தொடர்புடைய கட்டுரை


புல்வெளிகள்

பி.ரெ. ஜீவன்

09th Feb 2019

A   A   A

பூமியின் நிலப்பரப்பில் சுமார் கால்பங்கான இடம், ஒரே குறிப்பிட்ட வகையான தாவரத்தால் மூடி இருக்கிறது. அழிக்கமுடியாத குணமுடையது இந்த தாவரம். பரிணாம போட்டியில் மற்ற எல்லா வகை தாவரங்களையும் வென்றுவிட்டது. இதனால் உலகின் எல்லா வகையான நில அமைப்பிலும் வாழ தன்னை பழக்கிக் கொண்டுள்ளது. அதைவிட முக்கியமாக தனக்கென்று ஒரு வகை நில அமைப்பையே உருவாக்கிக்கொண்டது. அது புல்வெளி.

அடர்த்த காடு ஒரு சொர்க்கம் போன்று இருந்தாலும் அங்கு வாழ்வதில் பல சவால்கள் உள்ளது. அடர்ந்த பெரிய மரங்கள் இந்த காட்டை மூடி இருப்பதால், காட்டின் தரைக்கு சூரிய வெளிச்சம் வராது. காட்டின் தரைப்பகுதி இருண்டு காணப்படும். புதிதாக விதையிலிருந்து முளைத்த செடி இந்த இருண்ட தரையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாவது ஒரு பெரிய சாதனைதான்.

ஏதாவது இடத்தில் பழைய பெரிய மரம் சரிந்துவிழுந்தால், அவ்விடத்தில் சூரிய வெளிச்சம் வரும். அங்கு உள்ள சிறு செடிகளுக்கு பெரிதாக வளர ஒரு வாய்ப்பு. பல தாவரங்கள் இந்த வாய்ப்பை சூரையாட முயற்சி செய்யும். உயரத்தை அடைய தாமதிக்கும் தாவரங்களுக்கு சீக்கிரம் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் போய்விடும். சூரிய வெளிச்சத்திற்கு எல்லா தாவரங்களும் போட்டியிடும். எது உயரமாக வளர்ந்து சூரிய வெளிச்சத்தை அடைகிறதோ, அது தான் உயிர்வாழ தகுதியுடையது. இப்படி ஒவ்வொரு தாவரங்களிடையேயும் ஒரு பெரிய போட்டி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தாவரமும் அதன் இனத்தை அதிகரிக்க போராடுகிறது. இன்று இந்த போட்டியில் மற்ற எல்லா தாவரங்களையும் வென்று பூமியின் நிலத்தில் 25% இடத்தை தன்வசம் வளைத்துப்போட்டுள்ளது புல் வகை. சில வகை புற்கள் ஒரு நாளைக்கு 2 அடி உயரம் வளரும்.

பல வகை விலங்குகளுக்கு இது ஒரு அடிப்படை உணவாக உள்ளது. விலங்குகள் தாவரங்களை உண்பதை தடுக்க தாவரங்கள் அதன் இலைகளில் நச்சுத்தன்மையை உருவாக்கிக்கொண்டது. ஜீரணிக்க கடினமானதாக இருந்தாலும் பெரும்பான்மையான புல் வகையில் நச்சுத்தன்மை கிடையாது. எனவே இதை ஜீரணிக்க முடிகிற விலங்குகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆடு, மாடு, முயல், யானை, மான், குதிரை போன்ற பலவகை விலங்குகள் புல்லை முக்கியமான அடிப்படை உணவாக கருதுகின்றன.

இப்படி விலங்குகள் இவற்றை உண்பதையே புல் ஒரு யுத்த தந்திரமாக பயன்படுத்துகிறது. கால்நடைகள் புல்லின் மேல் பகுதியான இலைகளை தான் உண்ணும். புல்லின் வேருக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கால்நடைகள் இவற்றை வேருடன் எளிதில் பிடுங்கிவிட முடியாது, அவை மண்ணுக்கு மேல் இருப்பதை தான் உண்ணும். இதனால் இது மீண்டும் தளிர்த்து வந்துவிடும். புல்லை உண்ணும் கால்நடைகள் வேறு செடிகள் புதிதாக எங்கு முளைத்தாலும், உடனடியாக வேருடன் பிடுங்கி உண்டுவிடும். இதனால் அவ்விடங்களில் புல்லைத்தவிர வேறு செடிகள் எளிதில் வளர முடியாது.

