தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 10

குமரி ஆதவன்

30th May 2019

A   A   A

13-03-1991 அன்று எம் கல்லூரித் தமிழ்த்துறை பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டுரை மற்றும் கவிதைப்போட்டி நடத்தியது. இந்தக் கவிதைப் போட்டியில் பாவேந்தர் பாரதிதாசன் என்ற தலைப்பில் நான் எழுதிய நெடுங்கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இக் கவிதை பின்னர் அகில இந்திய வானொலியிலும் நான் படித்து ஒலிப்பரப்பானது. மேடையில் நான் பரிசு வாங்கியபோது முதல்வர் திரு. சுந்தர் சிங் அவர்கள், இந்த பேச் மேக்ஸ் ஸ்டுடன்ஸ் பிரிலியண்ட் தான். ஆனா ஸ்டிரைக் ஸ்டிரைக்குண்ணு எல்லாத்தையும் வீணடிச்சிட்டீங்க. நல்லா படிச்சு ஜெயிச்சுரு என்ற கண்டிப்பான வார்த்தை இப்போதும் ஞாபகத் தென்றலாய் அடித்துப் போகிறது. தொடர்ந்து தமிழ்துறை ஆசிரியர்களான திரு. இயேசுதாசன், திரு. ஆண்டியப்பன், திரு. தங்கத்துரை ஆகியோர் கவிதை நல்லா இருந்துச்சுடேஎன்று பாராட்டினர். நேராக எனது கணிதத்துறைக்குச் சென்று பரிசினைக் காட்டி விட்டு மார்ச் 15 - ஆம் தேதி நடக்கவிருந்த பிரிவு விழாவுக்கு அழைத்தேன். எங்கள் மீது இருந்த கோபத்தில், எதுக்கும் வருறதுமாதிரி இல்ல. கொண்டு போ என்று திட்டினார் துறைத்தலைவர். கண்களைத் துடைத்தபடி வெளியே நான் வந்ததைப் பார்த்த கணிதத்துறை ஆசிரியர்களான திரு. ஜெயபிரசாத், திரு. எட்வர்ட், திரு. ராபின்சன் செல்லத்துரை மூவரும் ஓடி வந்து பாராட்டி உற்சாகப்படுத்தினர்.   

எங்கள் துறைத்தலைவர் திட்டியதற்கு தகுந்த காரணமும் உண்டு. கணிதம் மற்றும் அறிவியல்துறை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே போய்விடக்கூடாது என்றே நினைப்பார்கள். காரணம் கணிதம் கடினமான பாடம்.  1990 - 1991 கல்வியாண்டில் மாணவர் பேரவைத் தலைவராக ஜெயசேகர் (பிரபு), கல்லூரி மாணவர் பேரவைச் செயலராக எங்கள் வகுப்பு மாணவனான அகமது ரிஸ்வான் இருந்தனர். பிரபு நடத்திய பல்வேறு போராட்டங்கள் எங்கள் வகுப்புக்கும் கெட்டப் பெயரைத் தந்துவிட்டது. செயலாளர் எங்கள் வகுப்பாக இருந்ததால் திடீர் திடீரென்று வகுப்பைப் புறக்கணித்துவிட்டு ஓடுகிற சூழல் உருவானது. வகுப்பறை ஒற்றுமை என்று அனைவருமே அதில் இழுக்கப்பட்டோம். இதனால் மூன்றாமாண்டு முதல் எங்கள் வகுப்பிற்கும் கணிதத்துறைக்கும் வெறுப்புணர்வே அதிகமாக இருந்தது.

