தொடர்புடைய கட்டுரை


மண்ணின் மைந்தர்கள்

Prop. Dr. தங்க மாரியப்பன்

21st Aug 2018

A   A   A

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி:

 கிராமங்கள் அனைத்தும் தவபூமி”…

-தேச பக்திப்பாடல்

மண்ணை உயிருக்கும் சந்தனத்திற்கும் நிகராய் நேசித்த உயர் தேசம் நம் பாரதமாகும். ’ஆண் என்றால் மண்ணை போற்றி பாதுகாத்துப் பழகு, பெண் என்றால் மண்ணை பார்த்து நடந்து பழகு…’ என்ற ஒழுக்கநெறியை உலகுக்கு கற்பித்த பெருமையில் தமிழனுக்கு ஒரு தனிப்பெரும் பங்குண்டு. பொதுவாக, நம் முன்னவர்கள் காரணமில்லாமல் எந்த ஒரு செயலையும் செய்தது இல்லை. நம் முன்னோடிகள் கடவுளையும், மதங்களையும் கொண்டாடுவதற்கு முன்பே மண்ணை உயர்வாய் கொண்டாடியவர்கள். ஏனென்றால், மண் என்பது கணக்கிலடங்காத உயிரினங்களை ஈன்றெடுத்த கருப்பை. முதன்முதலில் உயிர்கள் நீரில் தோன்றியது என்றாலும் பல உருவங்களாக பரிணாமம் பெற்றது மண்ணின் மகிமையால்தான். ஆகையால், உயிர் வளர்த்த மண்ணை தாய்மைக்கு இணையாய் இன்றும் சில உத்தமர்களால் போற்றப்படுகிறது. ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நீர் ஆகிய நான்கு பிரபஞ்சங்களின் கூட்டுத்தொகுப்பே, ஜந்தாம் பூதமான மண். உலக உயிர்களுக்கு உணவளிக்கும் அட்சயப்பாத்திரம் மண். அனைத்து உயிரினங்களின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் தீர்க்கத்தரிசியாய் இருக்கிறது.

விதையிட்டால் முளைக்கச்செய்யும், விதையல்லாதவைகளை மட்கச்செய்யும், இவ்வாறு மண்ணுக்குள் இடும் பொருள்களைப் குறிப்பறிந்து பிரித்தறியும் திறன் கொண்ட பகுத்தறிவுவாதிதான் மண். நுண்ணுயிரிகளுடன் மண் கொண்ட உறவு, “மனித கூட்டியியல் வாழ்வுமுறைக்கு ஓர் முன்மாதிரியாகும். அடிப்படைத் தொழில்நுட்பங்களை மனிதனுக்கு கற்றுக்கொடுத்த மகாகுருவாகும். மகத்துவம் நிறைந்த மருந்துகளை மனிதனுக்கு வரமளித்த மண் ஓர் தன்வந்திரிக் கடவுளாய் தெரிகின்றது.

பொருளாதாரத்தை மையமாக கொண்டு, மனிதனால் தொடங்கப்பட்ட வணிகமயமாதல் மற்றும் உலகமயமாதல் போன்றவைகள் தற்போது அதிகளவில் விரிவடைந்தள்ளது. ஆனால், விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம் மற்றும் அளவு அதை விளைவிக்கும் மண்ணின் தரம் போன்றவைகள் ஈடுசெய்ய முடியாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலகமயமாதல் மூலம் செறிவடைந்த மனித நுண்ணறிவு, பல்வேறு நிகழ்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மண்ணை களமாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாய், மண்ணானது தற்போது புதைசாக்கடைக் கழிவுகள், ஆலைக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள், உயிரினக்கழிவுகள் என பல்வேறு கழிவுகளை கொட்டும் தளமாகிப்போயின. மனித சுயநலத்தின் உச்சமாய் பணத்திற்காக கொள்ளையிடும் பொருள்களின் பட்டியலில் மணலும் சேர்த்திருப்பது கொடுமை. தாது மணலை விற்று கொள்ளை இலாபம் பெறுவதற்காக, தாய்மண்ணைக் களவாடும் கேவலமான செயல்கள் கவலையளிக்கின்றன. இவ்வாறு தாதுக்களை பிரித்தெடுத்த மண் ஊட்டச்சத்து குறைந்து எதற்கும் பயனற்ற நிலையில் கொட்டப்படுகிறது.