ஆப்பிரிக்கா சுமார் 40 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு அடர்ந்த காடாக இருந்தது. எல்லா இடங்களிலும் பெரிய மரங்கள் சூழ்ந்து இருந்தது. ஆனால், பின்னர் அந்த பெரிய மரங்கள் அழிந்து, புல்வெளிகள் தோன்றின. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் யானைகள் என்று சில விஞ்ஞானிகள் யூகிக்கிறார்கள். யானைகளுக்கும் புல் பிடிக்கும். எனவே எல்லா பெரிய மரங்களையும் தன் பலத்தினால் யானைகள் வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டது. இன்றும் புல் இருக்கும் இடத்தை அதிகரிக்க யானைகள் பல பெரிய மரங்களை பிடுங்கி எறிவதை பல இடங்களில் பார்க்க முடியும். யானைகள் முதலில் புல்லை விவசாயம் செய்ய துவங்கியதா, இல்லை புல் யானையை முதலில் தத்தெடுத்ததா என்பது தான் கேள்வி. இந்த இரு உயிரினங்களும் சேர்ந்து புல்லின் ஆட்சியை துவங்கவைத்தது.

புல்லின் இராஜாங்கம் பூமி முழுவதும் பரவ துவங்கியது. புல் வேறு ஒரு முக்கிய யுத்த தந்திரத்தையும் கையாளும். வேறு சில தாவரங்களும் இதே யுத்த தந்திரத்தை கையாண்டாலும், புல் இதில் ஒரு வல்லுநர். அந்த யுத்த தந்திரம் காட்டு தீ. எல்லா மரங்களும் காட்டு தீயில் எரிந்து அழிந்து போனாலும், புல்லின் வேர் மண்ணின் கீழ் மிக பாதுகாப்பாக இருக்கும். காட்டு தீ முடிந்த அடுத்த நாளே புதிதாக தளிர் விட்டு முளைத்துவிடும்.

தண்ணீர் இல்லாத காலத்தில் புல் காய்ந்து மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இந்த காய்ந்த புல் எளிதில் சூரியனின் கடுமையான வெயிலில் தீ பிடித்துவிடும். இந்த தீ எல்லா கரிந்த புல்லையும் எரிந்ததுமல்லாமல், அதை சுற்றி இருக்கும் மற்ற தாவரங்களையும் எரித்து அழித்துவிடும். இப்போது மற்ற தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டது, புல் மட்டும் தரையின் கீழ் உயிருடன் இருக்கிறது. இது மற்ற அழிந்துபோன தாவரங்கள் வாழ்ந்த இடத்தில் புல் வளர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறது.

மனிதர்கள் புல்லை விரும்பியது புல்லுக்கு சாதகமாக போனது. நெல், கோதுமை, சோளம் போன்ற பெரும்பான்மையான உணவுகள் புல் வகைகள் தான். விவசாய நிலமும் ஒரு வகை புல்வெளிதான்.

மனிதனால் முதலில் விவசாயம் செய்யப்பட்ட தாவரம் நெல். பழைய கற்காலம் (paleolithic) முடிந்து புது கற்காலம் (neolithic) துவங்கியதற்கு விவசாயம் தான் அடையாளம். புது கற்காலம் முதன் முதலில் எங்கு தோன்றியது? யார் அந்த முதல் விவசாயிகள்? இதன் பதில் மரபியல் (genetics) பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் எல்லா நெல் வகையின் DNA வையும் பரிசோதித்து, உலகின் முதல் நெல் விவசாயம் செய்யப்பட்ட இடத்தையும் காலத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். துருக்கி நாட்டில் வாழும் ஒரு காட்டுச்செடி தான் முதல் நெல்லின் மூதாதையர். இந்த காட்டு நெல் சாதாரண நெல்லில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது. பொதுவாக நெல்லை அறுவடை செய்ததும் விலங்குகளை பயன்படுத்தி அதை மிதிக்க செய்து தனியாக பிரிப்பர். ஆனால் அந்த காட்டு நெல்லில் எளிதாக தானியம் பிரிந்து கீழே விழாது. ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாக புல்லிலிருந்து பறித்து எடுக்க வேண்டும். இந்த காட்டு நெல் தான் உலகின் எல்லா வகை நெல்லுக்கும் மூதாதையர். மனிதர்கள் அதில் அப்போதிருந்தே மாற்றங்கள் பல கொண்டுவந்துள்ளனர். அப்படி அதில் மனிதர்கள் கொண்டு வந்த மாற்றத்தில் ஓன்று தான் எளிதில் தானியம் கீழே விழும் வகை நெல்.

