தொடர்புடைய கட்டுரை


ஆழ் கடல்

பி.ரெ. ஜீவன்

22nd Sep 2018

A   A   A

பூமி ஒரு நீல கிரகம். விண்வெளியை ஆராய பயன்படுத்திய பணத்தில், ஒரு சிறு சதவீதம் தான் பூமியின் கடல்களை ஆராய பயன்படுத்தியுள்ளோம். பூமியின் கடல்களில் சுமார் 5 சதவிகிதத்தை மட்டுமே நாம் ஆராய்ந்துள்ளோம். அதிலும் குறிப்பாக ஆழ் கடலில் ஒரு சிறு பகுதியை தான் ஆராய்ந்துள்ளோம். பூமியிலேயே கண்டுபிடிக்கவேண்டிய இடங்கள் என்னும் பல உள்ளது. அவ்விடங்களில் ஓன்று ஆழ் கடல். இது பூமியின் இருண்ட எல்லை.

பெரும்பான்மையான கடல் இருக்கும் பகுதிகள் 2 கிலோமீட்டரை (km) விட ஆழமானது. இந்த இடங்கள் மொத்த பூமியின் பரப்பில் 60% இடத்தை ஆக்கிரமிக்கிறது. இந்த 60% பகுதிகளும் மனிதர்களால் அறியப்படாத இடங்கள். தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி தான் அவ்விடங்களை ஆராய்ந்துளோம். அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக நாம் அங்கு செல்ல முடியும்.

ஆழ்கடல் பற்றிய ஆராய்ச்சி HMS Challenger என்ற கப்பல் மூலமாக 1872 முதல் 1876 வரை நடந்தது. இது தான் ஆழ்கடல் பற்றி முதலில் ஆராய்ந்து. கடலடியே செல்ல முடியாவிட்டாலும், கல்லை கயிற்றில் கட்டி கடலடியில் இறக்கி கடலின் ஆழத்தை ஆராய்ந்து. ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஆழம் உள்ளது என்பதை அட்லாண்டிக் பெருங்கடலில் அது பதிவு செய்தது. பின்பு சோனார் என்ற கருவியை பயன்படுத்தி உலகெங்கும் கடலடி ஆழத்தின் அளவு பதிவுசெய்யப்பட்டது.

கடலடியில் எடுக்கப்பட்ட தகவல்கள் பல்வேறு இடத்தில் பிரிந்து கிடந்தது. பின்பு கொலம்பியா பல்கலைக்கழகம் (Columbia University) உலகெங்கும் எடுக்கப்பட்ட தகவல்களை சேகரித்தது. பூமியின் நிலத்தின் வடிவத்தை வரைபடமாக மாற்றுவது (map) ஒரு திறமை. அப்படி பட்ட திறன்படைத்த ஒரு பெண் 1947 இல் கொலம்பியா பல்கலைக்கழகம் வந்தார். மேரி தார்ப் (Marie Tharp) என்ற அவர் அங்கு இருந்த கடலின் ஆழம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து, கடலின் ஆழத்தின் வரைபடம் உருவாக்கினார். அது மேரியை கடந்த நூற்றாண்டின் மிக சிறந்த வரைபடம் நிபுணர் என்று பெயர்பெற செய்தது.

மேரி தார்ப்பின் தந்தை ஒரு விவசாயி. சிறுவயதிலேயே அவர் தந்தையாருடன் சேர்ந்து பல இடங்களின் வரைபடத்தை உருவாக்கியுள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு முன்பாகவே மண்ணியல் படித்து பட்டம் பெற்றவர். அக்காலத்தில் பெண்கள் ஆராய்ச்சி நடைபெறும் கப்பலில் செல்ல தடை இருந்தது. மேரிக்கு கடலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அங்கு அளவிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவள் கண்முன் வந்தது.

அக்காலத்தில் கடலடி ஒரு தட்டையான சமவெளி என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் மேரி வரைய துவங்கிய வரைபடம் அங்கு பல வகை நில அமைப்புகள் இருப்பதை காட்டியது. சில இடங்களில் பள்ளத்தாக்கும், மலைகளும், சமவெளியும் இருந்தது. ஆழ்கடல் நாம் நினைத்ததைவிட மிக அம்சமான இடம் என்பதை காட்டி கொடுத்தது.

துவக்கத்தில் யாரும் மேரியின் வரைபடத்தை நம்பவில்லை. அது கண்டங்கள் நகர்கிறது என்பதற்கான முதல் ஆதாரங்களையும் வழங்கியது. 1957இல் இந்த வரைபடம் முதலில் வெளியாகியது. அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எதிர்ப்பு பல்வேறு விஞ்ஞானிகளிடம் இருந்து வந்தது. ஜகுஸ் கோஸ்டோவ் (Jacques Cousteau) என்ற ஆராய்ச்சியாளர் மேரியின் வரைபடம் கண்டிப்பாக தவறு என்று நினைத்தார். எனவே கடலடிக்கு ஒரு கேமரா (camera) அனுப்பி, கடலின் ஆழத்தை படம்பிடித்து வந்தார். அவரின் படம், மேரியின் வரைபடம் உண்மை என்பதை முதன்முதலில் நிரூபித்தது. கண்டங்கள் நகர்கிறது என்பதை உலக விஞ்ஞானிகளிடையே நிரூபிக்க துவங்கியது.