இதைத்தவிர, தற்போது மக்களிடையே அதிகரித்துவரும் நெகிழிப்பொருள்களின் பயன்பாடுகள் மென்மேலும் மண்ணை மலட்டுத்தன்மையாய் மாற்றியுள்ளது. மண் நிறைந்த நிலங்களை பணத்திற்காகப் வெறும் முத்திரைத்தாள்களாய் பார்க்கும் சூழல்கள் மட்டுமே இன்று மனிதர்களுக்கிடையே வழக்கத்தில் உள்ளது. பணம் ஈட்டுதல் என்பது, மண்ணின் பாதுகாப்புக்கு பின்புதான் என்ற அடிப்படைத் தத்துவத்தையே மறந்துபோன மனித இனம், வாழும் மண் மற்றவர்களால் அபகரிக்கப்படும்போது மட்டும் தங்களை மண்ணின் மைந்தர்களாய் காட்டிக்கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.. தம்மை ‘மண்ணின் மைந்தர்கள்’ என சூளுரைத்துக் கொள்ளும் மனிதர்கள், மறுபக்கம் பிறந்த மண்ணை கொலை செய்யும் பாதகச்செயலை என்னவென்று சொல்வது? இயற்கையோடு சேர்ந்த வாழ்வுமுறையிலிருந்து மனிதன் விலகிப்போன காரணம்தான் பருவம் மாறி பொழியும் மழை, அதிக உயிர்களை பழிவாங்கும் ஆழிப்பேரலை, பூமி வெப்பமடைதல், வீரியம் பெறும் நோய்க்கிருமிகள் என பல்வேறு எதிர்மறை நிகழ்வின் பிடியில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும், மண் இன்னும் இயற்கையாய் விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் யார் காரணமாக இருக்கமுடியும்?

காலமெல்லாம் மண்ணைக் காப்பதே தன் பிறவிக்கடமை எனும் அறவழிக் கொள்கையில் வாழும் மண்புழுக்களே, இன்னும் மண்ணில் உயிர்சத்து இருப்பதற்கு முக்கிய காரணமாகும். இவைகளே உண்மையான மண்ணின் மைந்தர்கள். சுமார் 120 மில்லியன் வருடங்களுக்கு மேலாக வாழும் மண்புழுக்கள், இப்பூவுலகின் பூர்வகுடிகளாகும். மண்ணின் பௌதீகம் மற்றும இரசாயன தன்மைகளை நிர்ணயிக்கும் நிர்வாகிகள். உலக சுற்றுப்புறச் சூழ்நிலை அமைப்பாளர்கள்.