1990 நவம்பர் மாதத் துவக்கத்தில் எங்கள் வகுப்பறையில் ஒரு பெரும் குற்றம் நடந்தது. அது இயற்பியல் பாடவேளையாக இருந்தது. ஆசிரியர் பொன்ராஜ் அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவரே திடீரென்று> என்னடே! சாப்புராணி மணம் அடிக்கிறது மாதிரி இருக்கு. பக்திப் பரவசமாயிட்டியளோ? என்றார். அவர் அப்படிச் சொன்ன இரண்டொரு நிமிடத்தில் அவர் பாடம் நடத்திக் கொண்டு நின்றிருந்த மரத்தாலான மேடைக்கு அடியில் பட்டாசு வெடித்தது. அவர் பயந்தபடி மேடையிலிருந்து இறங்கி ஓடினார். அந்தக் கோரக் காட்சி உண்மையிலேயே குருவை மதிக்கிற அனைவருக்கும் வேதனையைத் தந்தது. அன்றைக்கே, என் வகுப்பு மாணவர்களைப் பார்த்து, எவன் செய்திருந்தாலும், இது அநியாயம் என்றேன். விசாரணை வந்தபோது எங்கள் வகுப்பை மாட்டி விடுவதற்காக வரலாற்றுத்துறை மாணவர்கள் திட்டமிட்டுச் செய்தது என்றார்கள். வரலாற்றுத்துறை மாணவர்கள் அதிகம் சட்டாம்பிகளாக இருந்ததால் அவர்கள்தான் என நிர்வாகமும் பேராசிரியர்களும் உறுதிபட நம்பினார்கள்.

தற்காலத்தில், குண்டு வைத்துவிட்டு எங்கள் அமைப்புதான் செய்தது என்று தீவிரவாதிகள் ஒப்புக் கொள்வதைப்போல், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் தண்டனையும் வழங்கப்பட வில்லை. ஆனால் எங்கள் துறைத்தலைவருக்கு மட்டும் எங்கள் மீதேச் சந்தேகம் இருந்தது. அவர் சந்தேகப்பட்டது போல், இதைச் செய்தது எங்கள் வகுப்பு மாணவர்கள் இருவர்தான் என்பதை 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது ஜூலை 2018 இல் தான் அறிந்தேன். இயற்பியல் பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் பொன்ராஜ் ஆசிரியர், குறிப்பிட்ட கேள்வியை ஐம்பது முறை எழுதச் சொன்னதாகவும், இதனால் கோபமுற்ற இருவரும் சரமாகக் கோர்க்கப்பட்டிருக்கும் வெடியை வாங்கி நூலின் முனையில் சாம்புராணி பத்தியை இணைத்து, அதைப் பற்றவைத்து மேடைக்கு அடியில் வைத்துள்ளனர். தாங்கள் செய்தது குற்றம் என்று இன்று சொல்வதால் எந்தப்பலனும் இல்லை. இவர்களை மன்னிப்பதற்கு அவர் உயிரோடும் இல்லை.

எங்கள் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு சிலப் போராட்டங்கள் நன்மைக்கானவை என்றாலும், பெரும்பாலான போராட்டங்களும் வகுப்பறைப் புறக்கணிப்புகளும் தேவையற்றவை என்றே இன்றைக்குப் படுகிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதாகவோ, மாணவர் நலன் சார்ந்தோ, சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடியதாகத் தெரியவில்லை. கண்டக்டருக்கும் மாணவன் ஒருவனுக்கும் நடந்த சண்டைக்காகவோ அல்லது ஏதோவொரு மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததற்காகவோ தான் பெரும்பாலான போராட்டங்கள் நடந்தன.

அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களைத் திரையரங்கிற்குள் இழுப்பதற்காக கல்லூரிச் சுவரில்கூட ஆபாசத் திரைப்படங்களின் சுவரொட்டிகளை ஒட்டிவைத்திருப்பார்கள். மாணவிகள் கண்ணை மூடிக்கொண்டு போகிற அளவுக்கு அசிங்கமாக அவை இருக்கும். இதை எதிர்த்துப் போராட மாட்டார்களா? என்று பலநாள் ஏங்கியதுண்டு. இது குறித்து மாணவர் தலைவர் பிரபுவிடம் கோபத்தோடு கூறியதும் உண்டு. காரியம்தான் நடக்கவில்லை.