கடல் அடியின் நிலப்பரப்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றி நாம் நன்றாக தெரிந்திருந்தாலும், அவ்விடங்களுக்கு நாம் நேரடியாக செல்லவில்லை. விண்வெளிக்கு சென்ற மனிதர்களைவிட குறைவானவர்களே இவ்விடங்களுக்கு சென்றுள்ளனர். இது ஒரு அந்நிய உலகம். ஒவ்வொரு அடி கீழ் செல்லும்போதும், சூரிய வெளிச்சம் குறைவாகிறது, நீரின் அழுத்தம் அதிகரிக்கிறது, வெப்பம் குறைகிறது. இங்கு செல்ல அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல் தேவை.

அந்த நீர்மூழ்கிக்கப்பல்கள் அதிக நீர் அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு 100 மீட்டர் ஆழத்துக்கும், கடல் மட்டத்தைவிட 10 மடங்கு நீர் அழுத்தம் அதிகமாக இருக்கும். உலகில் இன்று விரல்விட்டு எண்ணும் அளவுக்கு தான் அங்கு செல்லும் திறனுடைய ஊர்திகள் உள்ளன. பெரும்பாலும் ஒரு சமயத்தில் ஓன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அந்த ஊர்தியில் கடல் அடியில் பயணிக்க முடியும். பெரும்பான்மையான ஊர்திகளில் மக்கள் செல்லும் வசதி இருக்காது.

பூமியின் மிக உயரமான இடம் இமயமலை. அதை போன்று பூமியின் மிக ஆழமான இடம் சாலஞ்சர் டீப் (Challenger Deep). இது மரியானா டிரேஞ்ச் (Mariana Trench) என்ற பகுதியின் தெற்கு முக்கில் உள்ளது. மரியானா டிரேஞ்ச் பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளின் இடையே உள்ள கடல் பகுதியில் உள்ளது. சாலஞ்சர் டீப் சுமார் 11 கிலோமீட்டர் (km) ஆழமானது. அங்கு கடல் மட்டத்தைவிட 1100 மடங்கு அதிகம் நீரின் அழுத்தம் இருக்கும். அங்கும் உயிரினங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ட்ரிஸ்ட்டி (Trieste) என்ற நீர் மூழ்கி கப்பல், சுவிஸ் மற்றும் இத்தாலி நாட்டினர் சேர்ந்து உருவாக்கியது. அதை பின்பு அமெரிக்க ராணுவம் வாங்கியது. அமெரிக்க கடற்படையிலிருந்து ஜாக்யூஸ் பிக்கார்ட் (Jacques Piccard) மற்றும் டான் வால்ஷ் (Don Walsh) என்ற இரு வீரர்கள் ட்ரிஸ்ட்டியை பயன்படுத்தி 23 ஜனவரி, 1960 அன்று முதன்முதலில் சாலஞ்சர் டீப் போய் சேர்ந்தனர். டைட்டானிக் (Titanic) படம் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) தான் முதன்முதலில் சாலஞ்சர் டீப்புக்கு தனியாக சென்ற மனிதன்.

ஆனால் உண்மையான ஆழ்கடல் ஆராய்ச்சி 1964 இல் தான் துவங்கியது. DSV Alvin என்ற ஆழ்கடலுக்கு செல்லும் வசதிப்படைத்த நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்த துவங்கினோம். அது பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

செப்டம்பர் 1, 1985 அன்று டைட்டானிக் (Titanic) கப்பல் கடல் அடியே கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்தவர் ராபர்ட் பல்லார்டு (Robert Ballard). அவரின் முக்கிய கண்டுபிடிப்பு டைட்டானிக் கப்பல் அல்ல. அந்த கப்பல் 3.81 கிலோமீட்டர் (km) ஆழத்தில் இருந்தது. அந்த ஆழ் கடலில் கூட உயிரினங்கள் இருப்பதை அவர் ஆச்சரியமுடன் அப்போது கண்டுபிடித்தார். எப்படி அந்த இருண்ட, குளிர்ந்த மற்றும் அதிக நீரழுத்தம் உடைய இடத்தில் உயிரினங்கள் வாழ்கிறது? சூரிய வெளிச்சம் இல்லாமல் எப்படி அவை அங்கு வாழ்கிறது?

கொடிய நோய்களுக்கான மருந்து அவ்விடங்களில் காணப்படலாம் என்று கூறுகிறார் அவர். கேன்சர் (cancer) போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி ஆழ்கடல் விலங்குகளிடம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீண்ட நாள் நலமுடன் வாழும் வித்தைகளையும் ஆழ்கடல் விலங்குகள் அறிந்துவைத்துள்ளன.

இமயமலையைவிட உயரமான மலை ஹவாய் (hawaii) தீவு. அதாவது அதன் கீழிருந்து மேல்வரை அளந்தால், இமயமலையின் உயரத்தைத்தைவிட அதிகமாக இருக்கும். கடல் இருப்பதால் அது ஒரு சாதாரண தீவு போன்று இன்று காட்சியளிக்கிறது. இன்னும் என்னென்ன அங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆழ்கடலை முழுவதும் ஆராய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று கேட்டால் கூட யாரிடமும் பதில் இல்லை.

பூமியில் எங்கெல்லாம் உயிரினங்கள் வாழமுடியாது என்று நினைக்கிறோமோ, அங்கெல்லாம் உயிரினங்கள் காணப்படுகிறது. ஆழ்கடலுக்கு செல்லும் ஊர்திகள் ஒவ்வொருமுறை மூழ்கும்போதும், குறைந்தது ஒரு புது விலங்காவது கண்டுபிடிக்கப் பட்டு வருகிறது. ஆழ்கடலில் வசிக்கும் விசித்திரமான விலங்குகளை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம். ஆச்சரியத்தில் அதிர்ச்சியடைய தயாராக இருங்கள்.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.