மலேசிய அழைப்பு

Dr. பா. நாகராஜன்

15th Sep 2018

A   A   A

நான் என் வாழ்நாளில் எத்தனையோ முறை மனநல மருத்துவத்தை தேர்ந்தெடுத்து விட்டேனே என்று வருத்தப்பட்டதுண்டு. ஆனால் என்னிடம் வருபவர்களுக்கு எப்படியெல்லாம் அவர்களது துன்பங்களை செவிமடுத்து ஆறுதல் கொடுக்க முடிகிறது என்று நினைத்து அநேக சமயங்களில் புளகாங்கிதம் அடைவதுமுண்டு.  

திடீரென ஒருநாள் காலை பத்து மணியளவில் ஒரு பெண்ணின் அழைப்பு மலேசியாவிலிருந்து பேசுகிறேன் என கூறி வந்தது. அப்பெண் தன் மகனை ஏற்கனவே என்னிடம் சிகிட்சைக்காக அழைத்து வந்திருப்பதாக கூறினார். அவர் தமிழகத்தில் ஒரு முக்கியமான நகரத்தைச் சார்ந்தவர். அவரது மகன் ஒரு காதலில் மாட்டிக்கொண்டு அப்பெண் வேறு இடத்தில் திருமணமாகி சென்றுவிட்டதால் கொலை, தற்கொலை வெறியில் உணர்ச்சி பிளம்பாக இருந்து கொண்டிருந்தான். அவர்களது நகரத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிட்சை கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை என்னிடம் வந்திருந்ததாய் அவனது தாயார் கூறினார். அவனை என்னிடம் கொண்டுவர அந்த அவசர சிகிட்சை கொடுத்த மருத்துவரிடம் கேட்டதற்கு அவர் மறுத்திருக்கிறார். இந்த பெண் எப்படியாவது தன் மகனை என்னிடம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். பின்பு அந்த மருத்துவரிடம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு அவனை கொண்டுசெல்வதாக கூறி டிஸ்சார்ஜ் செய்து என்னிடம் அழைத்து வந்தார்.

பொதுவாக மனநிலையில் நிதானமின்றி அதிவேகமாகச் செயல்படும் நபர்களுக்கு காயங்கள் ஆறுவதற்கான ஆன்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகள் கொடுத்தால் ஏற்கனவே இருந்த வேகம் இன்னும் கூடுவதற்கே வாய்ப்பு உள்ளது என்பது பொது மருத்துவர்களுக்கு தெரியாது. அவர் தன் மகனை என்னிடம் அழைத்து வந்ததும் அவருக்கு தேவையான வேக மனநிலைக்கு தகுந்த சிகிட்சை அளித்தபின் அவர் முழுவதுமாக தேறி வந்தார். இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை வருடம் ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது அவரது மகன் மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் நல்ல வருமானத்துடன் கூடிய வேலையில் இருக்கிறார்.

மலேசியாவில் இவரும் மகனும் தங்குவதற்கு இடம் கொடுத்த ஒரு பெண்ணின் மகன் கொஞ்ச நாட்களாகவே நடை, உடை பாவனைகளில் மாற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவனது செயல்பாடுகளில் பெண்ணின் தன்மை மேலெழுந்து வருவதை அந்த பெண் கவனித்திருக்கிறார். தன் மகன் கொஞ்சம் கொஞ்சமாக ஆணின் தன்மையிலிருந்து மாறி பெண்ணின் தன்மைக்கு போய்கொண்டிருப்பதை கவனித்த அதே நேரத்தில் அவனும் வெளிப்படையாகவே தன் தாயாரிடம் ‘சராசரி ஆணின் வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை, எனவே திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தாரோடு சேரப்போகிறேன்’ என்று கூறிவிட்டான். தாயாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் நம் தமிழ்நாட்டைச் சார்ந்த அந்த பெண்மணி தன் பையனை சரி செய்த மருத்துவரிடம் காண்பிக்கலாம் என கூறியுள்ளார். அந்த மலேசியப் பெண் தன் பையனை கூட்டிக் கொண்டு வந்தால் எவ்வளவு நாட்களுக்குள் சரி செய்ய முடியும் என என்னிடம் வினவினார். இதனை வெறுமனே வியாதி என கூற இயலாது. அந்த நபரை சரி செய்ய முடியுமா? என என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தநாள் அதிகாலையில் வழக்கம்போல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏற்கனவே இதுபோன்று பாலினம் வித்தியாசமாக உணர்ந்த மூன்று நபர்களுக்கு சிகிட்சை செய்து வெற்றிகரமாக அவர்களை மாற்ற முடிந்தது என் நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த மூன்று நபர்களுக்கு அடுத்தபடியாக சென்ற வருடம் வந்த ஒரு நபரை என்னால் மாற்ற முடியாமல் போனதும் நினைவுக்கு வந்தது.

