டு இருக்கக் கூடும் என தெரிவித்தாள். இவ்வளவு அப்பாவி பெண்கள் இருக்கும்வரை பொழுதுபோக்கு காதலன்களுக்கு சரியான வேட்டை தான்.

நான் அந்த பெண்ணிடம், பெற்று இதுவரை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்த பெற்றோரை எப்படி கண நேரத்தில் தூக்கியெறிந்து உயிரையும் துச்சமென மதிக்கக் கூடிய நிலைக்கு செல்கிறீர்கள் என கேட்டதற்கு அவளிடமிருந்து புன்சிரிப்பு மாத்திரமே வெளி வந்தது. அவசர சிகிட்சை பிரிவில் அதிக நேரம் கௌன்சலிங் செய்ய முடியாது என்பதால் சாதாரண அறைக்கு மாற்றிய பின்பு வருகிறேன் என கூறி வந்தேன். அவளது தற்கொலை முயற்சியை மாற்றுவதற்கான மாத்திரைகள் கொடுத்து இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டும் என கூறினேன்.

அடுத்ததாக எனது கலந்தாலோசனை அறைக்கு ஒரு மாதமாக வந்துகொண்டிருக்கும் 18 வயது பெண்ணை கூட்டி வந்திருந்தார் அவரது தாயார். அந்தப் பெண் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிக்கு செல்வதில் குழப்பம். படிக்கவும் முடிவதில்லை. அதற்கு சிகிட்சை அளித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை.

நான் அந்தப் பெண்ணின் தாயாரிடம் இம்மாதிரி இப்பெண்ணிற்கு குழப்பம் நேர்ந்ததன் காரணத்தை கூற முடியுமா என கேட்டதற்கு, எங்களது வீட்டில் யாருமே சரியாக தூங்குவதில்லை, சரியாக சமைப்பதுவும் உண்பதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக எதுவுமே சரியில்லை என கூறினார். அதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு மிகவும் தயங்கியபடி, இவள் என்னுடைய இளைய மகள். மூத்த மகளின் விவகாரம் ஒரு பெரிய தனி கதை என கூறினார். மிகவும் வற்புறுத்திய பின்னரே சொன்னார்.

இவரது மூத்த மகள் பி.இ. மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். பாலிடெக்னிக் முடித்து ஒரு அரேபிய நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பையனுடன் வாட்சப் மூலமாக தொடர்பு கொண்டிருக்கிறாள். எப்பொழுதெல்லாம் அவன் ஊருக்கு வருகிறானோ அப்பொழுதெல்லாம் சென்று பார்த்து சுற்றித்திரிந்து காதலிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இவர்கள் குடும்பத்தினர் இந்து மதத்தில் தீவிர பற்று உள்ளவர்கள். இவள் காதலித்த பையனோ இஸ்லாம் மதத்தை சார்ந்தவன்.

இவர்கள் எந்த மதமாய் இருந்தாலும் பரவாயில்லை, மணமுடித்து கொடுத்துவிடலாம் என நினைத்து விசாரித்ததில் அந்த பையனின் குடும்பம் மிகவும் வசதி குறைந்தது என தெரிந்திருக்கிறது. திடீரென்று ஒருநாள் அப்பெண்ணை காணவில்லை. எங்கெல்லாமோ தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்துபோய் இருந்திருக்கிறார்கள். 40 நாட்கள் கழித்து அப்பெண் திரும்ப வந்திருக்கிறாள். பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் மனமுடைந்து திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. சிறு வயதில் இருந்தோ, ஆரம்ப பள்ளி படிப்பில் இருந்தோ, உயர் வகுப்பு வரும்வரை கட்டுக்கோப்பாக படிப்பையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் நாம் ஒரு முழுமையான நிலை வரும்வரை கடைபிடிக்க வேண்டுமென்பதை கற்றுக்கொள்ள முயல்வதில்லை என்றே எனக்கு கூற தோன்றுகின்றது. எனது நோயாளியான இளைய மகளின் பிரச்சனைக்கு காரணம் அப்பெண்ணின் தமக்கையே என்பது என் முடிவு.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.