தொடர்புடைய கட்டுரை

நெல்லைச்சீமையும் சாகித்திய அகாதமியும்

தமிழ்வானம் செ. சுரேஷ்

17th Jan 2019

A   A   A

இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக 1954 இல் அமைக்கப்பட்ட இந்திய அரசின் நிறுவனம்தான் சாகித்திய அகாதமி. இலக்கிய வளர்ச்சியின் வாயிலாகத் தேசிய ஒருமைப்பாட்டை வலுவாக்க முடியும் என்பது இதன் நோக்கமாகும். 1955 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இடையில் 1957, 1959, 1960, 1964, 1974 ஆம் ஆண்டுகளில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை. முதன் முதலில் தமிழ் மொழியில் சாகித்திய அகாதமி விருதை நெல்லை மாவட்டத்தை சார்ந்த சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை அவர்கள் ‘தமிழின்பம்’ என்ற கட்டுரைத் தொகுப்பிற்காக 1955 ஆம் ஆண்டு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துத் தந்தார். இதுவரை நெல்லை மாவட்டத்திலிருந்து 15 பேர் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளனர். மீ.ப.சோமு (1962), பி.ஸ்ரீ.ஆச்சாரியா (1965), கு. அழகிரிசாமி (1970), வல்லிக்கண்ணன் (1978), தொ.மு.சி. ரகுநாதன் (1983), சு.சமுத்திரம் (1990), கி.ராஜநாராயணன் (1991), தி.க. சிவசங்கரன் (2000) ஆகியோர் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்கள். தொடர்ந்து 2012 லிருந்து 2016 வரை நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களே சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்கள்.

2012 ஆம் ஆண்டில் டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்’ என்ற நாவலுக்கும், 2013 இல் ஜோ.டி.குருஸ் எழுதிய ‘கொற்கை’ நாவலுக்கும், 2014 இல் பூமணியின் ‘அஞ்ஞாடி’ நாவலுக்கும், 2015 இல் ஆ.மாதவன் எழுதிய ‘இலக்கியச் சுவடுகள்’ எனும் திறனாய்வு நூலுக்கும் சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதுக்கும் நெல்லை மாவட்டத்தை சார்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இவர் 2000 ஆம் ஆண்டில் (விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்) சாகித்திய அகாதமி விருது பெற்ற தி.க.சிவசங்கரனின் மகனாவார். ஒரே குடும்பத்தில் இருவர் விருது பெறுவது இதுவே முதல் முறை.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழில் காத்திரமான படைப்புகளை எழுதி வருபவர் எழுத்தாளர் வண்ணதாசன். இவர் 22-8-1946 இல் பிறந்தார். இவரின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். 1962 இல் இவர் எழுதிய ‘ஒரு ஏழையின் கண்ணீர்’ சிறுகதை ‘புதுமை’ இதழில் வெளிவந்தது. இக்கதை அச்சகத்தில் வேலை பார்ப்பவனின் கதையாகும். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலை சாகித்திய அகாதமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூலை தேர்வு செய்ய தனித்தனி தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. தமிழ் மொழியில் விருதுக்கான நூலைத் தேர்வு செய்யும் குழுவில் முனைவர் டி. செல்வராஜ், முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன், முனைவர் எம். ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

எழுத்தாளர் வண்ணதாசன் தமிழக அரசின் கலைமாமணி விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, இலக்கிய சிந்தனை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது, சமீபத்தில் விஷ்ணுபுரம் விருது உட்பட 10 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.

விஷ்ணுபுரம் விருது பெற்ற வண்ணதாசன் பேசும் போது, ‘ஓர் எழுத்தாளனாக நான் புறக்கணிக்கப் படலாம். ஆனால், எனது எழுத்துக்கள் எப்போதும் புறக்கணிக்கப் படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்துள்ளேன். கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஓரிடத்தில் தேங்கி விடாமல், அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஊர்ந்துகொண்டே இருக்க வேண்டும். எனது வாழ்வில் மனிதர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதையே, எனது எழுத்துக்கள் மூலம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை வறண்ட நிலம் போன்றது. எழுத்தாளன் என்பவன் நிலத்தடி நீர் போன்றவன். மனிதர்களுக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ என்றார்.

கோவையில் நடைபெற்ற இவ்விழாவில் கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ். சிவபிரகாஷ், விஷ்ணுபுரம் விருது மற்றும் ஒரு லட்சம் பரிசுத்தொகையை எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கினார். எழுத்தாளர் வண்ணதாசன் திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பர நகரில் வசித்து வருகிறார். சாகித்திய அகாதமி விருது பெறுவோர்க்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, சால்வை மற்றும் செப்பு பட்டயம் வழங்கப்படும். வண்ணதாசன் டெல்லியில் 22-2-2017 அன்று சாகித்திய அகாதமி விருதை பெற இருக்கிறார். வண்ணதாசன் மேலும் பல விருதுகளை பெற ‘குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பிலும் அமுதம் இதழ் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.