தொடர்புடைய கட்டுரை


அணை கட்டும் அதிசய உயிரினம்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

04th Apr 2019

A   A   A

எத்தனையோ அதிசயங்கள் நிறைந்த இந்த பூமியில் இயற்கை படைத்தளித்துள்ள விதவிதமான விந்தைகள் நிறைந்த கோடிக்கணக்கான உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் பலப்பல அதிசயங்கள் காணப்படுகின்றன. மான்களுக்குக் கொம்புகளையும், யானைகளுக்கு தும்பிக்கையையும் படைத்த அதே இயற்கைதான் இந்த உலகத்தில் படைத்த புல் பூண்டு முதல் எல்லா உயிரினங்களையும் அவற்றுக்குரிய தகவமைப்புகளோடு வாழவும் வைத்துவருகிறது இவை பற்றிய அறிவு இயற்கை குறித்த நம் ஞானத்தை அகலப்படுத்துவதோடு ஆழப்படுத்தவும் செய்கிறது. அப்படிப்பட்ட இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்றுதான் இந்த அதிசயமான அணை கட்டுகின்ற உயிரினமும்..

எறும்புகளுக்கும், கரையான்களுக்கும் புற்றை கட்டும் திறமை இருப்பது போல இந்த உயிரினத்திற்கு அணையைக் கட்டுகின்ற ஆற்றல் உள்ளது. அதுதான் பீவர் (Beaver). தமிழில் இந்த விலங்கு ‘நீர் எலி'. இது ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் வாழும் உயிரினம் ஆகும்.  குண்டு சொம்பு போன்ற தலை, முயலினுடைய வாய் போன்ற பிளவுபட்ட வாய், அதில் உளி போல அமைந்திருக்கும் இரண்டு முன்பற்கள், கீழ்வாயிலும் அதேபோன்ற இரண்டு உளி போன்ற பற்கள், சிறிய கண்கள், சின்னதான காதுகள், செழுமையான உடல், அதன் மேல் அழகான, அடர்ந்த பழுப்புநிறமுடைய உரோமங்கள், குட்டையான முன்கால்கள், தடிமனான பின்கால்கள், குட்டையும், தட்டையுமான வால் ஆகியவற்றை எல்லாம் பெற்றுள்ள ஒரு அதிசய விலங்குதான் இந்த பீவர் என்ற விலங்கு.. 

இது எலிக் குடும்பத்தைச் சேர்ந்தது.  இது 75 செ.மீ. நீளம், 25 கிலோ எடை உடைய ஒரு விலங்கு ஆகும்.  இதன் கண்களில் இரண்டு இமைகள் உள்ளன. இது தவிர கண்ணாடி திரை போன்ற மெல்லிய தோலும் இதன் கண்களின் மீது அமையப்பெற்றுள்ளது.  பீவர் தண்ணீருக்குள் செல்லும்போது, சேறு, தூசி போன்றவை கண்களில் படாதபடி, இந்த திரை அதற்கு பாதுகாப்பைத் தருகிறது. பீவருடைய கண்களுக்கு பார்க்கும் திறமை குறைவு. ஆனால், இதற்கு நுகரும் ஆற்றலும், கேட்கும் திறனும் அதிகம். இந்த அதிசய விலங்கால் 15 நிமிடங்கள் வரையும் கூட தண்ணீருக்குள் மூச்சை அடக்கிக்கொண்டு இருக்கமுடியும். 

இதன் வாயில் 20 பற்கள்தான் உள்ளன. இவற்றில் 4 பற்கள் மிகவும் வலிமையானதாக அமைந்திருக்கின்றன. பெரிதாக இருக்கும் இந்த பற்கள் கூர்மையாகவும், இவற்றின் நுனி சற்று வளைந்தும் இருக்கும்.  எலியைப் போலவே இந்த பற்களும் பீவர் சாகும்வரை வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மையுடையவை. இந்தப் பற்களின் துணையால் பீவர் பெரிய பெரிய மரங்களையும் கூட கடித்துக் கடித்து கீழே சாய்த்துவிடும் ஆற்றல் பெற்றுள்ளது. இதன் வாய்க்குள் தொங்கும் திரை போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. இந்த திரை பற்களுக்குப் பின்னால் அமைந்திருக்கிறது. பாதுகாப்புப் பணியில் இந்த அமைப்பு பீவருக்குப் பெரிதும் பயன்படுகிறது. பீவர் மரத்தைக் கடித்துச் சிதைக்கும்போது மரத்தூள் போன்றவை தொண்டைக்குள் சென்றுவிடாதபடி இந்தத் திரை அதற்கு பாதுகாப்பைத் தருகிறது. தன் முன்னங்கால்களால் உணவைப் பிடித்துக்கொன்டு இந்த பீவரும் ஒரு அணிலைப் போல மரத்தில் அமர்ந்துகொன்டு சாப்பிடுகிறது.  

