டாக்டர் சுனிதி சாலமன்

F.A.M. சேவியர்

12th Aug 2018

A   A   A

எயிட்ஸ் நோயாளிகள் என்றாலே ஏதோ தீண்டதகாதவர் போன்று முகம் சுழிப்பவர்கள் இன்றும் இருக்கின்றனர். கல்வி அறிவு வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்திலேயே நிலைமை இப்படி என்றால் 1985, 86 களில் நிலைமை எப்படி இருந்திருக்கும். 1986 வரை எயிட்ஸ் என்பது வெளிநாட்டு நோய் என்பது போன்ற பிரம்மை நிலவி வந்தது. காரணம் அதுவரை இந்தியாவில் ஒரு எயிட்ஸ் நோயாளி கூட கண்டுபிடிக்கப்பட வில்லை.

டாக்டர் சுனிதி சாலமன் முதன் முதலில் சென்னையை சேர்ந்த ஆறு பாலியல் தொழில் செய்துவந்த பெண்களுக்கு எயிட்ஸ் இருப்பதை கண்டறிந்து அறிவித்தார். இது இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சி அலையை தோற்றுவித்தது. இவரது அறிவிப்பை மற்ற மருத்துவர்கள் நம்ப மறுத்தனர். கூடுதலாக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்தியாவின் பிற இரத்த பரிசோதனை மையங்களுக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து முடிவுகள் கிடைத்த பின்னரே இந்தியாவில் எயிட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதை நம்பினர்.

1939 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் சென்னையில் பிறந்த இவர் தனது கல்வியை முடித்த பின் லண்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மருத்துவ பயிற்சியை தொடர்ந்தார். இவரது கணவர் ஒரு இருதய அறுவை சிகிட்சை நிபுணர். இவர் சென்னையில் பணி நியமனம் பெற்று இந்தியா திரும்பியபோது சுனிதி சாலமோன் சென்னை மருத்துவ கல்லூரியில் நுண்ணுயிரியியல் பாடப்பிரிவினை தேர்வு செய்து முதுகலை பட்டம் பெற்றார். இதில் துணைப்பாடமாக நோயெதிர்ப்பியல் பாடத்தினையும் படித்தார்.

பின்னர் அதே மருத்துவக் கல்லுாரியில் 1973 ஆம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது இந்தியாவில் எயிட்ஸ் நோய் குறித்த ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே சுனிதி சாலமன் தனது ஆய்வு மாணவர்களை எயிட்ஸ் நோய் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி எயிட்ஸ் ஆய்வு மேற்கொள்ள எயிட்ஸ் பாதித்தவர்களின் இரத்தம் தேவைப்படவே சுனிதி அவர்களின் மாணவி நிர்மலா என்பவருடன் சேர்ந்து சென்னையில் பாலியல் தொழில் செய்யும் சுமார் நூறு பேரிடம் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

அந்த இரத்தத்தினை பரிசோதனைச் சாலைக்கு அனுப்பி சோதித்ததில் நூறு பேர்களில் ஆறு பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வில் இவரது ஆய்வு மாணவியான நிர்மலா முழுவதுமாக ஈடுபட்டு உழைத்தார். இரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட நூறு பேரில் ஆறு பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது என்பது மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது. எனவே சுனிதி சாலமன் அவர்கள் இதை சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார். இந்தியாவின் முதல் தன்னார்வ எயிட்ஸ் ஆலோசனை மற்றும் சோதனை மையம் ஒன்றை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆரம்பித்தார்.

அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும், மருத்துவ வசதிகளும், பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர், சுனிதி அவர்கள் YRG கேர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தார். அதன் வழியாக எயிட்ஸ் நோயாளிகளுக்கு உயர் தர சிகிட்சைகள் கிடைக்கவும் எயிட்ஸ் பற்றிய கல்வியறிவை கொடுக்கும் பணியையும் செய்தார். 1993 ஆம் ஆண்டு இவர் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேரமும் எயிட்ஸ் நோயாளிகளுக்காக பணியாற்ற ஆரம்பித்தார். இவரது அயராத உழைப்பே இன்று இந்தியாவில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.

இவரது சேவையை பாராட்டி பல்வேறு விருதுகளை பல அமைப்புகளும், மாநில அரசுகளும், பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் வழங்கியுள்ளன. மேலும் இவர் தமிழக அரசின் திட்டக்கமிஷன் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பல்வேறு பதவிகளையும் வகித்த இவர் கணைய புற்று நோயினால பாதிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் தனது இல்லத்தில் வைத்து மரணமடைந்தார். இவருக்கு, டாக்டர். சுனில் சுகாஷ் சாலமன் என்ற மகன் உள்ளார்.   

இவரது மரணத்திற்கு பின், 2017 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ’பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கௌரவித்தது. எயிட்ஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவதே நாம் இவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.