இந்த நான்காம் நபர், வெளிநாட்டில் வேலை செய்பவர். நல்ல வசதி, மிகுதியான வருமானம், உள்ளூரிலும் சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. ஒரே மகன் பெற்றோருக்கு. பெற்றோரின் ஒரே ஆதங்கம், தங்கள் மகன் திருமணத்தை தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறானே என்பது. வெகுநாள் கழித்தே, தன் சகோதரியிடம் மெதுவாக விஷயத்தைக் கூறி ஆண் நண்பர்களோடு மட்டுமே தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

என்னிடம் அவரை நான்கைந்து முறை கூட்டி வந்தனர். ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் அவரோடு பேசினேன். அவருக்கு ஆண் நண்பர்கள் அதாவது மிகுந்த ஆழமாக உடல் ரீதியாக நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேலேயே இருப்பதாகவும், அக்கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து வரமுடியாது என்றும் கூறினார். இம்மாதிரியான நபர்களுக்கு இடையே உள்ள பரிச்சயமும், பழகும் தன்மையும் சாதாரண காதலர்களுக்கிடையே இருப்பதைவிட மிகக் கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது. இந்த நான்காம் நபரை என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஆனால், இதற்கு முன் நான் சிகிட்சை அளித்த மூன்று நபர்களைப் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். முதல் நபர், ஒரு ஆசிரியர், அரசு பள்ளியில் பணிபுரிந்தவர். அவரது பேச்சு நடை இவற்றில் சிறிது கூடுதலாக பெண்ணின் நளினம் இருப்பது நமக்கே தெரியும். என்னிடம் அவர் வரும்போது மணமாகி மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. குழந்தை இல்லை நான் அவருக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன்களை ஊசியின் மூலம் செலுத்தி தினசரி நடைபயிற்சி, ஓட்டம், ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றை தொடர்ந்து செய்யும்படி வலியுறுத்தினேன். ஒரு வருடகாலம் வரை நடைபெற்ற சிகிட்சையின் விளைவாக அவரது மனைவி கர்ப்பமானார். இவரது பெண் தன்மை குறைந்து மாற்றம் ஏற்பட்டு நடை மற்றும் பாவனைகளில் ஆண் தன்மை கூடியதை என்னால் உணர முடிந்தது. இவர் தனி நபராக இருந்து, திருமணமாகி, அரசு வேலையிலும் அமர்ந்ததால் காரியம் வெற்றிகரமாக முடிந்தது.

அடுத்தது, ஏறக்குறைய கடைசி எண்பதுகளில், இரு வாலிபர்கள் என்னிடம் ஒரு பிரபல மருத்துவரின் பரிந்துரையின்படி வந்திருந்தனர். அதில் ஒருவன் செல்வந்தன். ஆனால், ஓரின ஈர்ப்பு உள்ளவனாக இருந்தான். உடன் வந்திருந்த இன்னொரு வாலிபன் ஆணாய் இருந்தும் பெண் தன்மையை கூடுதலாக பெற்றிருப்பதாக கணிக்க முடிந்தது. பெண் தன்மை கூடுதலாக இருந்த வாலிபன் வசதி குறைந்தவன். செல்வம் மிகுந்த அந்த வாலிபன் பெண் தன்மை கொண்ட வாலிபனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து பெங்களூரில் சட்டப்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து கொண்டிருந்தான். இவர்களை அனுப்பிய மருத்துவரின் அறிவுரைக்கு மாறாக, அந்த செல்வந்தன் தன் ஆண் நண்பனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவனை முழுமையான பெண்ணாக்க முடியுமா? என்பதே அவனது கேள்வியாக இருந்தது. கேள்வி மட்டுமல்ல ஆவல், ஆசை இன்னும் வெறியாகக்கூட மாறியிருந்தது. இரண்டு மூன்றுமுறை கவுன்சலிங் கொடுத்து, செல்வாக்கு மிகுந்த வாலிபரின் தந்தையை வரச்செய்து சில மருந்துகளை அவனுக்கு தெரியாமல் உணவுகளில் கலந்து கொடுக்கச் செய்தேன். அவரது ஆண் நண்பரின் மீதிருந்த ஆசையையும், வெறியையும் குறைக்கும்படி செய்தேன். அந்த வாலிபன் பின்பு மணமுடித்து சராசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாக பின்னர் அந்த மருத்துவரிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