இதன் கால்களில் விரல்கள் உள்ளன. இவற்றின் முனைகளில் நகங்களும் இருக்கின்றன. முன்னங்கால்கள் தோண்டும்போது மரத்தைப் பிடித்து இழுக்கும் தன்மை கொண்டது. பின்னங்கால்களிலும் விரல்கள் உள்ளன. இந்த விரல்கள் தோலால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் பீவர் நீரில் எளிதாக நீந்தமுடியும்.  பின்னங்கால்களால் தன் உடல் முடியை நீவிக்கொடுக்கும். உரோமங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாசி போன்றவற்றை துடைத்துத் துடைத்து அகற்றும்.  இதனால் நீரில் பீவரால் தடை எதுவும் இல்லாமல் வேகமாக நீந்தமுடியும். இதன் வாலில் உரோமங்கள் அடர்த்தியாக இருப்பது இல்லை. இதன் வால் இது அமர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஒரு முட்டுக்கொடுக்கும் உறுப்பாக பயன்படுகிறது. முக்காலியின் மூன்றாவது கால் போல இது பீவருக்கு உதவுகிறது.  பீவரின் வால் நீரில் அதற்கு ஒரு சுக்கான் போல பயன்படுகிறது. 

ஆப்பிரிக்காவில் மக்கள் தங்கள் கைகளால் தட்டி செய்தியைப் பரப்புவார்கள்.  அதுபோல, இந்த அதிசய விலங்கும் தன் வாலால் தண்ணீரைத் தட்டி தட்டி தன் வருகையை தெரிவிக்கிறது. தண்ணீரில் இது தன் வாலால் பளார் பளார் என்று சத்தமாக அடிப்பதால் இதன் வருகையை எளிதாக உணரமுடியும். தன் வாழிடத்தை இது அற்புதமாக அமைக்கும் திறன் பெற்றது.  இதன் வாழிடத்திற்கு ‘லார்ட்ஸ' என்று பெயர். இந்த வாழிடம் நீரின் நடுவில் அமைந்திருக்கும்.  ஏழையின் குடிசையைப் போல இந்த வாழிடம் அமைக்கப்படுகிறது. குடிசைக்குள் சன்னல்கள் இருக்காது. ஆனால் இதன் வாழிடத்தின் உச்சியில் காற்று உள்ளே வருவதற்காக ஒரு துவாரம் போடப்பட்டிருக்கும். இந்த ஆச்சரியமான உயிரினத்தின் குடிசை வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருக்கின்றன.  இதில் வியப்பூட்டும் செய்தி என்னவென்றால் இந்த இரண்டு வாசல்களுமே தண்ணீருக்குள்தான் அமைக்கப்படுகின்றன. இதன் நடுப்பகுதி மேடானதாக அமைக்கப்பட்டிருக்கும்.  இந்த மேடான பகுதியில்தான் குட்டிகள் வளரும்.  குளிர்காலத்துக்கான உணவும் இங்குதான் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும்.

பீவர் என்ற இந்த எலி குடும்பத்து உயிரினத்தின் அதிசயமான வாழ்க்கைமுறைக்கு சிகரம் வைத்தாற்போல இதன் அணை கட்டும் திறன் அமைந்திருக்கிறது. ஆற்றின் குறுக்கே இது அற்புதமாக அணை கட்டும்.  மரக்கிளை, கல், சேறு முதலியவறைக் கொண்டு இந்த அணை கட்டப்படுகிறது. இவ்வாறு பீவர் அணை கட்டும்போது அந்த இடத்தில் ஆறு குளமாக மாறுகிறது. அந்த இடத்தில் இருக்கும் தண்ணீரில் மீன்கள் அதிகமாக இருக்கும். இத்தகைய அற்புதமான திறமைகள் பல பெற்றுள்ள இந்த அதிசய உயிரினத்திற்கு முக்கியமான எதிரிகளாக விளங்குவன கரடி, ஓநாய் முதலியவை மட்டுமல்ல மனிதனும்தான்..

பீவர் போன்ற வினோதமான உடலமைப்பும், விந்தையான வாழ்க்கைமுறையும் கொண்ட விலங்குகளைப் பற்றியும், தாவரங்களைப் பற்றியும் அறிந்துகொள்வதன் மூலம் மகத்தான நாம் வாழும் இந்த பூமியையும், அதில் காலம்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பீவர் போன்ற எத்தனையோ அதிசயமான உயிரினங்களையும் நாம் போற்றி பாதுகாத்து நம் வரும்கால சந்ததிகளுக்கு பத்திரமாக விட்டுச்செல்லவேண்டும் என்கின்ற அடிப்படையான விழிப்புணர்வை நம்முள் ஏற்படுத்தும்.. 

 


 ஆகஸ்ட் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.