துருக்கி நாட்டில் சுமார் 13,000 வருடத்திற்கு முன்பாகவே நெல் பயிரிட்டு விவசாயம் துவங்கிவிட்டனர். இவ்விடத்தில் தான் முதல் முதலில் புது கற்காலம் துவங்கியது. அவர்கள் தான் உலகின் முதல் விவசாயிகள். நெல் ஒரு நம்பத்தகுந்த உணவாக மாறியது. களஞ்சியங்களில் சேகரித்து நினைத்தபோது எல்லாம் உண்ண முடியும். நெல் அதிக ஆற்றலை கொடுத்தது. சாப்பிட்டபின் உடனடியாக அடுத்த வேளைக்கான உணவை தேடவேண்டிய அவசியமில்லாமல் போனது. இது மக்களுக்கு சிந்திக்க ஓய்வு நேரத்தை கொடுத்தது. சிந்தனை மனிதன் புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவியது.

உலகின் எல்லா நாகரிகங்களும் நெல் அங்கு வந்தபின் தான் துவங்கியது. தமிழரின் மிக பழமையான இலக்கியங்களிலேயே நெல் பற்றி கூறப்பட்டுள்ளது. இதேபோன்று தான் எகிப்து, சீனா, மெசப்பட்டோமியா போன்ற எல்லா பழைய நாகரிக இலக்கியங்களிலும். நெல் இல்லாமல் நாகரிகம் இல்லை. நெல் வந்தபின் தான் மனிதர்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்தது. அதன் பின் தான் நாகரிகம் அவ்விடங்களில் தோன்றியது. நெல் அங்கு வருவதற்கு முன்பு வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை எந்த நாகரிகமும் பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு அதை பற்றி சிந்திக்க நேரமும் கிடைக்கவில்லை.

உலகின் மிக பழமையான நாகரிகம், நெல் முதலில் தோன்றிய இடமான துருக்கியில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாகரிகத்தின் பெயர் கெபிக்லி டீப்பி (Gobekli Tepe). உலகின் மிக பழமையான கட்டடங்களும் இங்கு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டடங்கள் சுமார் 12,000 வருடம் பழமையானது. இந்த நாகரிகம் மண்ணின் கீழ் புதைந்து இருந்தது. 1994இல் தான் இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கட்டடங்களில் நெல்லை ஓவியமாக வரைந்து வைத்திருந்தனர். பின்பு வணிகம் மூலமாக இங்கிருந்து நெல் உலகின் மற்ற இடங்களுக்கு சென்றது. நெல் சென்ற சில நூற்றாண்டிலேயே அங்கு புது நாகரிகம் தோன்றியது. அமெரிக்க நாகரிகங்களான மாயன், அஸ்டெக் போன்ற நாகரிகம் தவிர வேறு எல்லா நாகரிகத்துக்கும் நெல் தான் அடிப்படையாக இருந்தது. நெல் செய்த வேலையை அமெரிக்க நாகரிகங்களில் சோளம் செய்தது.

புல் உலகையே மாற்றியுள்ளது. இந்த புது வகை நில அமைப்புக்கு ஏற்ப உலகின் எல்லா விலங்குகளும் தன்னையே மாற்றிக்கொண்டது. அதைவிட முக்கியமாக மனிதர்களின் விதியையே மாற்றி எழுதியது. புல் இல்லையேல் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையேல் நாகரிகம் இல்லை.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.