மூன்றாம் நபர் அநேகமாக மூன்று வருடங்களுக்கு முன் தானாகவே என்னிடம் வந்திருந்தார். மணமுடிக்க விருப்பமில்லை என்றும், பெற்றோர்கள் தனக்கு மணமுடிக்க விரும்புகிறார்கள் என்றும் கூறினார். இவர் நான்கு சகோதரிகளுடன் பிறந்ததினால் பழக்கம் முழுவதும் பெண்களுடனேயே இருந்திருக்கிறது. அதாவது சிறுவயது முதலே நான்கு சகோதரிகளுடன் மட்டுமல்ல, அத்தெரு முழுவதிலிருந்த தன் சகோதரிகளுடைய சிநேகிதிகளுடனும் இவருக்கு சகஜமான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஓர் ஆண் என்ற எண்ணத்துடன் அவர்களை பார்க்கவோ, அவர்களுடன் பழகவோ சிறு வயதிலிருந்தே அவரால் முடியவில்லை என்று கூறினார்.

ஒன்று இரண்டு ஆண்களுடன் மட்டுமே இவருக்கு பழக்கம். அவர்களுள் ஒருவர் இவரை ஓரினச் சேர்க்கைக்காக பதிமூன்று வயதிலேயே பழக்கியிருக்கிறார். எப்படியோ இவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு இருந்ததினால் அவ்விதமாகவே பத்து பன்னிரெண்டு வருடங்களை கழித்திருக்கிறார். என்னை அணுகும்போது அவருக்கு இருபத்தாறு வயதிருக்கும். இவரது கேள்வியே நான் மணமுடித்தால் என் மனைவியை என்னால் திருப்திபடுத்த முடியுமா? என்பதுதான். மணமுடித்தால் மட்டுமே இதை உறுதிபடுத்த முடியும் என கூறினேன். மணமுடிக்கும்படி அறிவுறுத்தினேன். இவருக்கு அப்பெண்ணின் மேல் ஈர்ப்பு வரவேயில்லை என உறுதிபட கூறினார். நான் அவருக்கு தகுந்த மருந்துகளின் மூலம் பாலுணர்வைக் கூட்டி மனைவியை ஆண் நண்பரைப் போன்று கற்பனை செய்து உறவு கொள்ளும்படி கூறினேன். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும், ஆறு மாத காலத்தில் அவர்களது திருமணம் முடிவுக்கு வந்தது.

அதன்பின் அவர் தொல்லை விட்டது என இருந்தாலும் அவரது பெற்றோர் விடவில்லை. மீண்டும், திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாய் இருந்த விதவையை மணமுடித்து வைத்து விட்டார்கள். இப்பொழுது அவருக்கு கொஞ்சம் கூடுதல் தைரியம் வந்துவிட்டது. ஏனெனில் தன் மனைவியை கருத்தரிக்க செய்ய வேண்டும் என்பதில் ஒரு பயமும் இல்லை பிரச்சனையும் இல்லை. எனவே என்னாலும் கொஞ்சம் தைரியமாக வேறு சில மருந்துகளும் கொடுக்க முடிந்தது. இப்பொழுது அந்நபர் முழுமையாக ஓரினச் சேர்க்கையிலிருந்து விடுப்பட்டு சராசரி நபராக மணவாழ்க்கை நடத்துகிறார்.

இந்த மூன்று நபர்களால் ஏற்பட்ட பழைய அனுபவங்களின் உதவியுடன் அந்த மலேசிய பெண்ணின் மகனுக்கு சிகிட்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னுள் துளிர் விட்டதை என்னால் உணர முடிந்தது.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.