மனதை இலகுவாக்கும்

Dr. பா. நாகராஜன்

19th Jun 2018

A   A   A

நான் பொதுவாக எனது கிளினிக்கிற்கு விடுமுறை விடுவதே இல்லை என்பதால் ஓர் சிறிய விடுமுறையைகூட, அதாவது ஒன்றிரண்டு மணித்துளிகளைக் கூட என்னால் ரசிக்க முடியும். நான் தினமும் நடை பயிற்சிக்கு செல்லும் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபயில வரும் ஏறக்குறைய 15 நண்பர்கள் அங்கிருக்கும் படிகளில் அமர்ந்து பல்வேறு விஷயங்களை பேசுவது உண்டு. நாங்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை அடிக்கடி வெளியூர் பயணங்கள் சென்று வருவதுண்டு. கோயில்களுக்கு, கோடை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா ஸ்தலங்களுக்கு என பல்வேறு இடங்களுக்கு செல்வதுண்டு. சமீப காலங்களில் அவ்வாறு செல்ல முடியாமல் போய் அக்டோபரில் பொன்முடி என்னும் இடத்திற்கு செல்ல முடிவெடுத்தோம்.

காலை ஆறு மணியளவில் எங்களுக்கு பிடித்த ஒரு கடையில் தேனீர் அருந்திவிட்டு ஒரு சொகுசு பேரூந்தில் ஏறினோம். தூரம் அதிகம் இல்லையென்றாலும். பயணம் மிக கடினமாகவே இருந்தது. ஏனெனில், ரோடு புதிப்பிக்காததன் காரணமாக குண்டும் குழியுமான ரோடுகளில் மிகுந்த சிரமப்பட்டு பயணித்து சென்றோம். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் கழித்து ஓட்டுனரை ஒரு உணவு விடுதியில் வண்டியை நிறுத்தும்படி கூறினோம். பொதுவாக வழிப்பயணங்களில் பெரிய ஹோட்டகளை விட சில சிறிய ஹோட்டல்களில் வீட்டில் சமைக்கும் உணவுபோல் கிடைக்க வாய்ப்புண்டு. அம்மாதிரியாக இரண்டு மூன்று இடங்களில் நாங்கள் சிற்றுண்டி அருந்தி இருக்கிறோம்.

உதாரணமாக நாகர்கோவில் நகரில் இடலாகுடியில் ஒரு சிறிய பெயர்கூட இல்லாத உணவு விடுதியில் மிகச்சிறந்த சிற்றுண்டிகள் கிடைக்கும். அதே நினைப்பில் கேரளா எல்லையில் இருக்கும் அந்த ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மிக மோசமான சிற்றுண்டி சாப்பிட வேண்டி இருந்தது. அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மலைப்பாதை வரும் முன்னர் ஒரு டீக்கடையில் மிக சுமாரான தேநீர் அருந்தினோம். அந்த இடத்திலிருந்து இருபத்திரெண்டு கொண்டைஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் ஏறி பொன்முடி எனும் சிகரத்தை அடைந்தோம். நாகர்கோவிலிலிருந்து ஏறக்குறைய 135 கிலோமீட்டர்களே தூரம். ஆனால் அதை கடக்க ஏறக்குறைய ஐந்து மணிநேரம் ஆயிற்று.

இத்தகைய களைப்புடன் கூடிய பயணத்தை முடித்தபின் நாம் பார்க்கப் போகுமிடம் மிகவும் ரம்மியமாக இருந்தது. மலைப்பாதையை கடந்தபின் அங்கு சதுக்கத்துடன் கூடிய பீடபூமி, ஐந்து அல்லது ஆறு குன்றுகளுடன் கூடியதாக இருந்தது. குன்றுகள் அனைத்திலும் புல்லும், புதருமாக இருந்தன. ஒவ்வொரு குன்றிலிருந்தும் அனைத்து குன்றுகளையும் பார்க்கும் விதமாக அமைந்திருந்தன. ஒவ்வொரு குன்றிலும் உச்சிவரை சென்று திரும்பி கீழே வருவதற்கும் சிறிய ஏற்ற இறக்கமான பாதைகள் இருந்தன. இந்த குன்றுகளுக்கு மத்தியில் ஊர்திகள் நிறுத்தும் படியான ஓர் பெரிய மைதானமும் ஒரே ஒரு தார் ரோடும் இருந்தது.

ஒவ்வொரு குன்றின் உச்சியிலும் ஏறி கீழே பார்த்தால் சொல்லவொண்ணாத எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள். குன்றுகளில் ஏறி இறங்குவோர் அனைவரையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்கவும் முடியும். நூற்றுக்கணக்கான ஊர்திகளும், இளைஞர்களும், இளைஞிகளும் நடுத்தர வயதினரும் ஏராளம் வந்திருந்தனர். வந்திருந்த சுற்றுலா பயணிகளிலேயே 50 தும், 60 தும் நாங்கள் மட்டுமே எனத்தெரிய வந்தது. பார்க்கும் இடமெல்லாம் நடை நடையே. உட்கார்ந்திருப்போர் மிகச்சிலர், நின்று கொண்டிருப்போர் அதைவிட சிலர்.