பிரபு லிங்கம் இருவரும் கூட்டாளிகளாக இருந்த அக்காலத்தில் பிரபுவிடம் பேசுவதற்கே மற்றவர்கள் தயங்குவார்கள். அக்காலத்திலும் அவனிடம் கோபத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டவும், நேர்மையானதைச் செய்யவும் சொல்லுகிற உணர்வை எனக்குள் விதைத்தது, கல்லூரியில் செயல்பட்ட தேசிய மாணவர் படைதான். மூன்றாண்டுகள் தேசிய மாணவர் படையில் இருந்தது எனக்குள் ஆளுமையையும், தலைமைப்பண்பையும் உருவாக்கித் தந்தது. திருநெல்வேலி எம்.டி.றி. இந்து கல்லூரியிலும், திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்ற பயிற்சிப் பாசறைகள் மற்றும் மலையேறுதல், துப்பாக்கிச் சுடுதல் போன்றப் பயிற்சிகளும் என்னை தேசம் குறித்து கூடுதலாகச் சிந்திக்கத் தூண்டியது. சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு குடிமகனும்தான் பொறுப்பேற்க வேண்டும் எனப் புரியச் செய்தன.

1990 -இல் கண்டன்விளை மாணவன் தங்க பாண்டியன் மொட்டவிளை குண்டர்களால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட போது பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் பருவத்தில் மிகக்குறைந்த நாட்களே வகுப்புகள் நடந்தன. எனது பார்வையில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் மிகவும் ஞாயமான போராட்டமாகப் பட்டது. இந்தப் போராட்டம் பல்வேறு படிப்பினைகளையும் எனக்குத் தந்தது.

இந்தப் போராட்ட நேரத்தில் திருச்சிலுவை கல்லூரிக்குச் சென்று மாணவிகளை வெளியே விடும்படியும், எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. றோசம்மா அவர்கள் முடியாது என்றதும் எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் கோபத்தில் அங்கிருந்த ஒரு கண்ணாடியை கையால் இடித்துவிட்டான். அதில் அவன் கை கீறி இரத்தம் தரையெங்கும் ஆகிவிட்டது. ஓடி வந்த அலுவலக மேலாளர் அருட்சகோதரி டெய்சி அவர்கள் கோபம் வந்தா ஒரு வடி (கம்பு) எடுத்து அடிச்சிருக்கலாமில்லியாடே, இப்புடி கைய கிழிச்சுட்டு நிக்கிறியே! என்ற படி ஒரு வெள்ளைத் துணியால் அவன் கையைக் கட்டினார்கள். தரையில் விழுந்த இரத்தச் சொட்டுகளை ஒரு அலுவலகப் பணியாளர் சகோதரியை அழைத்து துடைக்கச் சொன்னார்கள். அந்தச் சகோதரி துண்டு துணியை தரையில் போட்டுவிட்டு காலால் துடைத்தார். இதைப் பார்த்த அருட்சகோதரி. டெய்சி, அந்தச் சகோதரியை கோபத்தோடு திட்டியபடி, இது மனுஷ ரத்தமாக்கும். காலால துடைக்காத. கையால துடைச்சு எடு என்றார்கள். நாங்கள் தலைகவிழ்ந்து வெளியே வந்தோம். அவர்கள் வெளிப்படுத்திய ஒருதுளி அன்பு எங்கள் அனைவரது கண்ணிலிருந்தும் பலதுளி கண்ணீரை வரவழைத்து விட்டது

அவர்களைப்பற்றி பின்னர் நான் விசாரித்தபோதுதான், அவர்கள் கேரளாவைச் சார்ந்தவர் என்பதையும். மனுஷர் மீது அன்பும் கருணையும் கொண்டு துன்பங்களில் ஓடி வருகிற அருளாளர் என்பதையும் அறிந்தேன். இயற்கை மீது அளவுகடந்த பற்றாளர். இன்றைய ஹோலிக்கிறாஸ் கல்லூரியில் உள்ளத் தோட்டங்கள் அனைத்தும் அவர் மண்வெட்டி பிடித்து உருவாக்கியவை. கடுமையான உழைப்பாளி என்றெல்லாம் அறிகிறபோது அருட்சகோதரி அவர்கள் நம்மிலும் பலஅடி உயர்ந்து நிற்கிறார்கள். இவ்வுலகிற்கு விடை சொல்லிவிட்ட அந்தக் கருணை முகத்தை என் நெஞ்சம் மறக்கவில்லை

(நினைவுகள் தொடரும் …)

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.