மண்புழுக்கள் “பூமியின் குடல்கள்” என்பது விஞ்ஞானி அரிஸ்டாட்டிலின் புகழாரம். நோய்களை பரப்பும் நுண்ணுயிர்களின் அளவை மண்ணில் கட்டுக்குள் வைத்திருக்கும் ழுழுநேரக் கண்காணிப்பாளர்கள். சிலருக்கு அருவருப்பூட்டும் தன்மையை வெளிப்புறத்தில் கொண்டிருந்தாலும், பல அரிய தன்மைகளை தனக்குள் உள்ளடக்கிக் கொண்டவைகளாகும். இவைகளின் பிரவேசம் மிக வறண்ட மற்றும் குளிரான பகுதிகளைத்தவிர, பூமி ழுழுவதிலும் பரவலாக காணப்படுகின்றது. உருவமைப்பு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் மட்டுமே வேறுபாடுகளை கொண்ட மண்புழுக்கள், 3000-க்கும் மேற்பட்ட வகையறாக்களை சார்ந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 384 வகைகள் உள்ளன. முதுகெலும்பற்ற வகையை சார்ந்தவைகள் என்றாலும், மண்ணின் முதுகெலும்பாய் இருக்கின்றன. கற்றறிந்த வல்லுநர்கள் போல் நிலத்தை செப்பனிடும் முறைகள் தெரிந்தவைகளாகும். ஆகவே, இவைகள் “மண் பொறியாளர்கள் என அழைக்கப்படுகின்றன. கண்ணிருந்தும் குருடர்களாய் வாழும் மனிதர்களுக்கிடையில், கண்ணில்லாமல் சரியாக தன் கடமையை செய்யும் பொறுப்புணர்வை பிறவியிலே கொண்டவைகளாகும். கடவுளைச் சித்தரிப்பதுபோல, உடல் ழுழுவதும் உணர்வுக்கண்களை கொண்டவர்கள்.

ஆண் மற்றும் பெண் உறுப்புகளை ஒருசேரக் கொண்ட உடலமைப்பை மண்புழுக்கள் கொண்டிருக்கின்றன. ஆனாலும், ஒருபோதும் தனக்குத்தானே கலவி கொள்ளும் அநாகரிகத்தை செய்வதில்லை. ஒருமித்த இசைவின் பெயரில் மட்டுமே இதர புழுக்களோடு நிலத்தின் மேற்பரப்பில் கலவி கொள்கின்றன. இங்ஙனம் கருவுற்ற புழுக்கள் இடும் முட்டைகள் புழுக்களாய் உருமாறும் வரை தனது தலைப்பகுதிக்கடியில் தாங்கி, தாயன்பை வெளிக்காட்டுகின்றன.

ஒரு புழுவை இரண்டாக துண்டித்தால், இரு புழுக்களாய் மாறி உயிர் வாழும் என்ற வழக்குச்சொல் மனிதர்களிடம் உண்டு. இது உண்மையல்ல. மண்புழுக்களை வெட்டும்போது, அவற்றின் ஒருபகுதி உயிர் வாழ வாய்ப்பிருந்தாலும், பெரும்பாலும் இரண்டு பகுதிகளுமே உயிரிழந்துவிடும். தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு, யாரையும் தாக்கத் துணியாத அகிம்சாமூர்த்திகள். மற்ற ஊர்வன வகை உயரினங்களைப் போல, தனக்குள் துளியளவு கூட விஷத்தை வைத்துக்கொள்ளாத சாதுக்களாகும். சைவ விரும்பிகளான மண்புழுக்கள் தங்களின் செரிமான நொதிகளால் தாவரக்கழிவுகளை மட்கச்செய்து, பின் செரிமானக்கழிவுகளாய் மண்ணில் வெளியிடுகின்றன. இவை உரமாக மண்ணின் வளத்தைக் காப்பதால் “உழவர்களின் நண்பன் என மனிதனால் கொண்டாடப்படுகின்றன. மண்புழு உரங்களைப் பயன்படுத்தும்போது, மண்ணில் காற்று மற்றும் நீரின் நிலைப்புத்தன்மையை அதிகரித்து, தாவரங்கள் வாழ்வதற்கு தகுதியுள்ளவையாக மாற்றுகின்றன. பொதுவாக மண் விவசாயத்திற்கு ஏற்றது என்பதை ஒரு நிலத்தில் வாழும் மண்புழுக்களின் அளவைக் கொண்டு தீர்மானிக்கலாம். இத்தகைய பெருமைகளை தன்னுள் வைத்திருக்கும் மண்புழுக்கள் ‘மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல, இவைகள் கண்ணுக்கு தெரியும் கடவுள்கள். ஆகவே, மண்ணின் மாண்பையும், மண்புழுவையும் இரு கண்களென்று காக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.