மற்றபடி அனைவரும் நடைபயிலும் வண்ணமாகவே அந்த இடம் அமைந்திருந்தது. ஒட்டு மொத்தமாக ஆங்கிலத்தில் அந்த இடத்தை டிரக்கர்ஸ் பாரடைஸ் (Trekkers Paradise) என்று கூறலாம். அவ்வண்ணமாக அந்த வழிப்பாதைகளும், ஏற்ற இறக்கங்களும் மிகச் சிறப்பாக அதுவும் இயற்கையாக அமைந்திருந்தன. அச்சிகரம் முழுமையிலும் ஒரு சிறிய பெட்டிக்கடையோ, குளிபானக்கடையோ, உணவு விடுதியோ, நடைபாதை வியாபாரிகளோ எவருமே இல்லை என்பதை குறிப்பிட்டு கூற வேண்டிய ஒன்றாகும். நாங்கள் உணவருந்த ஏற்கனவே ஆர்டர் செய்து தயாராக வைக்கும்படி ஒரு நாளைக்கு முன்பாகவே கூறியிருந்தோம். அந்த உணவுவிடுதி கேரளா சுற்றுலா நிறுவனத்தை சார்ந்ததாகும். மதிய உணவு சுமாராக இருந்ததெனினும், அருமையான நடைபயணத்திற்கு பின்பு சப்பிட்டதால் மிகவும் ரசிக்க முடிந்தது.

நாங்கள் சாப்பிட்ட உணவுவிடுதி அச்சிகரத்திற்கு இரண்டு கி.மீட்டர் கீழே இருந்தது. மீண்டும் அதே சிகரத்திற்கு சென்று வேறு இரண்டு குன்றுகளில் ஏறி இறங்கினோம். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அக்குன்றுகளில் ஏறி இறங்கிய பின்னரும் எங்களுக்கு சிறிதளவும் களைப்பு ஏற்படவே இல்லை.

காரணம் என்னவென்றால்,

  1.  முதன்மையாக சிறிதுகூட மாசுபடாத காற்று.
  2.  இரண்டாவதாக அந்த மாதிரியான ஓர் சீதோஷ்ண நிலையை நான் வேறெங்கும் அனுபவித்ததில்லை.

கொடைக்கானல், ஊட்டி மற்றும் ஏற்காடு ஆகிய மூன்று இடங்களிலும் நான் தங்கி பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், மூணாறில் வேலைப் பார்த்திருக்கிறேன். வால்பாறையில் படித்து வளர்ந்தவன் நான். பொன்முடியில் மற்ற இடங்களை விட வித்தியாசமான சீதோஷ்ண நிலையை என்னால் உணர முடிந்தது. குளிரும் இல்லை, உஷ்ணமும் இல்லை. வெயிலும் இல்லை, நிழலும் இல்லை. மழையும் இல்லை, பனியும் இல்லை.

அங்கு நாங்கள் இருந்த முழு நேரமும், ஓர் வித்தியாசமான உற்சாகமான உடல் மற்றும் மனோபாவத்தில் இருக்க முடிந்தது. எவராலும் ஒரு தியான மனப்பான்மையோடு அங்கு இருக்க முடியும் என எனக்குத் தோன்றியது. எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள். உற்சாகமான உரையாடல்கள். சுறுசுறுப்புடன் கூடிய நடைகள். அனைவரின் மகிழ்ச்சியும் பொன்முடியின் சிகரத்தில் பிரபஞ்சத்தோடு இணைவதாக எனக்குத் தோன்றியது.

கோவில் குளங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் தன்னை மறந்து ஒருவரால் இருக்க முடிகிறது என்பதே மிகப்பெரிய காரியம். இம்மாதிரியான இடங்களில் ஒவ்வொரு நபர்களும் தன் கவலைகளை மறந்து ஒரு மணி நேரமாவது இருக்க முடிகிறதே என்பது இச்சுற்றுலாக்களின் குறிக்கோளாகும். பொன்முடியை சுற்றுலாத்தலமாக அறிவித்து அதற்குண்டான வரைமுறை சட்டதிட்டங்களையும் மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபானங்கள், பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இவ்வாறு அனுபவித்து முடித்தபின் திரும்பவும் மலையிலிருந்து இறங்கிய பொழுது மீண்டும் கடினமான பயணம். கொண்டை ஊசி வளைவுகள் முடிந்தபின் ’மீன்முட்டி’ எனப்படும் நீர்வீழ்ச்சி ரம்மியமாக இருந்தது. அதை தொடர்ந்து கல்லாறு என்னும் ஆறு குளிப்பதற்கும், ஆர்ப்பரித்து விளையாடுவதற்கும் மிகச் சிறந்ததாக காணப்பட்டது. போகும் பாதை வழிநெடுகிலும் மரத்தின் வேர்களாக குறிக்கிடுகின்றன. வேர்களை தாண்டி தாண்டிச் செல்வதே மிகச் சிறந்த நடை பயிற்சியாக எடுத்துக்கொள்ளலாம்.

மீண்டும் நம் நகர் வந்துசேர பயண நேரம் நான்கு மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. வண்டி ஓட்டுநரும் பாதை தெரிந்த ஆளல்ல. உணவருந்திய விடுதிகளும் சரியில்லை. இத்தனையையும் மீறி பொன்முடியின் ரம்மியமான சீதோஷ்ண நிலை இன்னும் என் நினைவை விட்டு நீங்கவில்லை.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.